ஆமாம் நான் அப்பா ஆகிவிட்டேன்.
சரியாக நான்கு வார்த்தைகளில் சொல்லிவிட்டேன்.
ஆனால் எத்தனை ஆயிரம் வார்த்தைகள் கோர்த்து, கண்ணதாசன் போல எத்தனை கவிஞர்களை வைத்து கவிபாடச் செய்தாலும் என்னுடைய மகிழ்ச்சியை விவரிக்க இயலாது.
என் வாழ்நாள் மொத்தத்தையும் இந்த ஒரு நொடியுடன் ஒப்பிட்டால், எனக்கு இந்த ஒரு நொடியே பெரியது.
எனக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் இந்த பூமியின் சுழற்சியை இத்தோடு நிறுத்தியிருப்பேன். இந்த நாள் என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.
செப்டம்பர் 27, 1982.
தமிழில் வெறும் 247 எழுத்துக்கள் தான் உள்ளதோ?
அது போதாததே என் மகிழ்ச்சியை விவரிக்க!
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் ஒரு ஆண் அடையக்கூடிய மிகப்பெரிய பதவி அல்லவா இந்த அப்பா ஸ்தானம்?
இதை அடைந்த இன்பத்தை அனுபவிக்கும் இந்த தருணம் இப்படியே நின்று விடாதா?
என் குழந்தையை என் கையில் எடுத்து தவழச்செய்தார்கள்!
அய்யோ தமிழன்னையே?
என்னை இப்படி சோதிக்கிறாயே?
இத்தனை நாட்களாய் உன் பிள்ளையாக இருக்கிறேனே?
என்னுடைய இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரு வார்த்தையை தரலாமே?
என் உயிர் இப்போது என் கையில் தவழ்கிறது.
அவள் அம்மா போல சிவப்பு.
அழகான கண்கள், மூக்கு, வாய், காது.
அட என்னால சொல்ல முடியலங்க!
இது என்னுடைய குட்டி தேவதை.
ஆம் அழகான பெண் குழந்தை.
அள்ளி அணைத்துக்கொள்ளத்தூண்டும் அழகு.
நிலாவையும் இனி என்னால் ரசிக்க முடியாது. என் மகளை காட்டிலும் அது அழகாய்த் தோன்றுமா என்ன?
என் சாமி!
என் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி.
எங்கள் வழக்கத்தில் மூத்த பெண் குழந்தைகளை சாமியாகத்தான் போற்றுவோம்.
அவளுக்கு திருநெல்வேலியின் பிரதான தெய்வமான காந்திமதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று அந்த தருணத்திலேயே முடிவு செய்து விட்டேன்.
அப்பா என்ற வார்த்தை அவளுக்கு வெறும் வார்த்தையாக இருந்துவிடக்கூடாது என்றும் முடிவு செய்தேன்.
அன்று துவங்கி என் வாழ்க்கையில் பல மாற்றங்கள். என் மனைவியும் குழந்தையும் மூன்று மாதம் கழித்தே என் வீட்டிற்கு வருவார்களாம். அதுவரை அம்மா வீட்டில் என்று கூறிவிட்டார்கள்.
இத்தனை நாள் தனிமையை விட இது கொடியது.
என்ன செய்வது, வாரம் ஒருமுறை சென்று விடுவேன் என் தெய்வத்தை பார்க்க.
மூன்று மாதங்கள், முப்பது வருடங்களாகத் தோன்றியது.
எப்படியோ மூன்று மாதங்கள் கழிந்து ஒரு நல்ல நாளில் என் தேவதை என்னிடம் வந்து விட்டாள். நானே சென்று அழைத்து வந்தேன்.
அவள் வந்ததும் எங்கள் வீடே மாறிப்போனது. எங்களது பெரும்பாலான பழக்க வழக்கங்களும் தான்.
அவளுக்காகவே இருவரும் வாழத்துவங்கினோம்.
அவளது மழலைச்சொல் கேட்ட போது தான், குழல் இனிது யாழ் இனிது என்று திருக்குறளின் அர்த்தம் விளங்கியது.
அப்பா என்று அவள் அழைத்த போது, அய்யோ மீண்டும் என்னால் கவி பாட இயலாது.
பெண் பிள்ளைக்கான குணங்கள் இயல்பாகவே அவளிடம் இருந்தது. சொல்பேச்சு கேட்பது, அடம் பிடிக்க மாட்டாள்.
பள்ளிக்கு செல்லும் முன்னரே சில விஷயங்களை கற்றுத் தர, அரை குறையாக கற்று அதை ஒப்புவிக்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும்.
அவளது மழலைக் குரலில் A B C D I J K L Z என்று சொல்லி முடிக்கும் போது அவ்வளவு சிரிப்பு இருக்கும் என் முகத்தில்.
பள்ளி சென்றாள். அடம் பிடிக்கவில்லை, அழுகை இல்லை. அப்பா சொன்னா செய்யனும். அதை சரியாக பின்பற்றினாள்.
அவளே வாழ்க்கை என 6 வருடங்களை கடந்தோம்.
மீண்டும் மனைவி கர்ப்பம் தரித்தாள்.
இந்த முறை இங்கே தான் மருத்துவம் எல்லாம்.
என் மகளுக்கு 6 வயது. அம்மாவை ரொம்ப தொந்திரவு செய்யக்கூடாது, அவங்களால ரொம்ப வேலை செய்ய முடியாது என்று சொன்னதை புரிந்து கொண்டாளா தெரியவில்லை, ஆனால் நடந்து கொண்டாள்.
அவ்வளவு பக்குவமா இந்த வயதிலேயே? என்று எனக்கு வியப்பு தான்.
மனைவிக்கு பிரசவ நேரம் நெருங்கியது.
அன்று பிப்ரவரி 11, 1989. சனிக்கிழமை.
திடீரென காலை வேளையில் வலி வருவது போல உணர்வதாகச் சொன்னாள் மனைவி.
இப்போது போல அப்போது போன் வசதிகள் ஏது?
சரிம்மா இரு ஊர்ல இருந்து ஆள் கூட்டிக்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வேக வேகமாக ஊருக்கு சென்றேன்.
என் சின்னமாவை கூட்டிக்கொண்டு திரும்ப கிளம்பி திருநெல்வேலி ஓடினேன். அம்மா எங்கோ சென்றிருந்ததாக ஞாபகம்.
வீட்டிற்கு சென்று பார்த்தால் மனைவியைக் காணவில்லை. ஒரு நிமிடம் எனக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.
அப்போது காந்திமதி மழலைச்சொல்லில்
“அப்பா, தம்பி பொறந்துருக்கானம்பா” என்று சொல்ல, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஓடிச்சென்று விசாரித்து நிலவரம் தெரிந்து கொண்டேன்.
வலி வந்த காரணத்தால் பக்கத்து வீட்டுக்காரர்களே அருகில் இருந்த ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் என் மனைவியை கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
மனைவியைக்காண ஓடோடிச் சென்றேன்.
வாழ்த்துக்கள் கூற வேண்டிய வாய்கள் வசை பாடித்தீர்த்தன! “ஏங்க இப்படியா பொண்டாட்டிய விட்டுட்டு போவீங்க? பக்கத்து வீட்டுக்காரங்க பார்த்து உதவி செய்யாட்டி என்ன ஆகும்?”
இப்படி வசை பாடித்தீர்த்து விட்டு, சரி சரி போங்க, போயி புள்ளயை பாருங்க. என்று அனுமதி கொடுத்தார்கள்.
எனக்கும் அந்த பயபுள்ளய பார்க்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டது.
பிறக்கும் போதே பயபுள்ள அப்பனுக்கு நல்ல பரிசு கொடுத்திருக்கிறது. இது நம் மகளைப்போல அல்ல.
கொஞ்சம் வலுத்த கழுதை தான். இதை உஷாரத்தான் டீல் பண்ணனும் என்று முடிவு செய்து என் பொன்னான மகனை பார்க்கச்சென்றேன்.
என்னைப்போலவே கருவாக்கொட்டை. கரு கரு என்று என் கண்களை களவாடி, மூக்கு, வாயை அச்சடித்தாற் போல அவன் தொட்டிலில் கிடந்தான்.
கதகதப்பாக அவனை கைகளில் தூக்கி அணைத்த போது அழத்தொடங்கினான்.
எனக்கு அவன் அழுகையைக் கண்டு சிரிப்பு தான் வந்தது.
ஏன்டா டேய் நீயாடா அழுகுற?
சாதாரணப்பட்ட ஆளா நீ?
பிறக்கும் போதே அப்பனுக்கு நல்ல பரிசு கொடுத்துட்டியே?
நீ அழலாமா என்று அதட்டினேன்.
அழகாக இருந்தது அவன் அழுகை.
அவன் வந்த பிறகு வாழ்க்கை மீண்டும் மாறியது.
அமைதியாக இருந்த வீடு அல்லோகலப்பட்டது.
ஒரு நாளும் நிம்மதியாக இரவில் உறக்கம் இல்லை.
சரியாக அனைவரும் தூங்கும் சமயத்தில் காச்சு காச்சுனு கத்த ஆரம்பிப்பவன் நடுநிசி வரை ஓய மாட்டான். அவனை சமாளித்து மகளையும் தூங்க வைத்து காலையில் அவளை எழுப்பி பள்ளிக்கு அனுப்பி, யப்பா சாமி போதும்டா என்று ஆகி விட்டது அவன் சற்று வளரும் வரை.
கொஞ்சம் வளர்ந்து விட்டால் சரி ஆகி விடும் என்ற நம்பிக்கையிலும் மண்ணள்ளி போட்டான்.
அக்காவ அடிச்சுட்டான், அக்காவ கடிச்சுட்டான்னு தினமும் புகார்கள். அக்கா தானடா? ஏன்டா அடிக்கிற என்று கேட்டால் சிரிப்பு மட்டுமே பதிலாக வரும்.
நான் வீட்டிற்கு வந்துவிட்டால் என்னுடன் கங்காரு குட்டி போல ஒட்டிக்கொள்வான். சேட்டைகள் செய்ய மாட்டான். ஏனோ தெரியவில்லை. ஆண்பிள்ளைகள் அம்மாவிடமும், பெண் பிள்ளைகள் அப்பாவிடமும் ஒட்டிக்கொள்ளும் என்பது என் குடும்பத்தில் நடக்கவில்லை.
அவன் அம்மாவிடம் என்ன காரணத்தினாலோ ஒட்டவில்லை. அவன் அக்காள் என்னிடம் நெருங்குவதை அவன் விரும்பவில்லை.
இவனின் இந்த செயலை புரிந்து கொண்ட அவனுடைய அக்கா என்னிடமிருந்து தள்ளி இருக்க கற்றுக்கொண்டாள். பாவம் அவள் அம்மாவிடமும் நெருங்க மாட்டாள்.
அவளுக்கு தான் ஆதரவு இல்லையோ என்ற வருத்தம். ஆனால் சிறு வயதில் அவளது பெருந்தன்மை என்னை வியக்கத்தான் செய்தது.
இவனுக்கு பெயர் அருண்பாரதி.
அவனது தாத்தா, அதாவது சப் இன்ஸ்பெக்டர் பெயர் அருணாச்சலத்தில் பாதியையும், சொந்த ஊரான எட்டயபுரத்து பாரதியையும் சேர்த்து இந்த பெயர்.
பெயர் நல்லாத்தான் இருக்கு. ஆனா சேட்டை தான் அதிகம் என்று சொல்லாத ஆளே கிடையாது.
பேசுவதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் வந்தது. அதனுடன் அவன் கேள்விகளும் கேட்கத் துவங்கினான்.
“அப்பா எல்லாரும் வீட்ல சிந்தால் சோப்பு வச்சிருக்காங்க, நம்ம வீட்ல மட்டும் ஏம்ப்பா, பியர்ஸ் சோப்பு?“ என்று துவங்கி பல விஷயங்களையும் கவனித்து கேள்வி கேட்பான்.
தக்க பதில் கிடைக்காமல் ஓயமாட்டான்.
“உனக்கு தான்டா தோல் அலர்ஜி, அதனால டாக்டர் சொல்லி தான் இந்த சோப்பு போடுறோம்” என்ற வகையில் அவனுக்கு திருப்தி கிடைக்கும் பதில் வர வேண்டும்.
அவனை பள்ளியில் சேர்க்கும் வயதை நெருங்கிவிட்டான்.
நான் கொண்டு போய் விட்டால் சத்தியமாக பள்ளியில் நிற்க மாட்டான் என்பது தெரியும். அதனால் நான் வேலைக்கு போன பின்பு அவனது அம்மாவை அழைத்து செல்ல சொல்லியிருந்தேன்.
அவனை பள்ளியில் சேர்த்த கொடுமையை கேட்டு கண்கலங்கித்தான் போனேன்.
ஆமாம், அப்பா ஆபிஸுக்கு போறோம் என்று பொய் சொல்லி சாமர்த்தியமாக பள்ளிக்கு அழைத்து சென்று விட்டாள். ஆனால் அங்கு சென்ற பின்தான் கச்சேரி துவக்கம்.
பள்ளி ஆசிரியை கழுத்தில் கடித்து, முடியை பிய்த்து, பள்ளியில் ஒழுங்கா இருக்க வேண்டும் என்று அதட்டிய அம்மாவை எட்டி உதைத்து, அழுது புரண்டு, அப்புறம், பள்ளியில் வேலை செய்யும் பியூன்கள் வந்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று வகுப்பறையில் உட்காரச்செய்ய, வகுப்பறையில் பல குழந்தைகள் இருப்பதையும் உணராமல், அம்மா அப்பா என்று கதறி கதறி அழுது, வாந்தி எடுத்து, அய்யோ. இதை கேட்டதும் எனக்கு கண்கள் சிறிது கசியத்துவங்கி விட்டது.
பள்ளி முடிந்தவுடன் அவனது வகுப்பாசிரியை அவனை கூட்டிக்கொண்டு வெளியே வந்த மறுகணம் என்னைக் கண்டு ஓடோடி வந்தான். என் கால்களை இறுகப் பற்றிக்கொண்டு தேம்பி தேம்பி மீண்டும் அழத்துவங்கினான்.
ஏம்ப்பா அழுகுற? ஸ்கூல் பிடிக்கலியா என்று கேட்டும் அழுகை நிற்கவில்லை.
“அப்பா, குண்டம்மா (அம்மா) ஆபிஸுக்கு போறோம்னு சொல்லி இங்க கொண்டு வந்து விட்டுட்டாப்பா!” என்று மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்தான்.
சரி வா வீட்டுக்கு போலாம் என்று சைக்கிளில் முன்பக்கம் அவனுக்காக வைத்திருந்த குட்டி சீட்டில் அவனை தூக்கி உட்கார வைத்தேன்.
அந்த குட்டி சீட்டு அன்றுதான் அவனுக்காக வைத்தேன். அழுகை அடங்காதவன் அதை கூட கவனிக்கவில்லை.
வீட்டிற்கு வந்து வாந்தி எடுத்து வைத்திருந்த துணிகளை கழட்டிக்கொண்டிருக்கும் போது அவன் அக்காள் அவனை கண்டு சிரிக்க, பொங்கி எழுந்தவன் பொரட்டா போட்டுவிட்டான்.
அவனது மொத்த ஆத்திரத்தையும் அக்காளை அடித்து தீர்த்துக்கொண்டான்.
அம்மாவை அடித்தால் திருப்பி அடித்து விடுவாள் என்பதை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு அக்காவை அடித்துத்துவைத்தான்.
வலுத்த பயபுள்ளை ஆச்சே!
“டேய் இங்க வா, அவள ஏன் அடிக்கிற, நீ ஸ்கூலுக்கு போக அழுதா ஊர்ல எல்லாரும் தான் சிரிப்பாய்ங்க” என்று பிடித்து இழுத்து குளிப்பாட்டி, துணிகளை மாற்றி சாப்பிட கொடுத்தால் சாப்பிடவில்லை.
கோபம். சாப்பாடு செய்த அம்மா மீது.
அவன் அம்மாவை பார்த்த பார்வையிலேயே அவள் பொசுங்கி விடுவாள் போல.
எவ்வளவு கோபம், தன்னை ஏமாற்றி பள்ளியில் சேர்த்து விட்டதற்கு.
அவனை சமாதானம் செய்ய வேறு வழியில்லை.
கடைத்தெருவுக்கு போய் ஏதாவது தின்பண்டம் வாங்கிக் கொடுத்தால் தான் வழிக்கு வருவான்.
கடைத்தெருவுக்கு கிளம்பினோம்!