Categories
தொடர்கதை

அப்பா- தொடர்கதை பாகம்-2

பயணம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பயணம் என்பது இன்றியமையாத ஒன்று.

விந்தணுக்கள் அண்டத்தை அடையும் முதல் பயணம் ஒரு மனித வாழ்வை உருவாக்கி வைக்கிறது.
அது துவங்கி, நாலு கால், இரண்டு கால், மூன்று கால், இறுதியில் எட்டு காலில் செல்லும் ராஜ பயணத்தில் வாழ்க்கை முடிகிறது.

அப்படி எட்டு கால் பயணம் போகும் வரைக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பயணம் என்பது இன்றியமையாதது தானே?

எங்கள் காலத்தில் பயணம் கிடைக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. பெரும்பாலும் நாங்கள் சென்றது நடை பயணம் தான்.

குலதெய்வம் கோவிலுக்கு சிவராத்திரிகளில் மாலை கிளம்பி இரவு சென்று சேரும் பயணமே எங்களுக்கு மிகப்பெரிய திகில் பயணமும், அதுவே இன்பமான பயணமும் கூட.

இப்போது போல அப்போது பஸ் கார் ஆட்டோ கிடையாதே? பெரும்பாலும் வெளிச்சமும் கிடையாது.
மின்விளக்குகள் குறைவு தானே?

கவுண்டமணி வசனத்தில் பிரபலமான பெட்டர்மாக்ஸ் லைட் தான் அப்போதைக்கு பெரிய வசதி.

என்னைப் பொறுத்தவரை இந்த ஓசூர் பயணம் என்பது என் வாழ்வில் மிக தூர பயணம். இந்த பயணத்தை அனுபவிப்பதற்காகவே நான் இதை தேர்வு செய்தாக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

வாஸ்கோடகாமாவின் பயணம் உலக வரைபடத்தில் மாறுதலை ஏற்படுத்தியதைப் போல, இந்த எனது பயணம் என் வாழ்வில் ஒரு திருப்பத்தை உண்டு செய்யும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது.

ஒட்டுப்புழு போல ஊருக்குள்ளே, குடும்பத்தினரிடையே அன்பு பெற்று, சண்டையிட்டு, பாசம் காட்டி, நேசம் வளர்த்து வாழ்ந்த அந்த வாழ்க்கையை விட்டு வேறு ஒரு இடத்திற்கு, வேறு விதமான வாழ்க்கையை நோக்கிப்போகிறோமே என்ற ஒரு சிந்தனை எனக்கு கலக்கத்தை தந்தது. ஆனாலும் வாழ்க்கை நமக்கு தரும் சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் நழுவ விடக்கூடாது.
வாழ்க்கையை வசதியாக மாற்றிக்கொண்டு மீண்டும் இங்கே வந்து விடலாம் என்று என்னை நானே சமாதனப்படுத்திக்கொண்டு கிளம்பினேன்.

ஓசூரில் பயிற்சி வகுப்பில் நான் சந்தித்தவர்களில் பெரும்பாலனோர் என் வயதை ஒத்தவர்கள் தான்.

சில வயதானவர்களும் உண்டு.

ஆனாலும் என் வயதை ஒத்தவர்கள் அதிகம் என்பதால், எனக்கு அந்த வாழ்க்கையும் கூட ஒரு புதிய அனுபவத்தை அளித்தது.

விடுதியில் நாங்கள் அடித்த லூட்டிகள் இன்னும் கூட எனக்கு சிரிப்பையும், அழுகையையும் ஒருசேர வரவழைக்கும்.

இரவு நெடு நேர அரட்டை, சேர்ந்து படுத்து விடியலை தாண்டியும் உறக்கம் என்பது எனக்கு புதிது.

ஆனால் இதெல்லாம் புது அனுபவம். மனதிற்கு ஆறுதலாகவும் இருந்தது.

அரட்டையில் பெரும்பாலும் ரஜினி-கமல், சண்டைகள் தான்.

அறை விடுதிகளில் ஒட்டப்பட்ட நடிகைகளின் படங்கள், ஒரு புத்தகத்தை ஒன்பது முதல் பத்து பேர் வாசிக்கும் வழக்கம் என இன்னும் பல நினைவுகள் மனதை விட்டு நீங்கவில்லை.

“டேய் ஏன்டா அவன் என்ன உன் பொண்டாட்டியா? எப்ப  பாரு கூடவே கூட்டிக்கிட்டு திரயுற?” என்ற வசனங்கள் பல ஜோடிகளுக்கு பொருந்தும்.

சாப்பிட, குளிக்க, தூங்க அட ஏங்க, பாத்ரூம் கூட ஒன்னாவே போவானுங்க!

இந்த மாதிரிலாம் அண்ணன், தம்பி உறவுல கூட பாக்க முடியாதுங்க. சுவர் ஏறி குதித்து இரவு காட்சிகள். டீக்கடை அரட்டைகள் என என் வாழ்வில் பல புதிய விஷயங்களை நான் அனுபவித்த அந்த வாழ்க்கையும் எனக்கு மிகப்பெரிய மலரும் நினைவுகள் தான்.

பல்லி விழுந்த சாப்பாடாக இருந்தாலும் பகிர்ந்து தான் உண்ணுவோம்!

விடுதி வாழ்க்கை- என் வாழ்வின் இன்னொரு மறக்க முடியாத அத்தியாயம்.

பண்டிகைகளுக்கு ஊருக்கு போக முடியவில்லை என்ற வருத்தமெல்லாம் ஏற்படாது. விடுதி வாழ்க்கை தினம் தினம் பண்டிகை போலத்தான் இருந்தது.

இப்படிப்பட்ட விடுதி வாழ்க்கையும் வெறும் ஒரு வருடம் தானே? இது என்ன BA வா இல்ல, BSC ஆ மூன்று வருடம் தங்கி கூத்தடிக்க? என்ற வருத்தம் அனைவருக்கும் உண்டு.

ஆனாலும் என்ன செய்வது பியூசி முடிக்காதவர்களுக்கு இதுதானே வழி.

அந்த நாளும் வந்தது. என்னதான் கூத்து கும்மாளம் அடித்தாலும் பயிற்சியில் கண்ணும் கருத்துமாக தேர்ச்சி அடைந்தோம்.

திருநெல்வேலியில் எனக்கு முதல் பணி நியமனம்.
மீண்டும் ஒரு புதிய வாழ்க்கை.

ஆனால் என்ன செய்வது அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.

பேட்டை மாரியப்பனும், தச்சநல்லூர் முருகனும் கூட திருநெல்வேலிக்கு தான் வேலைக்கு வரப்போகிறார்கள் என்பது மனதிற்கு ஆறுதல்.

அவரவருக்கு ஊரின் அருகில் தான் பணி நியமனம் கிடைத்திருந்தது.

முருகனுக்கும், மாரியப்பனுக்கும் வீடு திருநெல்வேலியே என்பதால் அவர்கள் வீட்டிலிருந்தே வேலைக்கு வந்தார்கள்.

எனக்கோ அப்படி இல்லை.
என் ஊரில் இருந்து நான் தினமும் திருநெல்வேலிக்கு சென்று வருவது இயலாது.

திருநெல்வேலியிலேயே ஒரு மேன்ஷனில் தங்கி வேலைக்கு சென்றேன். குருவிக்கூடு போன்ற அறைகள். பலதரப்பட்ட வயதினர். பல வேலை பார்க்கும் மனிதர்கள். திருநெல்வேலியை சுற்றி பல ஊரைச் சார்ந்த நபர்கள் என பலதரப்பட்ட ஆட்களுடன் பழகும் இன்னொரு வாய்ப்பு.

இவ்வளவு சொன்ன நான் என் ஊர் எது என்றே சொல்லவில்லையே இதுவரை. திருநெல்வேலியில் இருந்து 75 கிமீ தள்ளி இருக்கும் எட்டையபுரம் தான் எனது ஊர்.

தமிழ் தெரிந்தவர்களுக்கு எட்டையபுரம் தெரிந்திருக்க வேண்டும்.

ஆமாம். பாரதியார் பிறந்த ஊரே தான்.
பாரதியார் படித்த அதே ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் தான் நானும் படித்தேன்.
ஆனால் நான் படிக்கும் போது அது இராஜா மேல்நிலைப்பள்ளி.

எங்கள் ஊர் ராஜா அந்த பள்ளியை ஊர் மக்களுக்காக கட்டியிருந்தார். வெள்ளைக்காரன் காலத்தில் அது ஆங்கிலோ இந்தியன் பள்ளியாக செயல்பட்டது.

என் ஊர் பெயரை கேட்டதும் பலரும் கட்டபொம்மனை காட்டி கொடுத்தது உன் ஊர் ராஜா தானே என்று கேட்கவும் செய்வார்கள்!

அவர்களிடம் நான் எப்படி விளக்குவது எங்கள் ஊர் ராஜாவின் பெருமையையும், அவருக்கும் கட்டபொம்மனுக்குமான நட்பையும்?

எங்கள் ஊர் ராஜாவும் சரி, கட்டபொம்மனும் சரி , இருவரும் கடுமையான முருக பக்தர்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவிலின் பூஜைக்கு பின்னரே இருவரும் காலை உணவை எடுத்துக்கொள்வார்கள்.

அங்கே திருச்செந்தூரில் கோவிலின் பூஜை முடிந்ததும் அடிக்கப்படும் மணி ஓசை எவ்வளவு தூரம் கேட்குமோ அவ்வளவு தூரத்தில் இன்னொரு மணி இருக்குமாம்.

அந்த மணி ஒலித்ததும் இதை ஒலிப்பார்களாம். இந்த மணி ஓசையின் தூரம் கணக்கிடப்பட்டு இதை தொடர்ந்து இன்னொரு மணி இருக்குமாம். இது ஒலிக்கப்பட்ட ஓசை வந்ததும் அதை ஒலிப்பார்களாம்.

இப்படி தொடர் சங்கிலியாக பாஞ்சாலங்குறிச்சிக்கும், எட்டையபுரத்திற்கும் மணிகள் கட்டப்பட்டு, கடைசியில் கோட்டையின் மணி ஒலிக்கப்பட்ட பின்னரே இருவரும் உணவு அருந்துவார்களாம்.

கட்டபொம்மன் எட்டப்ப மன்னரால் காட்டிக்கொடுக்கப்பட்டார் என்று ஏன் வரலாறு பதிப்பிக்கப்படதோ தெரியவில்லை.

ஆனால் எங்கள் ஊர் வழியாக இருப்பு பாதை அமைக்க வெள்ளைக்காரன் அனுமதி கேட்ட போது எம் மன்னர் அதை மறுத்தே இருக்கிறார்.

அதுபோல ஊர்மக்களின் அறிவுக் கண்களை திறக்க நல்ல பள்ளிக்கூடம், மக்களின் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் என பலவற்றையும் மக்களின் சந்தோஷத்திறக்காக செய்து நல்ல பெயர் எடுத்த மன்னனே எம் மன்னன்.

இன்னொரு விஷயமும் உண்டு, எங்கள் ஊரில் குழந்தைகள் முதல் கிழடுகள் வரை ஒன்று இரண்டு என எண்களை எவ்வளவு வேகத்தில் சொன்னாலும், ஏழு, ராஜா எட்டு என்று தான் சொல்வார்களாம்.

ஏனென்றால் எட்டு என்று எண் பெயரை உச்சரித்தால் கூட அது நம்ம ராஜாவுக்கு இழுக்கு என நினைத்தார்களாம்.

இப்படியான மன்னர் எம் மன்னர். ஏன் சுப்பிரமணியனை பாரதி ஆக்கியதும் எங்கள் மன்னரே! உமருப்புலவருக்கு மண்டபம் அமைத்ததும் எம் மன்னரே!

சரி ஊர்கதை மன்னர் கதை என்று துவங்கினால் இன்னும் ஏராளம் இருக்கிறது.

என் கதைக்கு வருகிறேன்.

விடுதி வாழ்க்கை போல அல்ல மேன்ஷன் வாழ்க்கை. இதில் பெரும்பாலானோர் திருமணம் முடிந்து மனைவி குழந்தைகளை ஊரில் விட்டு இங்கு சம்பாத்தியத்திற்காக வந்தவர்கள். இவர்களிடம் வெறும் புன்னகையை எதிர்பார்க்கலாமே அன்றி விடுதி வாழ்க்கை போன்ற நட்பை எதிர்பார்க்க முடியாது.

சிலரிடம் நல்ல அறிவுரைகள் கிடைக்கும்.
சிலரிடம் நல்ல தகவல்கள் கிடைக்கும். ஆனால் மாரியப்பனும், முருகனும் மட்டுமே நட்பை அளித்தார்கள்.

பேரின்பவிலாஸ் தியேட்டர், ரத்னா தியேட்டர் என மாரியப்பனையும், முருகனையும் கூட்டிக்கொண்டு அவ்வப்போது விடுதி வாழ்வின் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதுண்டு.

அதுபோல வாரம் ஒருமுறை நல்ல உணவகத்தில் அசைவ சாப்பாட்டை வெட்டி எறிவதும் பழக்கமானது.

அண்ணனுக்கும், அக்காவுக்கும் ஏதோ சொந்த முறையில் பார்த்து திருமணம் முடித்து விட்டார்கள்.

எனக்கோ சொந்த பந்த்ததில் பெண் அமையவில்லை.

ஆனாலும் விடவில்லை. எப்படியோ தேடிப்பிடித்து விட்டார்கள். சங்கரன்கோவில் பெண்.
அப்பா சப் இன்ஸ்பெக்டர்.

என் சின்னம்மா தான் என்னிடம் பெண்ணை பற்றி சொன்னார்.
“பொண்ணு நல்ல நிறமா லட்சணமா இருக்காப்பா.
நாங்க பாத்துட்டோம். ஜாதகமும் பொருந்தி வந்துடுச்சு. நீ பாக்கனும்னு கூட அவசியமில்ல. ஆனா சப் இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளைய நேர்ல பாக்கனும்னு சொல்லுதாரு. நீ லீவு அன்னைக்கு சங்கரன்கோவில்ல போயி பொண்ண பாத்துரு. சப் இன்ஸ்பெக்டர் ஏதாவது கேட்டா பாத்து பக்குவமா பதில் சொல்லிடு“ என்று சொன்னார்கள்.

அப்போது வந்திருந்த ஏதோ கமலஹாசன் படத்தில் கமலஹாசன் வைத்திருந்த அதே குருவிக்கூடு தலை, பெல்ஸ் பாட்டம் பேண்ட், குறுக்கே கோடு போட்ட சட்டை என ஜிகு ஜிகுவென பெண் பார்க்க சென்றேன்.

எல்லாம் ஒத்துப்போனது. பேச்சு வார்த்தைகள் இனிமையாக நிறைவுற்றது. திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம் முடித்த கையோடு திருநெல்வேலியில் இருவரும் வீடு பார்த்து குடியமற வேண்டும் என்று ஏற்பாடுகள் நடந்திருந்தது.

தனிக்குடித்தனம் எல்லாம் சரிதான்.
ஆனால் அக்கா தங்கை தவிர மற்ற பெண்களிடம் பெரிதும் பழகவில்லை என்ற எனக்கு இப்படி ஒரு கொடுமையா?

எப்படி ஒரு பெண்ணிடம், பேசி பழகி அவளுடன் வாழப்போகிறோம் என்ற பயம்.

இல்லாத சேட்டை எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணியாச்சு. ஆமாங்க, 1971 இல் திருமண பத்திரிக்கை ஆங்கிலத்திலும் தமிழிலும்.
மிகப்பெரிய பணக்காரன் போல ஸ்டைலாக பத்திரிக்கை.

ஒரு மாறுதலுக்கு ஓட்டலில் உணவு என நான் செய்த சேட்டைகள் கொஞ்சம் அந்த காலத்திற்கு அதிகம் தான்.

இப்போது பேசுவதற்கே கை கால் உதறுகிறதே?

நான் எப்படி பேசி உறவாடி குழந்தை பெறுவது என்ற பயத்தில், சேட்டைகளை சற்று குறைத்திருக்கலாமோ என்ற எண்ணம்.

ஆனால் பெண் என்பவளை உணர்ந்த தருணத்தில் தான், ராமாயணமும், மகாபாரதமும் ஏன் பெண்ணை மையமாக வைத்து உருவானது என்பதை உணர்ந்தேன்.

காதல் கசிந்தோட, இதழ்கள் முத்தங்கள் பறிமாற, உடல்கள் ஒன்றிணைய கன்னிப்பெண் கர்ப்பமாகி விட்டாள்.

சாதித்து விட்டாய் சங்கரா!
சபாஷ்.

சரியாக ஒரு வருடத்திற்குள்ளாகவே முதல் குழந்தை பிறந்து விடும் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் முதல் குழந்தை என்பதால் மகப்பேறு காலத்தில் மனைவியை அம்மா வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.

சப்இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பராகி திருச்செந்தூர் சென்று விட்டார்.

திருநெல்வேலி திருச்செந்தூர் பயணம் அடிக்கடி செல்ல நேர்ந்தது.

குழந்தையும் பிறந்தது.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.