இப்போதெல்லாம் சினிமா தயாரிப்பாளர்களை எது காப்பாற்றுகிறதோ இல்லையோ, பேய் காப்பாற்றுகிறது என்ற வசனம் ஏகப் பொருத்தமாகிப்போனது.
இந்த வாரம் சந்தானம் மற்றும் அவரது குழுவினரின் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபுள் திரைப்படமும் அந்த ரகம் தான்.
டிடி வரிசைப்படங்களைப் போலவே சந்தானம் மற்றும் குழுவினர் பேய்களிடம் சிக்கிக் கொள்வதும், பிறகு அதிலிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்ற வழக்கமான கதையும், வழக்கமான நகைச்சுவையும் தான்.
திரைக்கதையில் சிறிய மாற்றம் செய்து இன்றைய தேதிக்கு ஏற்ப ஒரு மசாலா கலவையை தயார் செய்திருக்கிறார்கள்.
வடிவேலு ஊத்தாப்பத்திற்கு விளக்கம் அளிப்பது போல, மெனக்கெட்டு பல ஹாலிவுட் படங்களின் கலவையான கதையைக் கொண்டு வந்து திரைக்கதையாக்கி ஒரு புது முயற்சியாக இதைச் செய்ய முயன்ற போதும், பொதுவான சினிமா ரசிகர்களுக்கு, அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்ற ரீதியில் தான் சென்றடைந்திருக்கிறது.
பேய் படம், காமெடியா இருந்தது .
இவ்வளவு தான் படத்தின் வெளிப்பாடு.
இவர்கள், கதை, கதைக்குள் கதை, கதையில் குழப்பம், இறுதிக்காட்சியில் ஒரு திருப்பம் என்று செய்த வித்தைகளில் பெரும்பாலானது பொது ரசிகர்கள் சிலருக்குப் புரிந்து கொள்ளவே சின்ன நேரம் எடுக்கிறது.
சினிமாவை உயிராக நேசிக்கும் ஒரு இயக்குனர் பேய், சினிமாவைத் தரமில்லாமல் விமர்சிக்கும் விமர்சகர்களையும், அவரது குடும்பத்தினரையும் ஒரு ஆபத்தான திரைக்கதை கொண்ட திரைப்படத்திற்குள் கதாபாத்திரங்களாக மாற்றி அனுப்பிவிடுகிறது.
அந்த ஆபத்தான திரைக்கதையைக் கடந்து இவர்கள் குடும்பத்தோடு தப்பித்தார்களா என்பதே கதை.
ஹாலிவுட்டில் வெளியான ஜத்தூரா படத்தில் விளையாட்டு மாய உலகினில் படத்தின் கதாபாத்திரங்கள் நுழைவது போல, சந்தானமும், அவரது குழுவினரும் ஒரு திரைப்படத்தினுள் நுழைந்து விடுகிறார்கள்.
அவர்கள் அந்தத் திரைப்படத்தினுள் நுழைந்ததையே அந்தப் படத்தில் ஏற்கனவே இருந்த கதாபாத்திரங்கள் எப்படி ஏற்றுக் கொண்டன, என்பதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், எல்லாருக்கும் புரியும் விதமாகவும்,ரசிக்கும் விதமாகவும் மாற்றி அமைத்திருக்கலாம்.
ஓரளவு நகைச்சுவை உணர்வைத் தந்தாலும், இன்னும் கொஞ்சம் அந்த இடங்களில், சில நல்ல உத்திகளைக் கையாண்டு சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்.
படத்தினுள் இந்தக் கதாபாத்திரங்கள் நுழைந்த பிறகு நிகழும் துரத்தல் ஓடல் காட்சிகள், ஒரு சில இடங்களைத் தவிர்த்து பெரிய வயிறு வலிக்கும் நகைச்சுவை எல்லாம் இல்லை…
மேலும் , இதென்னடா நைட் ஷாட், இதென்னடா தொடர்பு பகல் ஷாட் போன்ற காட்சிகள், வித்தியாசமானதாக இருந்தாலும், அடுத்து என்ன என்பதை வெளிப்படுத்தி, பயத்தையும், சிரிப்பையும் குறைத்து விட்டது்போலத் தோன்றியது.
சப் டைட்டில் நகைச்சுவை, கிங்க்ஸ்லியுடைய பல நகைச்சுவை காட்சிகள், நிழல்கள் ரவியுடைய சில காட்சிகள், மொட்டை ராஜேந்திரனின் க்ளைமாக்ஸ் ஸ்பெஷல் என தொடர்ந்து பல இடங்களில் நல்ல சிரிப்பு.
ஆனாலும் போட்டியில் முந்தைய படத்தை வெல்லவில்லை.
பேயைத் தாண்டி, ராங் டர்ன் பட மனித திண்ணிகளை இந்தப்படத்தின் கதையில் இணைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் பயமும் பதட்டமும் பெரிய அளவில் ஏற்படவில்லை.
ஏதோ ஒரு சின்ன குறைபாடு.
மொத்தத்தில் ஒரு முறை குடும்பத்தோடு சிரித்து ரசிக்கலாம்.