தவெக – தமிழக வெற்றிக் கழகம்.

மிகப் பிரம்மாண்டமான மாநாடு நல்ல விதமாக நிகழ்ந்தது.
ஆங்காங்கே சிறு பெரு விபத்துகள் நிகழ்ந்ததை அறிந்தோம். வருத்தங்கள்.
மற்றபடி எந்தவித குறைபாடுகளும் பெரிதாகத் தோன்றவில்லை. சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாநாட்டுக் கூட்டத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகத் தகவல்.
இதெல்லாம் போகப் போக சரி செய்து கொள்ள வேண்டும்.
சரி. மாநாடு எப்படி இருந்தது என்பதை அலசலாம்.
கொடி
ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட தவெக வின் கொடி 100 அடி கம்பத்தில் கம்பீரமாக ஏற்றப்பட்டது.
மேலும் இன்று ஏற்றப்பட்ட அந்தக்கொடி இன்னும் 5 வருடத்திற்கு அங்கே கம்பீரமாகப் பறக்க வேண்டும் என்று மாநாடு நடந்த இடத்தின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்து விட்டார்களாம்.
சரி கதைக்கு வரலாம்
தன் தாயாரிடம் ஆசிர்வாதம் வாங்கி, மேடையில் ரசிகர்களின் நடுவே அமைக்கப்பட்டிருந்த நடைபாதையில் பயணித்து தொண்டர்களின் அன்பைப் பெற்று பேசத்துவங்கினார்.
சுமார் 45 நிமிட தெறி பேச்சு. ஒரு அரசியல்வாதி ஆகத் தகுதியான நல்ல பேச்சு.
கட்சியின் கொள்கைகளும் பிரமாதம். கம்பு சுற்றுகிறேன் பேர்வழி என்று பெரியாரின் கொள்கை வழியில் கடவுள் மறுப்பு என்று சாட்டையை சுழற்றாமல், பெரியாரின் பெண் விடுதலை சமூக சமுதாய சிந்தனைகளைப் பின்பற்றுவோம்.
ஆனால் அண்ணாவின் வழியில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதைப் பின்பற்றுவோம் என்று சாமர்த்தியமாகப் பேசியது, சாமி கும்படுபவர்களின் ஓட்டுகளைத் தகர்க்காமல் இருக்கும்.
இருமொழிக் கொள்கை, நீட் எதிர்ப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, போன்ற அதிரடி கொள்கைகளை அறிவித்த கையோடு கூட்டணி வருபவர்களை அரவணைத்து அதிகாரப் பகிர்வு அளிப்போம் என்று பெரிய அணுகுண்டையும் போட்டுள்ளார்.
திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள் என்று கூறி திராவிட மாடல் அபிமானிகள் பக்கம் ஒரு உருட்டு, தமிழ் தேசியம் பேசும் மக்கள் பக்கம் ஒரு உருட்டு என்று இருபுறமும் கோல் அடித்ததில் இவர் இன்றைய அரசியலுக்கு உகந்தவர் என்பதை நிரூபிக்கிறார்.

கொள்கை ரீதியாக எங்களுக்கு எதிரி மதவாத அரசியல் என்றும், அரசியல் ரீதியான எதிரி குடும்ப ஊழல் கட்சி என்றும் மத்திய மாநில ஆட்சியிலிருக்கும் இரு கட்சிகளையும் தனது எதிரியாக நியமித்திருக்கிறார். மேலும் திராவிட மாடல் என்று கூறி மக்களை ஏமாற்றுவதாக தைரியமான உரையும் ஆற்றினார்.
ஆங்காங்கே என் நெஞ்சில் குடியிருக்கும் என்று சொல்லியும், நண்பா நண்பி, மன்னிக்க தோழா தோழி என்று மாற்றி சொல்லி ரசிகர்களைக் குஷியில் ஆழ்த்தினார்.
கெட்ட பய சார், பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதுல என்ற ரஜினி வசனங்களையும், பாண்டிய மன்னனுக்காகவும், அண்ணல் அம்பேத்கருக்காகவும் மேற்கோள் காட்டி பேசினார்.
மொத்தத்தில் ஒரு தெளிவான அரசியல் கொள்கையோடு இப்போதைய இளைஞர்கள் மற்றும் மக்களைக் கவரும் விதமாக ஒரு மாபெரும் மாநாட்டை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டார்.
நேற்று காசுக்காக இல்லாமல் விஜய்காக வந்த அதே கூட்டம் வாக்குகளை அப்படியே செலுத்தினால், நிச்சயம் இவரது நோக்கம் நிறைவேறும்.
இல்லாவிட்டாலும் வரும் தேர்தலில் இவருடைய கட்சி மிகப்பெரிய்போட்டியாளராக மிளிரும், சில தொகுதிகளைக் கைப்பற்றும் என்பதில் ஐயமில்லை.
பார்க்கலாம். 2026 ல்.
அன்புடன் நினைவுகள்