Categories
தொடர்கதை

அப்பா  தொடர்கதை – பாகம் 5

ஐசியூவில் அவன் என்னைப் பார்க்க மறுநாள் காலையில் வந்ததும் நான் சைகையில் அவனிடம் கேட்ட முதல் கேள்வி சாப்பிட்டியா என்பதே!

அவனையும் அவன் அண்ணனையும் (பெரியப்பா பையன்) போய் சாப்பிட்டு வரும்படி சைகையில் சொல்லி அனுப்பினேன்.

வாய் பேச்சானாலும் சைகை ஆனாலும் பாசம் பாசம் தானே? எனக்கு படுத்த படுக்கையானது வருத்தமல்ல. ஆனால் இவன் பனிரெண்டு முடித்து கல்லூரி சேர, காந்திமதிக்கு மாப்பிள்ளை கிடைத்து கல்யாண ஏற்பாடுகள் நிகழும் தருணத்தில் படுத்து விட்டோம் என்ற வருத்தம் தான்.

பிபி, சுகர் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டேன். பிபி அதிகமாகி கை கால்கள் செயல் இழந்து போயிருந்தது.
அதை சரி செய்ய சிறிது பிஸியோதெரபி செய்து விட்டு வீட்டுக்கு அனுப்புவதாக தகவல்.

ஏற்கனவே நான் படுத்த படுக்கையானதை காரணம் சொல்லி, காந்திமதிக்கு பார்த்த மாப்பிள்ளை ராசி இல்லாதவர் என்ற பேச்சுகள் என் காதில் விழ ஆரம்பித்தது. எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு எனினும் மூட நம்பிக்கைகள் கிடையாது.

எழுந்து வந்து காந்திமதக்கு அந்த மாப்பிள்ளையுடன் ஊர்மெச்சும் அளவுக்கு திருமணம் நடத்த வேண்டும். மகனுக்கு நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க வேண்டும் என்பது எனக்கு வைராக்யம்.

கை கால்களை மீண்டும் செயல்பட வைப்பதற்காக தினமும் எலக்ட்ரிக் ஷாக் வைப்பார்கள். எலக்ட்ரிக் ஷாக் வைக்க வரும் தம்பியிடம் தினமும் இருமுறை ஷாக் வைத்தால் என்ன? நான் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வெள்ளந்தியாக கேட்டேன்.

அவனோ திகைத்தான். “சார் தினமும் ஒருதடவை வைப்பதற்கே பலரும் அச்சப்படுவார்கள்!
உங்களுக்கு மனதைரியம் அதிகம்.
சொல்லித்தரப்படும் உடற்பயிற்சிகளை சரியாக செய்யுங்கள். சீக்கரம் குணமடையலாம்.” என்றான்.

நானும் அதை பின்பற்றி விரைந்து குணமடைந்தேன்.
நினைத்தபடி திருமண ஏற்பாடுகள் நடந்தன.
காந்திமதியின் திருமணம் என்பது எனக்கு மிகப்பெரிய சுமை அல்ல. அவளுடைய சிறுவயது முதலே அவள் திருமணத்திற்காக நகைகள் சேர்த்து வைத்திருந்ததால் பிரச்சினை இல்லை.

இவனுடைய படிப்பு சம்பந்தமான கவலை தான் இப்போது. சிறுவயதில் வீடு கட்டுவதை உற்று கவனித்த இவனுக்கு சிவில் இன்ஜினியரிங் படிப்பில் ஆர்வம். நான் மருத்துவமனையில் இருந்த போது , இவனுக்கு கிடைத்த அறிவுரைகளின் படி கோவை அல்லது சென்னையில் உள்ள கல்லூரியில் படிப்பது என்பது முடிவானது. ஆக கலந்தாய்வுக்கு செல்லும்போது பெரிய குழப்பம் இல்லை.

இவனுடைய பள்ளி சீனியருடன் சேர்ந்து மூவரும் கலந்தாய்வுக்கு சென்றோம்.கடைசி நிமிடம் வரை நம்பிக்கை இருந்தது, கோவை GCTல் சீட்டு கிடைக்கும் என்று. அது இல்லாமல் போனதால் சீனியரின் அறிவுரைப்படி குமரகுரு பொறியியல் கல்லூரியை தேர்வு செய்தான்.

திருநெல்வேலி அரசு கல்லூரி, அழகப்பா காரைக்குடி எல்லாம் விடுத்து கோவையில் படிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த கல்லூரியை தேர்வு செய்தான்.

அரசு கல்லூரியாக இருந்திருந்தால் கட்டணம் குறைவாக இருந்திருக்கும். இங்கே வருடத்திற்கு ஒரு லட்சம் வரை ஆகிறது. இதுதான் எனக்கு இப்போதைய சுமை. ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் ஆயிற்றே!
அவனது ஆசைக்கு நான் தடை போடவில்லை.

கல்லூரியில் அவனை முதல் நாள் விட்டு வரும்போது அவன் கண்கள் குளமாகியிருந்தன.

ஊர், வீடு, நான் என் பல காரணங்கள்.
கங்காரு குட்டி போலவே வளர்ந்தவனாயிற்றே?

கல்லூரியில் சேர்ந்து ஒருவாரத்தில் அவன் அக்காள் திருமணத்திற்கு ஊருக்கு வந்தவன் திரும்பி போக மாட்டேன் என்று அடம் பிடிக்கத்துவங்கி விட்டான்.

என்னால முடியாது. உள்ளூர் கல்லூரிகளில் எனக்கு மாறுதல் வாங்கி தாங்க என்று அடம்பிடித்தான்.
இவன் இப்படியே கங்காரு குட்டி போல இங்கேயே முடங்கி விடக்கூடாது, வெளி உலக அனுபவம் வேண்டும் என்பதால் அறிவுரைகள் கூறி அவனை மீண்டும் கல்லூரியில் கொண்டு விட்டு வந்தேன்.
அவனுடைய வகுப்பாசிரியர் மதுரை என்பதால், கூப்பிட்டு கொஞ்சம் கவனிக்க சொல்லி வற்புறுத்தி விட்டு வந்தேன்.

சூழ்நிலையை புரிந்து படிக்க ஆரம்பித்தான்.

ஆஹா, ஓஹோ என்று படிக்கவில்லை.
தேர்ச்சி பெற்றான். அவ்வளவுதான்.

என்னதான் நண்பர்கள் கிடைத்தாலும், ஊர், உறவு, அப்பா, அம்மா வை பிரிந்த ஏக்கம் அவனிடம் இருக்கத்தான் செய்தது. அதை உணர்ந்து கொண்ட நான் அவனிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்காமல், படித்து முடிந்தால் போதும் என்றே இருந்தேன்.

அவன் மூன்றாம் ஆண்டு படிக்கும் சமயம், மாத்திரை கிடைக்காமல் ஒரு மாதம் ஒரு மாத்திரையை தவறவிட்டதால் மீண்டும் நான் படுத்த படுக்கை.

இந்த முறை ஆபத்து அதிகம். உள்ளூர் மருத்துவமனையில் கவனிக்க இயலாது எனக்கூறி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்க சொன்னார்கள்.

ஐசியூவில் பல நாட்கள் இருக்க நேரலாம்.
உயிர் பிழைப்பது பற்றி இப்போது சொல்ல இயலாது என்பதே நிலை. அவன் கல்லூரியிலிருந்து மதுரைக்கு என்னைப் பார்க்க வந்தான். அவன் என்னை வாயில் டியூப் உடனும் ஐசியூவில் படுத்த படுக்கையாகவும் பார்த்துக்கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை.
அவன் கல்லூரியில் சுற்றுலா ஏற்பாடு பற்றி சொல்லியிருந்தான்.

காந்திமதி கணவரை அழைத்து அவனை அந்த சுற்றுலாவுக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி கூறினேன். உறவினர்கள் வசைபாடினாலும் பரவாயில்லை என்று அவனை அனுப்பி வைத்தேன்.
இந்த முறை நான் மீண்டு வருவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்ததால் என் மனைவிக்கு பயம். பிள்ளை இன்னும் படிப்பை முடிக்கவில்லை, இப்படியிருக்க என் குடும்பம் என்ன ஆகுமோ என்று.

ஆனால் இந்த முறையும் நான் மீண்டு வந்தேன்.
என் பிள்ளையை ஆளாக்காமல் ஓய்வேனா?
ஆனால் நான் நடக்கவே இரண்டு மாதம் ஆனது. பழைய நடை வரவில்லை. வரவும் வராது. சிறுவர்கள் போல தத்தியே நடக்க இயலும். சுவரைப்பிடிக்காமல் கால்சட்டை அணிய இயலாது.

குனிந்த தலை நிமிராமல் தான் நடக்க வேண்டும் , நிமிர்ந்தால் தலைசுற்றும். இப்படி இருக்க நீ வேலைக்கு போக வேண்டாம் என்று எல்லாரும் கூற நானோ விடவில்லை. மனைவி அலுவலகத்திற்கு கொண்டு வந்து விடுவாள். சில மாதங்கள் அப்படித்தான் போனேன்.

தனியாக வெளியே செல்ல இயலாது.
பழகிக்கொண்டேன், வாழ்க்கை அளித்த புதிய அனுபவத்தை.

மகன் ஆளாக வேண்டும் என்ற எண்ணம் என்னை உந்தியது. கல்லூரிக்கு சென்ற மகன் கெட்ட பழக்கங்களை கற்றுக் கொள்ளாமல் இருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால் அது நம் கையில் இல்லையே?

சமுதாயமும், சூழ்நிலையும் என்ன செய்கிறது?

கல்லூரி செல்லும் பிள்ளைகள் படிப்பை முடிக்கிறார்களோ இல்லையோ, பெரும்பாலான பிள்ளைகள் தவறான பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கிறார்கள்.

இன்றைய சமுதாயமும், காலமும் அப்படி.
பிள்ளைகளை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?
எங்கள் காலத்தில் 18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்கள் கடையில் சென்று ஒரு சிகரெட் வாங்க முடியாது. கடைக்காரர் தரமாட்டார். இப்பொழுது அப்படியா இருக்கிறது.

அவன் மூன்றாமாண்டு பரீட்சை முடித்த மறுநாள், அவனது ஆசிரியரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.
“வணக்கம் சார்.
எப்படி இருக்கீங்க?”
என்ற நலம் விசாரித்த ஆசிரியர், எனக்கு பேச வாய்ப்பு தராமல் பொறிந்து தள்ளினார்.

“உங்க பையனோட ப்ரெண்ட், அவனுக்கு ரூம் மேட்டு, நேத்து குடிச்சுட்டு வண்டி ஓட்டி என் கூட வேலை பாக்குறவற இடிச்சு கால உடச்சுட்டான் சார்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் லீவுக்கே ஊருக்கு ஓடி வர பையன் பரீட்சை முடிஞ்சு நேத்து ஏன் ஊருக்கு கிளம்பலனு கேட்டீங்களா?
உங்க பையன் வந்த புதுசுல ரொம்ப பாவமா இருந்தான்.
இப்ப இந்த பொறுக்கி நாயோட சேர்ந்து அவனும் பொறுக்கியாதான் ஆவான் பாருங்க.
அந்த பையன் ஏற்கனவே டீச்சர கமெண்ட் பண்ணி என்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டான்.
உங்க பையனுக்கு அவன விட்டா வேற யாரும் ரூம் மேட்டா கிடைக்கல போல, நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம்“ என்று கூறி போனை கட் செய்து விட்டார்.

பையனுக்கு கால் செய்தேன்.

எங்கடா இருக்க என்று கேட்டேன்.
“இல்லப்பா ப்ரெண்ட் ஒருத்தன் அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்கான், அவன பாக்க போறேன்.”

“எது இந்த வாத்தியார் கால ஒடச்சானே அந்த பொறுக்கி பயலா?

என்னவோப்பா, நீங்க நல்லா இருக்கனும்னு தான் நாங்க கேள்வி கேட்காம காசு அனுப்புறோம்.
நீ பாத்து படிச்சு முடிச்சுட்டு வந்தா சரி.“

நண்பர்களை தேரந்தெடுப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.

பொறுக்கியோ, பரதேசியோ அதில் நான் தலையிட விரும்பவில்லை.

ஏன், எங்கள் காலத்தில் அதிகம் சினிமா பார்ப்பது கெட்ட பழக்கம் தான், அதிலும் இரவுக்காட்சி மிகவும் மோசமான பழக்கம். ஆனால் நான் மாரியப்பனையும், முருகனையும் அழைத்து சென்ற போது  அவர்கள் வீட்டில் என்னை எப்படி திட்டியிருப்பார்களோ?

ஆனால் குடித்து விட்டு வண்டி ஓட்டி, ஆசிரியர் காலை உடைப்பதெல்லாம், சகஜமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த கால பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்களா?

படித்து முடித்து வழக்கு இல்லாமல் வீடு வந்து சேர்ந்தால் சரி என்ற மனநிலை வந்து விட்டது.

அப்படி, இப்படி நான்காம் ஆண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்தான். படிக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக CTS என்ற கம்பெனியில் அவனுக்கு வேலை கிடைத்தது.

அவன் இந்த நான்கு ஆண்டுகள் சரியாக படிக்கவில்லை என்றாலும், நல்ல புத்திசாலி, கண்டிப்பாக நல்ல நிலைக்கு வருவான் என்ற எனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தான்.

வீட்டில் வந்து என்னிடம் உரையாடியவன், தனக்கு அந்த வேலைக்கு செல்ல விருப்பமில்லை எனவும், சிவில் கம்பெனிகளுக்கே வேலைக்கு போகப்போவதாகவும் சொன்னான். எனக்கு அதிர்ச்சி.

அந்த வேலையில் ஆரம்பத்திலேயே 25000 சம்பளம், சிவில் கம்பெனிகளில் 10000 தான் தருவார்கள்!

எதனால் அந்த கம்பெனியை வேண்டாம் என்று சொல்கிறான் என்பது எனக்கு புரியவில்லை.

எனக்காக அந்த கம்பெனியில் சேர்ந்து சில காலம் வேலை செய்து விட்டு பிடிக்காவிட்டால் மாறிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்.

சரி என்று ஒப்புக்கொண்டான். அந்த கம்பெனியில் வேலைக்கு சேரும் போது பாஸ்போர்ட் கொடுக்க வேண்டும் என்பதால், மதுரைக்கு கிளம்பினான்.

ஊரிலிருந்து காலை 5.30 மணிக்கு கிளிம்பும் மதுரை பேருந்தில் சென்றால் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு 9 மணிக்குள் சென்று விடலாம் என்று காலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பினான்.

மே 28,2010.

காலை சரியாக 8 மணிக்கு எனக்கொரு அழைப்பு வந்தது.

“சார். அருண்பாரதி உங்க பையனா?
மேலக்கரந்தை கிட்ட அவனும் அவன் ப்ரெண்டும் வந்த பைக்ல கார் மோதி விபத்து. இப்ப அவங்க இரண்டு பேரையும் அருப்புக்கோட்டை அரசு மருத்துமனைக்கு அவசர உதவிக்காக கூட்டிக்கிட்டு போறோம்.

சீக்கிரம் வாங்க“ என்று சொன்னார்கள்.

எதுவும் பேசாமல் மறுகணம்புறப்பட்டு சென்றேன்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.