Categories
சினிமா தற்கால நிகழ்வுகள் பாடல்

குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.

இதோ மீண்டும் துவங்கிவிட்டார் இசை அரசன் தமது இம்சையை. குட் பேட் அக்லி படத்தில் தனது பழைய பாடல்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதால் தனக்கு ஐந்து கோடி பணம் தர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது தேவையா என்று நாம் பேசினால் அதெப்படி தவறாகும் என்று ஒரு கூட்டம் கிளம்பி வரும்.

இப்போது இளையராஜாவின் இந்தச் செயல் தேவையில்லாத ஒன்று என்று பேசுபவர்கள் இளையராஜாவின் ரசிகர்கள் அல்ல என்றும், மேலும் அவர்களில் சிலருக்கு ஜாதிய கட்டமைப்புப் பின்புலமும் தீவிரமாக ஆராயப்பட்டு ஒரு மாதிரி சாயமும் பூசப்படுகிறது.

ஆனால் கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் இளையராஜாவின் இந்தச்செயல் தேவையற்றது என்பதே நமது வாதம்.

நானும் கூட இளையராஜாவின் பல பாடல்களுக்கு அடிமை தான். பயணத்தின் போது எனது பயணத்தை இனிமையாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது அவரது பாடல்கள் தான்.

ஆனால் அதற்காக ஒவ்வொரு முறையும் நான் பயணம் முடிந்த பிறகு இளையராஜா ஐயாவுக்கு நன்றி சொல்லி காசோலை அனுப்ப முடியாதல்லவா?

சரி பாடல்களைக் கேட்பதற்கு அவர் பணம் கேட்கவில்லை தான். ஆனால் அடுத்த உதாரணத்தைப் பொருத்திப் பார்த்தால் விளங்கும்.

அதாவது நான் பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிப் பயணத்தை முடித்து இறங்கும் போது, அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நான் பஸ் ஓட்டினதால தான் நீ இங்க பாதுகாப்பா வந்தனு என் சட்டைய பிடிச்சு காசு கேட்டா என் பதில் என்னவா இருக்கும்?

அதே மாதிரி தான் இப்ப இளையராசா செய்ற வேலை. படக்குழு அந்தப் பாடலின் உரிமம் உள்ளவர்களிடம் பணம் கொடுத்து அந்தப் பாடலை உபயோகிப்பதற்கான உரிமத்தைப் பெற்றாயிற்று. இனி இது சரியா?

இளையராஜா இசை அமைச்சு காசு வாங்கியாச்சு, இனி அவரு போயி அதத் திரும்ப கேட்கிறது நியாயமா? என்று கேட்டாலும் அதில் ஒரு உள்விவகாரம் இருக்கிறது. IP- Intellectual property.

சரி, இதில் இந்த விஷயமும் இருக்கிறது. இவர் படைப்பாளி. இவருக்கு இதில் அறிவுசார் சொத்துரிமை இருக்கிறது, சட்டப்படி இப்போது இவர் வழக்குத்தொடுப்பது சரி.

சட்டம் இருக்கிறது என்பதை இங்கே யாரும் மறுக்கவில்லை. சட்டம் இல்லாவிட்டால் இவர் இதுமாதிரியான வேலைகளைச் செய்ய முடியுமா?

நமது சிந்தனை, இவரது பாடல்கள் இன்னொரு படத்தில் வந்தால் என்ன ஆகப் போகிறது? இவரது புகழ் தானே அதிகரிக்கிறது? ஒரு படைப்பாளிக்குக் கைதட்டலும் பாராட்டுகளும் தானே முதல் பரிசு.
இவருக்கு 5 கோடி ரூ கொடுத்து விட்டால் பரவாயில்லையாம் பாடல்களை அவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாமாம். பணம் கொடுத்தால் சரியாகி விடுகிறதா?

சரி இந்த கேள்விக்கு இளையராஜாவின் முதுகெலும்புகள் பதில் சொல்லட்டும்.

பிரியாணி என்ற உணவு பாரசீகத்திலிருந்து இங்கு வந்தது. இப்போது பல உணவகங்களும் பல விதங்களில் தங்கள் விருப்பம் போல பிரியாணி வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறார்கள்.
இப்போது அந்த பிரியாணியைக் கண்டுபிடித்த பாரசீகத்திற்கு எல்லா உணவகத்திலிருந்தும் பங்களிக்க வேண்டும் என்றால் அது நியாயமா?

உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகளை, தடுப்பூசி மருந்துகளை, உயிர் காக்கும் மருந்துகளை எத்தனையோ படைப்பாளிகள் பொதுமக்களின் நலன் கருதி, தான் வாழ்ந்த சமூகத்திற்காக என்று தனது படைப்பை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.

அப்படியிருக்க இளையராஜா, தான் வளர்ந்த, புகழ் ஈட்டிய சம்பாதித்த இந்த சினிமாவுக்காக, இதைச்சார்ந்த பிற சினிமா மக்களுக்காக தன்னுடைய பாடலை படத்தில் ஒரு சில நிமிடங்கள் உபயோகித்தால் என்ன என்று விடுவதற்கு மனமில்லை.

சரி எது எப்படியோ, இதில் நமக்கு ஏதும் லாபமுமில்லை, நட்டமுமில்லை.

இளையராஜா எனும் ஆலமரம் தனது நிழலில் இளைப்பாறும் மனிதர்கள், கூடு கட்டும் குருவிகள் என அனைத்துக்கும் காசு வசூல் செய்ய நினைப்பது அந்த ஆலமரத்திற்கே அவமானம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.