Categories
தற்கால நிகழ்வுகள்

ஹாலிவுட் நகரை சூழ்ந்த பேரழிவு: கட்டுக்கடங்காத காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயால் 2 லட்சத்திற்கும் மேலானோர் தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

கடந்த நான்கு நாட்களாகப் பரவி வரும் தீயினால் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை உயரலாம் என்றும், இழப்பிற்கான சரியான கணக்கீடு செய்ய பல நாட்களாகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

மே 2024 முதல் இந்த பகுதியில் மழை இல்லாத காரணத்தாலும், வரலாறு காணாத 80 மைல் வேக காற்றாலும் உருவாகிய இந்த காட்டுத்தீ நீண்ட போராட்டத்திற்குப் பிறகும் பரவி வருவது கவலைக்கிடமளிக்கிறது. பொதுவாக இந்தப்பகுதியில் காணப்படும் வறட்சியின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறையும் தீயணைப்புப் படையினருக்குப் பெரும் சவாலாக அமைந்திருக்கிறது. 

ஒரு இடத்தில் மையம் கொள்ளாமல் காற்று வீச்சுக்கு ஏற்ப பல திசைகளில் தீ பரவி வருவதால் தீயணைப்புப் படையினர் நிலை திண்டாட்டமாக உள்ளது. களத்தில் போராடும் வீரர்களுடன் ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மூலமாக தண்ணீர் ஊற்றியும் தீயை காட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆங்கில திரைப்பட உருவாக்கத்திற்கு பெயர் போன ஹாலிவுட் அமைந்துள்ள இந்த நகரத்தில் செல்வத்திற்கு பஞ்சமில்லை. என்ன இருந்தும் இயற்கையின் சீற்றத்தில் இருந்து தப்ப முடியுமா? 

ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். 

மேலும் புகை மற்றும் காற்றில் பறக்கும் தீ பிளம்புகள் காற்றின் தரத்தை கணிசமாகக் குறைத்துள்ளது. மூச்சு திணறல் ஏற்படலாம் என்பதால் இந்த பகுதியில் வாழும் கோடி கணக்கான மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

தற்சமயம் ஆறு வெவ்வேறு இடங்களில் எரிந்து வரும் தீயை முற்றிலும் அணைக்க எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. 

சுற்றுசூழல் சீர்கேடு மற்றும் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளின் எண்ணிக்கையும், தீவிரமும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வருத்தத்துடன் நினைவுகள்

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.