விஜய் சேதுபதி படத்தில் நடித்திருக்கிறார் என்று சொன்னால், கூட்டம் கூட்டமாக சந்தோஷமாக மக்கள் வருகிறார்கள். படமே விஜய் சேதுபதி படம் என்றால் ஆளை விடுறா சாமி என்று கிளாம்பிவிடுவதாக சமீபத்தில் ஒரு கேலிப் புனைவுப் படம் அதிகம் பகிரப்பட்டது.
ஆமாம், வரிசையாக அவர் நடித்த பல படங்கள் மக்களின் பொறுமையை சோதிக்கும் ரகமாகத்தான் இருந்தது.
அதிலும் DSP படமெல்லாம் மரண அருவை என்று மக்கள் வெறுத்தது.
ஆனால் அவரது 50 ஆவது படமான மஹாராஜா முதல் தரவரிசைப் படங்களில் என்றென்றும் கொண்டாடும் விதமாக அமைந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா முழுதும் பாராட்டுக்களைப் பெற்றது.
அதற்கடுத்து, அவர் கதாநாயகனாக நடித்து இந்த வாரம் வெளிவந்திருக்கும் (ACE) ஏஸ் திரைப்படம் சற்று நெளியச்செய்தாலும், சலிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதால் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
லாஜிக் பார்க்காமல் புதுக்கதை எதிர்பார்க்காமல், ஒரு மசாலாப் படமாக விஜய் சேதுபதி, யோகி பாபு நகைச்சுவைகளை ரசித்து மகிழ்ந்தால் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வோடு வெளியே வரலாம்.
படத்தின் கதை ஒன்றும் மெனக்கெட்டு தயார் செய்த கதையல்ல.
கதையின் நாயகன் ஒரு பின்புலக் குற்றவாளி, நாயகியைச் சந்திக்கிறான், காதலில் விழுகிறான். அவளுக்குப் பணப் பிரச்சினை. தன்னுடைய முதலாளிப் பெண்ணுக்கும் பணப்பிரச்சினை, கூட இருக்கும் நண்பனுக்கும் பணம் தேவை.
சூதாடுகிறான். ஏமாற்றப்படுகிறான். பிறகு சில திட்டங்கள் செய்து, கொள்ளையடிக்கிறான்.
அதன்பிறகு காவல்துறை மற்றும் தன்னை ஏமாற்றிய சூதாட்ட கும்பலின் துரத்தலில் இருந்து எப்படித் தப்பித்தான் என்ற பார்த்து சலித்த கதைதான்.
படம் முழுக்க இது எங்கோ ஒரு படத்தில் நாம் பார்த்த காட்சி என்ற உணர்வு.
ஆனால் அதையெல்லாம் விஜய் சேதுபதி, யோகிபாபு நகைச்சுவையும்; புதுமுகக் கதாநாயகியும், கதை நிகழும் பகுதியும் கொஞ்சம் சரிக்கட்டி விடுகின்றன.
விடுமுறை நாட்கள் என்பதால், விஜய்சேதுபதியின் மீதுள்ள ஆர்வத்தில் திரையரங்குகள் நிறைந்த காட்சிகளாகத் தான் படம் ஓடுகிறது.
முந்தைய படம் போல முழுமனத்திருப்தி இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு நல்ல மசாலாப் படம் பார்த்த அனுபவம் உண்டு.
விஜய் சேதுபதியின் தனித்துவமான நடிப்போ, அல்லது அவரது சேட்டையான நடிப்போ வெளிப்படும் அளவிற்குக் காட்சிகள் அமையாதது பெரிய குறை.
முதல் சண்டைக்காட்சியின் துவக்கம் தவிர்த்து, வேறெங்கும் அது வெளிப்படவில்லை.
(அவரு சாரி கேட்டுக்குவாரு, நாம போகலாம் என்று நக்கலாகச் சொல்வார்)
அவரது அந்த பாணி வெளிப்படும் விதமாக ஒன்றிரண்டு காட்சிகள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பு.
படம்முழுக்க யோகிபாபு ஏமாற்றவில்லை. ஒற்றை ஆளாகத் தன் பணியை சிறப்பித்து விட்டார்.
சொல்லப்போனால் படத்தின் உயிரோட்டமே நகைச்சுவை தான்.
படக்குழு யோகிபாபுவுக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல வேண்டும்.
கதாநாயகித் தேர்வும் நல்ல விதமாக அமைந்திருக்கிறது.
ஒரு அமைதியான, அழபான நல்ல புதுமுகம், ஒரு புதுரகமான படம் பார்த்த உணர்வைத் தருகிறது.
வில்லன்கள் முகம் எல்லாம் பழகிப் போனவை தான்.
சூதாட்ட கும்பல் தலைவனுக்குத் தரப்படும் பில்டப்புகள் நாம் பார்த்து பார்த்து பார்த்து சலித்தது தான். அதே பில்டப் வசனத்தை வைத்து வில்லன் ஒரு முறை நகைச்சுவை செய்வது மனதில் நிற்கும் காட்சி.
மற்றவையெல்லாம் நம் ரத்தத்தில் ஊறிப்போன சினிமா க்ரிஞ்ச் மசாலாவை அரைத்துத் தயாரித்த காட்சிகள் தான்.
இப்படி அப்படியுமாக உருட்டி ஒரு உருப்படி ரகத்தில் நல்லாத்தான் இருக்கு என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கி விட்டார்கள்.
டூரிஸ்ட் பேமிலி படம் பார்த்து விட்டு வெளியே வந்து ரசிகர்கள் சொன்ன நல்ல படம் என்ற வார்த்தைகளுக்கும், இந்தப்படம் முடித்து வெளியே வந்து நல்லாத்தான் இருக்கு என்று சொல்லும் வார்த்தைகளுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது.
அது மலை உச்சி என்றால் இது பத்தாவது மாடி.
அது கஷ்டப்பட்டு அடைந்த உயரம்.
இது மின்தூக்கியில் எளிமையாக அடைந்த உயரம்.
எனினும் உயரம் தான். பார்க்கலாம் மோசமில்லை.