Categories
தற்கால நிகழ்வுகள்

காற்றில் பறந்த ஆணையரின் ஆணை

காவல் துணையர் ஆணையர் சில நாட்களுக்கு முன்பு பொதுவெளியில் கொடுத்த பேட்டி எல்லாம் சும்மா , மக்களிடம் ஒரு நல்ல எண்ணத்தை மேம்போக்காக உருவாக்குவதற்குத் தான் போல.

அந்த அறிக்கை என்று பிறப்பிக்கப்பட்டதோ, அப்போதே காற்றிலும் பறந்து விட்டதாகத் தான் தோன்றுகிறது.

பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டும் விதமாக இந்தப்பக்கம் நல்ல விதமாக அறிக்கையை விட்டு , அந்தப்பக்கம், போக்குவரத்து காவல் அதிகாரிகளை வசூல் வேட்டைக்குத் துரத்தி விட்டார்கள் போல.

இன்று எங்கள் பகுதி சந்திப்பில் குடும்பத்தோடு மகிழுந்தில் வந்து கொண்டிருந்தேன்.

காவல்துறை ஆணையர் குறிப்பிட்டிருந்த ஐந்து வகையான விதிமீறில்கள் எதையும் செய்யாமல் பல சரக்கு வாகனங்களும், சில இரண்டு சக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .

அதோடு எங்கள் காரையும் மறித்த போலீஸார், வண்டியை ஓரம்கட்டி இறங்கச் சொன்னார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் வண்டிக்கு FC – Fitness certificate, அதாவது தகுதிச் சான்றுக்கான காலக்கெடு வருகிறது.

ஒருவேளை இந்த வண்டி, தகுதிச் சான்று இல்லாமல் ஓடுகிற பழைய வாகனம்.ஏதாவது பெரிய தொகையாக அபராதம் அடிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் வாகனம் நிறுத்தப்பட்டது.

வாகனத்தை நிறுத்தியதும் அந்த காவலாளி தான் எதையோ சாதித்து விட்டபடிக்கு, வண்டி புக்க செக் பண்ணுங்க சார் என்றதும், உதவி ஆய்வாளரும் வேகமாக தட்டிப் பார்க்க அவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

வண்டியில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது.ஆனாலும் மாப்பிளைக்கு மொய் இல்லாமல் எப்படி.

நம்பர் பிளேட் பாண்ட் அதாவது எழுத்துகளின் அளவு சரியில்லை என்று சொல்லி 500 ரூ தீட்டவிட்டார்கள்.

இதே நம்பர் ப்ளேட்டோடு தான் , வண்டியில் LPG எரிவாயு இணைப்புச் சான்றிதழும், அங்கீகரிக்ப்ப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழும் வாங்கினேன்.

அப்போது RTO அலுவலகத்தில் கூட இந்த நம்பர் பிளேட் விவகாரம் பற்றி யாரும் பேசவில்லை.

இதையெல்லாம் நமக்குப் பேசத் தகுதியில்லை.
இந்த அமைப்பு நம்மை அங்கீகரித்தால் அனுபவித்துக் கொள்ள வேண்டியது தான்.

அபராதம் விதத்தில் செலுத்த வேண்டியது தான்.

நாமெல்லாம் சாமானியன் தானே!

இன்று எனது வாகனத்தை மறித்த உடனே, எந்த ஐந்து விதிமீறலின் கீழ் என் வாகனத்தை மறித்தீர்கள் என்று நான் கேட்டிருந்தால், ஆணையிட்ட காவல்துறை ஆணையர் என்னைப் பாதுகாப்பாரா என்ன?

எல்லாம் சகித்துக் கொண்டு வாழ்வதுதான் சாமானியனின் தலையெழுத்து.

இல்லையென்றால் தவறு செய்தாலும் தைரியமாகச் செய்யும் அளவிற்கு , அரசியல் அதிகார பலத்தோடு வாழும் பெரிய ஆட்களாக வாழ வேண்டும்.

எனது வாகனம் பழையது.அதனால் நிறுத்தப்பட்டது.
ஓரளவு புதிதான விலை உயர்ந்த வாகனங்கள் நிறுத்தப்படவில்லை.
அதில் எத்தனை பிச்சைக்கார எச்சைப்பணக்காரர்கள் காப்பீட்டைப் புதுப்பிக்காமல் வண்டி ஓட்டுகிறார்களோ தெரியவில்லை.

சரி, மகிழுந்து ஒழிந்து போகிறது.

அன்றாடம் பிழைப்பு நடத்தும் சரக்கு வாகனங்களைப் பொழுதன்னைக்கும், அங்கொரு இடம், இங்கொரு இடமுமாக நிறுத்தி, 2000, 3000 , 5000 வரை அபராதம் விதிக்கின்றனர்.

எல்லாரும் சரியாக விதியைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லவில்லை.

பல விதிமீறல்கள் நிகழ்கிறது.
இன்று நான் நின்ற போது பதிவுச் சான்றிதழில் , திறந்த சரக்கு வாகனம் என்று இருக்க, அந்த வண்டி கூண்டோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

இதெல்லாம் மிகச்சாதாரணமான தவறல்ல.
ஆனால் யதார்த்தமாக பாதிக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இப்படித்தான் இயங்குகிறது.

ஆக, போக்குவரத்துக் காவல் அதிகாரிகளை இப்படி வசூல் வேட்டையில் இறக்கி விடுவது எதையும் சரி செய்யாது

ஆனிவேரிலிருந்து ஒழுங்குபடுத்த வேண்டும்.
அரசு அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும், அரசியல்வாதிகள் செய்திருந்தாலும் தட்டிக் கேட்கப்பட வேண்டும்.

நான் எனது தவறுக்கு 500ரூ கட்டிவிட்டேன்.
அந்த ஆதங்கத்தில் கேட்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாமே!

விதிகளை மீறாத சாமானியனைப் பிடித்து அபராதம் விதிக்கும் இந்த அரசமைப்பு விதிமுறைகளை சரிசெய்ய அனைத்து நிலை ஆட்களுக்கும் கடிவாளம் போடுமா?

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.