கடைத்தெருவிற்கு சென்று வண்டிக்கடையில் அவனுக்கு பிடித்த பாதுஷாவை வாங்கி கொடுத்து, முருகன் கோவிலில் சென்று அவன் பெயருக்கு ஒரு அர்ச்சனையும் செய்து விட்டு வீடு திரும்பினோம்.
மூன்று வேளைக்கு மூன்று விதமான உணவுப்பழக்கம் எல்லாம் அப்போது இல்லை.
மதியம் செய்யும் சாப்பாடு தான் இரவுக்கும்.
மதியம் காய்கறியுடன் சாப்பாடு. இரவு வேளைகளில் சேவு, மிக்சர், பக்கோடா போன்ற பண்டங்களை சேர்த்து சாப்பாடு.
இன்றைய காலகட்டம் போல, அப்போது சுகர் பெரும்பாலானோர்க்கு இல்லை. அதனால் இரவு சாப்பாடு சாப்பிட தடை இல்லை.
ஆனால் என்னுடைய சிறு வயது போல, சோறு, இட்லியை அதிசயமாகப் பார்க்கும் நிலையும் இல்லை.
இவர்கள் வசதியாகவே வாழ்கிறார்கள்.
அன்று இரவு மட்டும் அவனுக்காக இட்லி தயார் செய்து சாப்பிட வைத்து, அறிவுரைகள் கூறி பள்ளிக்கூடம் போக பேச்சுவார்த்தை நடந்தது.
பள்ளிக்கூடம் போயி நல்லா படிச்சாதான் பெரிய ஆளா வரலாம் அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்கும் போதே தூங்கிட்டான்.
மறுநாள் முதல் நானே சைக்கிளில் சென்று பள்ளியில் இறக்கி விட்டு, மாலை நேரம் முடிந்தால் கூட்டியும் வருவேன். என்னால் முடியாத சூழலில் அவன் அம்மா நடந்து போயி கூட்டிக்கொண்டு வருவாள்.
மாலை நேரங்களில் நான் டேப் ரிக்கார்டில் ஏதாவது பாட்டு போட்டு சாய்ந்து படுத்துக்கொள்ள, அவன் வந்து என் வயிற்றில் படுத்துக்கொள்வான்.
இப்போது போல, அப்போதெல்லாம் 24 மணி நேரமும் டிவியில் படம் பாட்டு எல்லாம் கிடையாது.
வெறும் தூர்தர்ஷன் மட்டும் தான்.
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், இரவு படம், ஞாயிற்றுக்கிழமை மாலை படம். இவ்வளவு தான் டிவிக்கு வேலை.
எப்போதாவது சுழற்சி முறையில் சனிக்கிழமை தமிழ் படம் வரலாம். வந்தால் அந்த இன்பம் தனி தான்.
தெருவில் எங்கள் வீட்டில் தான் அனைத்து குழந்தைகளும் ஒளியும் ஒலியும் பார்க்க கூடுவார்கள்.
வீட்டில் விளக்குகளை அணைத்து விட்டு, குழந்தைகளை வரிசைபடுத்தி அமர வைத்து விட்டு தயாராக இருப்போம். ஒளியும் ஒலியும் வந்த உடன் காச்சு மூச்சுனு சத்தம் வரும், கைதட்டல்கள் வரும்.
அந்த சந்தோஷம் எல்லாம் இப்போது என்னால் உணர முடியவில்லை.
ஒளியும் ஒலியும் முடிந்த உடன், வேக வேகமாக இரவு உணவை முடித்து விட்டு இரவு படத்துக்கு தயாராவோம்.
பெரும்பாலும் காந்திமதியும், அவனும் பாதி படத்தில் உறங்கி விடுவார்கள். மறுநாள் காலையில் இருவருக்கும் தவறாமல் வாக்குவாதம் நடக்கும்.
நான்தான் முழுப்படம் பாத்தேன், நீ தூங்கிட்ட என்று.
இப்படி மாலை நேரங்கள் என்பது பெரிய இன்பம் தான்.
வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில், டேப் ரிக்கார்டரே கதி. அதுவும் சலித்தால், வீட்டு வாசலில் சென்று குழந்தைகள் தெருவில் விளையாடுவதை பார்த்து ரசித்துக் கொண்டு பொழுது கழிப்போம்.
அக்கம் பக்கத்து வீட்டினருடன் பேச்சு, மாலை நேரங்களில் தெருவில் வரும் வியாபாரம் என பொழுதுபோக்கு அம்சங்கள். இன்றைய காலகட்டத்திலிருந்து நிறைய மாறுதல்.
சுக்காப்பி, அல்லது பருத்திப்பால் தவறாமல் மாலை வேளைகளில் தெருக்களில் வந்து விடும். அது போல பஞ்சு மிட்டாய், ஜவ்வு மிட்டாய் போன்றவை சில நாட்களில்.
சுக்காப்பி என்றாலே காந்திமதியும், இவனும் ஓடி ஒளிந்து விடுவார்கள். அவர்களை இழுத்துப்பிடித்து சுக்காப்பியை குடிக்க வைப்பதற்குள் அய்யோ சாமி என்று ஆகி விடும்.
பெரும்பாலான மாலைப்பொழுதுகளை பிள்ளைகளுடன் கழிக்க இயலாது. காரணம் நான் கால்நடை ஆய்வாளர் என்பதால் மருத்துமனைக்கு வர முடியாத சில அவசர காரியங்களுக்கு என்னை அழைப்பார்கள். உதாரணமாக மாடு கன்று ஈனுதல், ஆடு மாடுகளுக்கு காய்ச்சலில் நடக்க முடியாத சூழலில் என்னை அழைப்பார்கள்.
மற்ற ஆய்வாளர்கள் போல அல்லாமல் நான் அழைத்த இடங்களுக்கு தவறாமல் செல்வேன். அரசாங்க வருமானம் தான் என்றாலும், வீடு கடனில் கட்டியது, மகளுக்கு நகை சேர்த்து நல்ல வரன் அமைக்க வேண்டும், மகனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணங்கள் என்னுள்ளே ஓட ஆரம்பித்து விட்டது.
அரசாங்க வேலை என்றவுடன் சொகுசு வாழ்க்கை என்ற எண்ணம் வேண்டாம். 1999 ல் தான் முதன் முறையாக இருசக்கர வாகனம் என்பதே என் வாழ்வில் வந்தது.
நாங்கள் எட்டயபுரத்துக்கு குடிவந்த 1992 முதல் கிட்டதட்ட ஏழு வருடம் தினமும் தவறாமல் ஒரு 50 கிமீ சைக்கிள் மிதித்து விடுவேன். நான் வேலைக்கு சேர்ந்த 70 களில் இருந்து திரிநெல்வேலியில் வேலை பார்த்த ஒரு ஐந்து முதல் ஆறு வருடம் தான், அலுவலகம் முடிந்தால் வீடு, என்று இருந்தேன். அதன்பின்னர் வெளியே அவசர அழைப்புகளுக்கும் சென்று மருத்துவம் பார்க்க துவங்கி விட்டேன்.
பக்கத்து கிராமங்களில் இருந்து வந்து அழைத்தால் தவிர்க்க மாட்டேன். பத்து முதல் 12 கிமீ வரையிலான பக்கத்து கிராமங்களுக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது.
இதில் பல நாட்கள் மருத்துவம் முடித்து விட்டு இரவு வீடு திரும்பும் சூழல் வரும். பல சுடுகாடுகளை தாண்டி வரவேண்டிய கட்டாயம்.
எத்தனை கிமீ என்றாலும் சலிக்கவில்லை.
என் பிள்ளைகளை வசதியாக வளர்க்க வேண்டும்.
நான் பட்ட கஷ்டங்களை என் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்ற எண்ணம் மட்டுமே!
என் மனைவியும் கூட அடிக்கடி கண்டிப்பாள்.
இது வேண்டாம், இரவு வேளைகளில் வெளியே மருத்துவம் பார்க்க செல்லவேண்டாம் என்று.
என் பிள்ளைகளுடன் மாலைப்பொழுதை கழிக்காமல் நான் அவ்வளவு கஷ்டப்பட காரணம் அவர்களின் நல் எதிர்காலமே!
மாலைப்பொழுதின் இன்பங்களில் மழைக்கால மாலைப்பொழுதுகள் என்பவை நீங்கா நினைவுகளை உருவாக்கும்.
மழைக்கால மாலைப்பொழுதுகளில் அழைப்புகள் வருவது குறைவு. அதிலும் சில அழைப்புகளை நானே மறுநாள் விடியற்காலைக்கு ஒத்தி வைத்து விடுவேன்.
மழைக்கால மாலைப்பொழுதில் குழந்தைகளும் விளையாட வெளியில் செல்ல முடியாமல் வீட்டினுள் முடங்கி கிடக்கும் என்பதால் ஏதாவது தின்பண்டம் செய்யச் சொல்லி அனைவரும் காபி, பண்டம் என நொறுக்கி விட்டு வீட்டில் அமர்ந்து ஏதாவது பேசிக் கொண்டிருப்போம்.
எங்கள் வீட்டில் டபுள் ஆண்டனா இருந்ததால், அதுவும் அதிக உயரத்தில் இருந்ததால் டபுள் ஆண்டனாவை அட்ஜஸ்ட் செய்தால், பறவை படம் போட்ட சிலோன் டிவி எப்போதாவது சிக்னல் கிடைக்கும். அப்படி கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி இரட்டிப்பு தான்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சாப்பாடு. அதாவது அப்போதைய கேண்டில் லைட் டின்னர்.
பிறகு மின்சாரம் வரும் வரை வீட்டு வாசலில் அரட்டை.
மின்சாரம் வந்தவுடன் தெருவே அல்லோகலப்படும்.
தெருவின் ஒட்டுமொத்த குழந்தைகளும் கத்தி கூப்பாடு போடும். இத்தனை இனிய மாலைப்பொழுதுகள் இந்த கால கட்டத்தில் அனுபவிக்க முடியவில்லை.
மகன் படிப்பில் சுட்டி. மகளோ அப்படி இல்லை. ஓரளவுக்கு தான் படிப்பாள்.
மகன் என்னிடம் ஒட்டிக்கொண்டதைப்போல மகள் ஒட்டவில்லை என்பது இதனால் கூட இன்னும் அதிகமானது.
அப்பா நான் பர்ஸ்ட் ரேங்க் என்று இவன் பெருமையாக ரேங்க் கார்டை நீட்டும் தருணம், அவள் கொஞ்சம் வெட்கத்துடனே நீட்டுவாள்.
ஐந்து முதல் பத்து ரேங்க் வரை வாங்கினால் கூட தம்பி செய்யும் கேலி அவளுக்கு கோபம் தான்.
பர்ஸ்ட் ரேங்க் வாங்கியதால் எனக்கு கருப்பட்டி மிட்டாய் வேணும், பாதுஷா வேணும்னு ஏதாவது இவன் உரிமையாக கேட்க, அவன் அக்காள் ஊமையாகத்தான் நிற்பாள். பல நாட்கள் அவளுக்கு கருப்பட்டி மிட்டாயும், பாதுஷாவும் தம்பி வாங்கிய பர்ஸ்ட் ரேங்க்கால் தான் கிடைத்தது.
அவளாக வாயைத்திறந்து எனக்கு இது வேண்டும் , அது வேண்டும் என்று கேட்டதில்லை.
பையன் படிப்பில் சுட்டி, பர்ஸ்ட் ரேங்க் தான் எப்போதுமே. அதுபோல, ஊரில் வந்து செட்டில் ஆகி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் வாய்ப்பும், அவனுக்கு தான் அமைந்தது.
திருநெல்வேலியிலிருந்து எட்டயபுரம் மாறி வரும் முன்னர் பசுவந்தனை என்ற கிராமத்தில் சில வருடங்களை கழிக்க நேர்ந்ததால் காந்திமதிக்கு அரசாங்க பள்ளிகூடம் தான் வாய்த்தது.
எட்டயபுரம் வந்த பின் அவளை இங்கிருக்கும் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சேர்ப்பதாயிற்று.
அவள் பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து 2 கிமீ என்றாலும் மற்ற பிள்ளைகளுடன் ஆராவாரம் இல்லாமல் நடந்தே செல்வாள்.
சார் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு அதிகபட்சம் பத்து நிமிடத்தில் நடந்தே சென்று விடலாம் என்றால் கூட அவருக்கு ஒரு டிரைவர் தேவைப்பட்டது. அதாவது நான்தான் அவரை சைக்கிளில் கொண்டு விடுவேன்.
காந்திமதி பத்தாம் வகுப்பில் 385 மதிப்பெண்கள் எடுத்தாள். அன்றைய காலகட்டத்தில் அது நல்ல மநிப்பெண்தான். அதன்பின்னர் எங்கள் குடும்ப பள்ளியான இராஜா மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்த்தேன்.
காத்திமதி பனிரெண்டாம் வகுப்பை முடித்து விட்டாள். காலம் மிக வேகமாக உருண்டோடுகிறது.
மழலைச்சொல்லில் A B C D என்று கூறிய மகள் இன்று பனிரெண்டாம் வகுப்பை முடித்து விட்டாள்.
மகளை கைக்குள்ளேயே வைத்து வளர்த்து விட்டதால் கல்லூரிக்கு வெகுதூரம் அனுப்பவோ விடுதியில் சேர்க்கவோ மனம் ஒப்பவில்லை.
ஆனாலும் பனிரெண்டாம் வகுப்பில் அவள் எடுத்த 729 மதிப்பெண்களை வைத்து பக்கத்து ஊரான கோவில்பட்டியில் இருக்கும் கல்லூரிகளில் இடம் பிடிக்க முடியவில்லை. உறவுக்கார பெண் ஒருத்தி பயிலும் சாரதா மகளிர் கல்லூரியை சிபாரிசு செய்தார்கள் உறவினர்கள். அந்த கல்லூரி திருநெல்வேலியில் உள்ளது. கண்டிப்பாக விடுதியில் தான் தங்க வைக்க வேண்டும்.
மனம் ஒப்பவில்லை என்றாலும், வேறு வழி இல்லை. மகள் ஒரு டிகிரி படிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தையும், நமது படிப்பு 12 ஆம் வகுப்போடு நின்று விடுமோ என்ற எனது மகளின் அச்சத்தையும் போக்க வழியில்லை.
சாரதா கல்லூரியில் மகளை விடுதியில் சேர்த்தாயிற்று.
மகளை விடுதியில் சேர்க்கும் போது குடும்பத்தில் அனைவருக்கும் பெரிய வருத்தம் தான். அக்காளிடம் சண்டை போடாமல் இனி இந்த தம்பி என்ன செய்யப்போகிறானோ? அவளை குறை சொல்லாமல் இவன் அம்மா என்ன செய்யப்போகிறாளோ?
பல வருடங்களாக நான்கு பேருக்கு சமைத்த கை இனி எப்படி மூன்றாக மாறப்போகிறதோ?
காந்திமதியின் ஒளிநிறைந்த அந்த முகம் பாராமல் எனக்கு எப்படி பொழுது புலருமோ?
இனியாச்சும் ஒழுங்கா படி என்று எகத்தாளமாக அக்காவுக்கு அறிவுரை கூறினார் வீட்டின் பெரிய மனிதர்.
அக்காளை விடுதியில் விட்டுவிட்டு, திருநெல்வேலி ஜங்ஷனில் வந்து சாப்பிட்டு விட்டு , ஐஸ்கிரீம் வாங்கி நின்று, வீடியோ கேம் வாங்கி வீட்டிற்கு கிளம்பினோம்.
இவனுக்கு சண்டை போட புதிய ஆள் கிடைத்தாயிற்று. அதுதான் அந்த வீடியோகேம்.
அந்த விடுதி ரொம்ப கண்டிப்பு மிக்க விடுதி.
மாதம் இரண்டாவது சனி ஞாயிறு மட்டும் வீட்டிற்கு வரலாம்.
நாலாவது ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் அங்கே சென்று பிள்ளைகளை பார்க்கலாம்.
மாதாமாதம் அவள் வரும் அந்த இரண்டு நாட்கள் எங்கள் வீட்டில் திரும்ப பழைய மகிழ்ச்சி, தின்பண்ட சண்டைகள் வரும்.
நாலாவது ஞாயிற்றுக்கிழமைகளில் சக்திமான், கேப்டன் வியூம் பார்க்கும் ஆவலில் இவன் விடுதிக்கு வரமாட்டான். நானும் அவன் அம்மாவும் போய் வருவோம்.
ஒரு நாள் அவள் வீட்டிற்கு வந்திருந்த போது, அவளிடம் சென்று , “உனக்கு ஹாஸ்டல்ல இருக்க பிடிக்கலியா?” வீட்டுல இருந்துடுறியா என அவள் தம்பி கேட்க, அவளும் சரி என்று சொல்லியிருப்பாள் போல.
உடனே ஓடி வந்து அதை என்னிடம் அவன் கிண்டலாக சொல்ல, அவளது பிரிவு வேதனையை என்னால் உணர முடிந்தது.
ஆனால் என்ன செய்ய மூன்று வருடம் தானே எப்படியாவது பல்லைக்கடித்துக்கொண்டு ஓட்டு என்று சொல்லி ஆறுதல் அளித்தேன்.
அவள் எதையுமே வாய்விட்டு கேட்டதில்லையே!
சரி என்பதையும் தலையாட்டி கூறிவிட்டு சாப்பிடுவதை தொடர்ந்தாள்.
மூன்று வருடங்கள் வேகமாக ஓடியதைப்போல தான் இருந்தது. ஆனால் அவளுக்கு அது எந்தளவு வேதனையாக இருந்திருக்குமோ?
இவனும் ஐந்தாம் வகுப்பிற்கு பின்னர் கோவில்பட்டியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தான். 3 வருடங்கள் படிப்பை அங்கே கடந்தவன், ஊரில் உள்ள நண்பர்களோடு சேர்ந்து இராஜா மேல்நிலைப்பள்ளி யில் படிக்க வேண்டும் என்ற ஆவலில் என்னிடம் வந்து எனக்கு மெட்ரிகுலேஷன் வேண்டாம், தமிழ் மீடியம் அல்லது ஸ்டேட் போர்டு ஆங்கில வழி கற்பதாக கூறினான். அங்கிங்கு அலைந்து எங்கும் வாய்ப்புகள் இல்லததால், இவனையும் குடும்ப பள்ளியில் சேர்ப்பதாக முடிவு செய்தேன்.
எட்டாம் வகுப்பு வரை மெட்ரிகுலேஷன் படித்த பையனை ஒன்பதாம் வகுப்பில் தமிழ் வழி கல்வியில் சேர்க்க வந்த என்னை பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஒரு பைத்தியக்காரன் போல பார்த்தார்கள்.
ஆனால் என் மகனின் ஆசை, அதை நிறைவேற்றுவது என் கடமை. என் உறவினர்களும் கூட வசை பாடினார்கள் தான்.
ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது.
அவனை சேர்க்கும் முன் அவனிடம் ஒரு வார்த்தை கேட்டேன்
“நீ ஒழுங்கா படிக்காட்டி, அப்பாவ எல்லாரும் பைத்தியக்காரன்னு திட்டுவாங்கடா?
படிப்பியா? தமிழ் மீடியத்துல படிக்க முடியுமா?“
அவன் வழக்கம்போல ஒற்றை வார்த்தை பதில் அளித்தான். “படிப்பபேன் பா!”
சொன்ன சொல்லை காப்பாற்றினான்.
முதல் இடைத்தேர்வு வரும் வரை அங்கிருந்த ஆசிரியர்களும் கூட அவன் தேர்ச்சி பெறுவான் என்று நம்பவில்லை. ஆனால் முதல் இடைத்தேர்வில் அவன் முதல் ரேங்க்!
என்னையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டான்.
அவன் பத்தாம் வகுப்பில் 473 மதிப்பெண்கள்.
பள்ளியில் இரண்டாம் இடம். என்னைப்பேசிய வாய்களை அடைத்து விட்டான்.
அவனைப் பற்றிய கவலைகளை ஒத்தி வைத்து விட்டு அவளைப்பற்றிய கவலைகளை தலையில் சுமந்தேன்.
அவளுக்கு மாப்பிள்ளை தேடும் படலம்.
ஏதோ தோஷம் காரணமாக மாப்பிள்ளை கிடைக்காமல் வருடங்கள் ஓடியது.
இடையில் எல்லாம் ஒத்துப்போன ஒரு மாப்பிள்ளை வீட்டார் என் வீடு சின்னதாக இருப்பதால் பெண் வேண்டாம் என்றார்கள். என்னங்கடா 500 சதுர அடி வீடு, மாடியில் ஒரு அறை, இதை சின்ன வீடு என்று சொல்கிறார்கள் என்ற வருத்தம் தான்.
அவனுக்கு பெண் பார்க்கும் போது இப்படி யாரும் சொல்லிவிடக்கூடாது என்று முடிவை அன்றே எடுத்தேன்.
அவன் பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி கிளம்ப தயாராகும் தருணம், காந்திமதிக்கும் மாப்பிள்ளை அமைந்தது.
ஒருபக்கம் அவனுடைய படிப்பு, பயாலஜியில் மார்க் குறைவு. 145 தான். அதனால் இன்ஜினியரிங் தான்.
மொத்த மதிப்பெண் 1072. இந்த முறையும் சோடை போகவில்லை. பள்ளியில் இரண்டாவது.
தமிழில் அந்த பள்ளியில் யாரும் எட்டாத 190 மதிப்பெண்களை இவன்தான் எட்டிப்பிடிக்க நேர்ந்தது. இவனுக்கு தமிழ் வருமா என்று கேட்ட அதே வாய்களில் திரும்பவும் ஒரு பூட்டு.
மகனுக்கு நல்ல கல்லூரி, மகளுக்கு நகை, கல்யாணச்செலவு. என் தலையில் பெரிய சுமை.
ஏற்கனவே அதிகம் கோபப்படும் எனக்கு, பபி , சுகர், தலை சுற்று வந்து கை கால்கள் செயலிழந்து மருத்துவமனையில் இரவோடு இரவாக அனுமதிக்கப்பட்டேன்.
மகன் அன்று ஏதோ நண்பர்கள் வீட்டிற்கு சென்றிருந்ததால் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்க்க நேர்ந்தது.
என்னுடைய அந்த நிலையை நேரில் கண்டிருந்தாலும் அவன் உடைந்திருப்பான்.
மருத்துவமனையில் கை கால்கள் செயலிழந்து உயிர் போராட்ட நிலையில் ஐசியூ வில் நான்!