இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலான குழந்தைகள் வறுமை என்பதை உணரும் விதமாக வளர்வதில்லை.
இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது பெரும்பான்மை மட்டுமே. 100 சதவீதம் அல்ல.
இன்றைய நாளில் பொதுவாகவே ஒரு 3-4 வயது குழந்தை செல்போனை முழுமையாக இயக்கும் அளவிற்கு திறன் பெற்ற குழந்தைகளாகவும், பெரும்பாலான வீடுகளில் செல்லும் என்பது அத்தியாவசியம் போலவும் ஆகிப் போனது.
எங்களது, அதாவது 90 களில், வீடுகளில் தொலைக்காட்சி என்பதே அரிது.
தொலைக்காட்சியைக் கூடப்பக்கத்து வீடுகளில் சென்று தான் பார்க்க வேண்டிய கட்டாயம்.
ஆனால் இந்தக் கட்டுரை அதைப்பற்றிய விஷயங்கள் அல்ல.
அதையும் தாண்டிய வறுமையையும், குழந்தைத் தொழிலாளர்கள் நிறைந்து காணப்பட்ட சூழலையும் பற்றியது.
குழந்தைத் தொழிலாளர்கள் என்றால் பள்ளிக்கூடமே செல்லாமல் குடும்ப வறுமை காரணமாக முழுநேரமும் தாய் தகப்பனோடு பணியாற்றும் குழந்தைகளில் துவங்கி, பள்ளி முடிந்த பிறகு, மாலை வேளைகளிலும், சனி , ஞாயிறு விடுமுறைகளிலும் வீட்டு சூழலின் காரணமாக வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்.
வாழை என்ற சமீபத்திய திரைப்பட்டத்தில் இந்த விஷயம் மிக அழகாகக் காட்டப்பட்டிருந்தது. அந்த ஊர் சூழலுக்கு அங்கு வாழைத்தார் சும்ப்பது போல, எங்கள் ஊரில் எனது நண்பர்கள் சிலர், தீப்பெட்டித் தொழில் சார்ந்த சில வேலைகள் செய்தனர்.
மாலை வேளைகளிலும் சரி, சனி ஞாயிறுகளிலும் சரி குறிப்பிட்ட அளவில் வேலையை முடிக்காமல் விளையாடப் போகக் கூடாது என்பது அவர்களின் பெற்றோரின் கட்டளை.
அவர்கள் சீக்கிரம் விளையாட வர வேண்டும் என்பதற்காக அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவமும் எனக்கு உண்டு.
இது இல்லாமல், தனது சொந்தத் தேவைக்காக, அதாவது விரும்பிய உணவு அல்லது பண்டம் வாங்கி உண்பதற்காக, சனிக்கிழமை நடக்கும் ஆட்டுச் சந்தைகளுக்குச் சென்று அங்கு வரும் ஆடுகளுக்கு, கவரில் தண்ணீர் பிடித்து வயிறு முட்டக் குடிக்க வைக்கும் வேலையைச் செய்வார்கள்.
ஒரு ஆட்டுக்கு 50 பைசா என்ற கணக்கில் பணம் கிடைக்கும். ஆடுகள் வயிறு முட்டத் தண்ணீர் குடித்தால் பார்க்க பொசு பொசுவென எடை அதிகமாகத் தோன்றும் என்பதால் இவ்வாறு செய்வார்கள். ஆனால் அது லேசான விஷயமல்ல.
ஆடு அவ்வளவு எளிதாகத் தண்ணீர் குடிக்காது. பாதிக்குப் பாதி வெளியே தான் துப்பும்.
இப்படி மல்லுக்கட்டி சேர்த்த பணத்தை ஐஸ் வாங்கிச் சாப்பிடவோ, அல்லது மறுநாள் சினிமா பார்ப்பதற்காகவோ வைத்திருப்பார்கள்.
அதையும் சிலர் வீடுகளுக்கும் கொடுத்து விடுவார்கள்.
மேலும் எனது சொந்தத்தில் என் கூட்டாளிகள் நெசவுத் தொழிலில் சிறு சிறு உதவிகளைச் செய்து விட்டு, அதன்பிறகு தான் வீட்டை விட்டு வெளியேற முடியும் என்ற அப்பா, அம்மாவின் அன்புக் கட்டளைக்கு பணிந்து அந்தப்பணியில் ஈடுபடுவதும், எனது பாட்டி வந்து நீங்க விளையாடப்போங்க இந்த வேலையை நான் பாத்துக்கிறேன் என்று எங்களை மகிழ்விப்பதும் இன்றளவிலும் நினைவிலிருந்து நீங்கவில்லை.
இதெல்லாம் எனது குழந்தைப் பருவத்தில் நான் கண்ட எனது நண்பர்களின் சொந்த அனுபவம்.
நாளடைவில், எங்களது வயதொத்தவர்களும், அதற்கடுத்த பருவத்தினரும், கல்யாண வீடுகளுக்குப் பந்தி பரிமாறுவதற்கும், சமையல் மாஸ்டர்களுக்கு கையாளாகவும் சனி, ஞாயிறு விடுமுறைகளில் வேலை செய்து தனது சொந்தத் தேவைக்காகப் பணத்தை வைத்துக் கொள்வர்.
நேற்று மாலை தேநீர் பருகிக் கொண்டிருக்கும் போது எனது கண்களில் தென்பட்ட சம்பவம் எனது சிறு வயதை நினைவுபடுத்தியது.
3 பருவ வயது பையன்கள், ஒரு நான்குமுனை சந்திப்பில் போகும் வரும் ஆட்டோ ரிக்ஷாக்களை மறித்து அதன் பின்பக்கம் ஏதோ ஒரு நிறுவனத்தின் விளம்பர ஸ்டிக்கரை ஒட்டினர். இதற்கான சன்மானமாக ஆட்டோக்காரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணத்தை அளித்தனர்.
வெகுநேரம் உற்று கவனித்த பிறகு அது 50 ரூபாய் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
ஸ்டிக்கர் ஒட்டிய பிறகு ஒவ்வொரு ஆட்டோவையும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இப்படி சனிக்கிழமை விடுமுறைகளில் அவர்கள் சம்பாதிக்கும் பணம் கட்டாயம் தனது சுய உபயோகத்திற்காகத் தான் இருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.
என்னவோ, ஒரு சில விஷயங்களை நாம் பார்க்கும் போது எளிதாகக் கடந்து போக இயலாது.
அதுபோலத்தான் நேற்று நான் கண்ட சம்பவமும், எனக்குப் பல நினைவுகளையும் தூண்டியது.