கோடை விடுமுறை.
வரப்போகுது கோடை விடுமுறை.
துவங்கிவிட்டது பெற்றோர்களுக்குத் தலைவலி.
காலையில் எழுப்பி, குளிப்பாட்டி, சோறு ஊட்டி, பள்ளிக்கூடம் அனுப்புவதைக் காட்டிலும் கடினமான காரியம் கோடை விடுமுறையில் இதுகளைச் சமாளிப்பது.
என்ன செய்யலாம்?
பேசாம 2 மாசம் தாத்தா, பாட்டிக்கிட்ட அனுப்பிவிடலாமா?
நோ நோ மம்மி பாவம்.
இல்ல இவனுங்கள அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பிரலாமா?
அவ கெடந்து அனுபவிக்கட்டும்.
இல்ல இல்ல, நம்ம இதுகள பத்து நாளைக்கு அனுப்பினா, அவ அந்த ரெண்டு பிசாசுகளையும் 20 நாளைக்கு இங்க அனுப்பிருவா. மொத்தமா 4 ஐயும் சமாளிக்கறதுக்குள்ள நமக்கு உசுரு போயிரும்.
இது சரிவராது.
எதையாவது யோசிச்சாகனும்.
இந்த மாதிரி தீவிரமா தாய்மார்கள் கணக்குப் போடத் துவங்கிவிட்ட காலம்.
சரி என்னதான் செய்யலாம் இவர்களை கட்டி அடக்கி ஆள்வதற்கு என்று முடிவு செய்து, ஸ்விம்மிங் க்ளாஸ், ஹேண்ட் ரைட்டிங் க்ளாஸ், செல்ப் டெவலப்மென்ட் க்ளாஸ் என்று எதையாவது யோசித்து குழந்தைகளை ஒரு வழி செய்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறீர்களா?
நீச்சல் போன்ற நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வது தவறில்லை.
ஆனால் அது குழந்தைகள் விருப்பப்பட்டு ஏற்றுக் கொண்டதாக இருக்க வேண்டும்.
எதையும் வலுக்கட்டாயமாகத் திணிப்பது சரி அல்ல.
சரி அப்படி என்றால் விடுமுறை நாட்களில் குழந்தைகளை என்ன செய்வது?
கண்டிப்பாக விளையாட அனுமதியுங்கள். அதுவும் வீட்டுக்குள் அடங்கி, டிவியிலோ, கம்ப்யூட்டரிலோ, வீடியோ கேமிலோ விளையாடும் விளையாட்டு அல்ல.
உடல் ரீதியாக ஓடி ஆடி விளையாடும் விளையாட்டு. வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும் உச்சிப் பகல் பொழுதைத் தவிர்த்து மீதி நேரங்களில் வெளியில் விளையாட விட வேண்டும்.
அதுவும், காலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய ஒளிபட விளையாட அனுமதிப்பது உடலுக்கும் நல்லது.
இதைத் தவிர்த்து புத்தகங்கள் வாசிப்பது, நூலகங்களுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்வது, தினசரி நாளிதழ்களை வாசிக்கச் செய்வது இது மாதிரியான நல்ல விஷயங்களை அவர்களுக்குப் பழக்கலாம்.
நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் என்பதல்ல, வாசிக்கும் பழக்கம் என்பதே அறவே மறந்து விட்டது இந்தத் தலைமுறைக்கு.
இந்த கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றலாம்.
எங்காவது வகுப்புக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டிவிட்டு குழந்தைகளை வேண்டா வெறுப்பாக அதில் திணிப்பதை விடுத்து நாமே அவர்களின் அருகிலிருந்து ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுத் தரலாம்.
ஐயையோ கோடை விடுமுறை அல்ல. ஹய்யா என்று மகிழ்ச்சியுடன் எதிர் கொள்வோம்.
இதையெல்லாம் தாண்டி வாய்ப்பும் பண வசதியும் இருப்பவர்கள் ஏதாவது சுற்றுலா செல்லலாம்.
பயணம் என்பதை விட மனிதனைப் பக்குவப்படுத்துவது ஏதாவது உண்டா?
தொடர்ந்து பேசலாம்.
கோடையைக் குளுமையாக்குவதற்கான சில யோசனைகளைப் பற்றி.
அன்புடன் நினைவுகள்.