மாம்பழம் பற்றி பலருக்கும் பல கதைகளும் இருக்கும்.
நமக்குத் தெரிந்து பரமசிவன் குடும்பம் பிரிந்ததே ஞானப்பழம் என்று பெயரிடப்பட்ட மாம்பழத்தின் காரணத்தினால்தான்.
அதைத் தாண்டி நமக்கெல்லாம், மாம்பழம் என்றவுடன் அப்துல்லா கதையும் ஞாபகத்தில் வரும்.
இதோ இங்கேயும் அதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
ஊரில் உள்ள ஒரு மிகப்பெரிய கஞ்சனின் மாம்பழத்தோட்டம் வழியாக அப்துல்லா நடந்து செல்கிறான்.
அப்போது, அங்கே பழுத்துத் தொங்கிய மாம்பழங்களின் வாசனையை உணர்ந்து அவன், ஆஹா, எவ்வளவு மனம்.
இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று சொல்ல, அந்தக் கஞ்சனுக்குக் கோபம் வந்து விடுகிறது.
என் தோட்டத்துப் பழங்களின் வாசனையை இவன் எப்படி நுகரலாம் என்று!
உடனே ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டி, அப்துல்லா என் தோட்டத்துப் பழங்களின் வாசனையை நுகர்ந்ததன் காரணமாக அவை ருசியிழந்து விட்டன.
ஆகவே அவன் அதற்கு ஈடாகப் பணம் தரவேண்டும் என்று வாதிட்டான்.
ஊர்த்தலைவர், அதெப்படிப்பா, வாசனை பிடித்தால் பழத்தின் ருசி குறையும் என்று பேசியும் பலனில்லை.
சரி என்று கஞ்சனின் வழிப்படியே அப்துல்லா விற்கு 15 பொற்காசுகள் அபராதம் விதிக்கிறார்.
இதைச் செலுத்த, பத்து நாள் தவணை தருகிறார்.
9 ஆவது நாள் அப்துல்லா தனது பைகளில் இருந்த காசுகளை எடுத்துப் பார்த்து எண்ணிக் கொண்டிருந்தான்.
மறுநாள் பஞ்சாயத்துக் கூடியது.
ஊர்த்தலைவர் பணம் செலுத்தச் சொன்னதும், அப்துல்லா பணமெல்லாம் இல்லை ஐயா, என்னால் இந்தப் பத்து நாட்களுக்குள் சம்பாதிக்க இயலவில்லை..எனக்கு மேலும் தவணை வேண்டும் என்று கூறினான்.
உடனே கஞ்சன், இல்லை ஐயா அவன் பொய் சொல்கிறான்.
நேற்று தான் தன் சுருக்குப் பையிலிருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான்.
30 தங்கக் காசுகள் வைத்திருக்கிறான் என்று சொல்ல, அப்பதுல்லாவோ, இல்லை ஐயா அது வெறும் செல்லாத காசுகள் என்றான்.
கஞ்சன் அதை மறுத்து, நான் என் கண்ணால் பார்த்தேன், காதுகளினால் அவன் காசை சுண்டிய போது சத்தத்தை கவனித்தேன்.
அவை அனைத்தும் பொற்காசுகள், 30 பொற்காசுகள் என்று சொன்னான்.
அப்துல்லா உடனே, ஆமா ஐயா, நான் அபராதம் செலுத்துவதற்காக நேற்று 30 பொற்காசுகளை இந்த சுருக்குப் பையில் வைத்திருந்தது உண்மை தான்.
ஆனால் இன்று காலையில் எடுத்துப் பார்த்த போது அவை செல்லாத காசுகளாக இருந்தன என்று சுருக்குப்பையில் இருந்த காசுகளைக் கொட்டினான்.
அவை அனைத்தும் செல்லாத காசுகள்.
உடனே ஊர்த்தலைவர் தீர்ப்பளித்தார்.
கஞ்சன், அப்துல்லா பணம் எண்ணும்போது பார்த்து அந்த சத்தத்தைக் கேட்ட காரணத்தால், பொற்காசுகள் 30 செல்லாக் காசுகளாக மாறிவிட்டது.
ஆக அவனுக்குத் தர வேண்டிய 15 பொற்காசுகள் போக, மீதி 15 பொற்காசுகளை அவன் அப்துல்லாவிற்குத் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
திருடனுக்குத் தேள் கொட்டியது போல, கஞ்சனால் ஒன்றும் பேச இயலவில்லை.
இது ஊர்த்தலைவர் மற்றும் அப்துல்லாவின் திட்டம் என்பதை உணர்ந்து கொண்டான்.
இப்படி மாம்பழங்களின் கதை சுவாரஸ்யமானது.
எனக்கும் சிறுவயது மாம்பழக் கதைகள் உண்டு.
எங்கள் வீட்டில் இருக்கும் போது அவ்வப்போது மாம்பழங்கள் உண்டாலும், கோடை விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டில் இருக்கும் சமயம், மாம்பழத்திற்கும், பருவகாலம்.
தினசரி மதியம் தயிர் சாப்பாட்டோடு மாம்பழம் நறுக்கிச் சாப்பிடும் தாத்தாவோடு நானும் பகிர்ந்து கொள்வேன்.
அவருக்கு சுகர் சமாச்சாரமெல்லாம் கிடையாது.
தினசரி மாம்பழம் கட்டாயம்.
தாத்தாவோடு சுற்றுலா சென்றிருந்தேன்.
தஞ்சைப் பெரிய கோவில் பார்த்து முடித்து வெளியே வந்த நேரம், அவர் என்னை யானை மீது சவாரி ஏறச் சொன்னார்
எனக்கோ அங்கிருந்த மாம்பழங்கள் கண்ணை உறுத்தியது.
தாத்தா , சவாரி வேணாம் , மாம்பழம் வாங்கித் தா என்று சொல்ல, அடப்பட்டிக்காட்டுப் பயலே, மாம்பழம் தினசரி சாப்பிடலாம்டா வெளியூர் வந்த நேரம் இந்த மாதிரி யானையெல்லாம் ஏறாம, மாம்பழம் தான் திம்பியா என்று கேலி செய்தார்
ஆனாலும் உடனே வாங்கித் தந்து விட்டார்.
ஆத்திரம் அடங்காத நான் அந்த மாம்பழத்தை எறிந்து விட்டு விறுவிறுவென ஓடிவிட்டேன்.
இதென்னடா முருகர் தான் மாம்பழத்துக்கு சண்ட போடுவாரு, இப்ப பிள்ளையார் ( எனது உருவ அமைப்பு) மாம்பழத்த எறிஞ்சுட்டுப் போகுது என்று என்னைத் துரத்திப் பிடித்து சமாதானப் படுத்துவதற்குள், எங்களோடு சுற்றுலா வந்திருந்து பாதி பேர் தண்ணி குடித்து விட்டார்கள்.
சமீபத்தில் ஒரு மாம்பழக்கதை .
என்னைப்போலவே என் மருமகளும் மாம்பழ விரும்பி என்பதால் மாம்பழங்களைத் தேடி வாங்கத் துவங்கினேன்.
பழமுதிர் நிலையங்களுக்குச் சென்றால் பல ரகங்களில் மாம்பழம் கிடைக்கிறது.
பங்கனப்பள்ளி, அல்போன்ஸா, மல்லிகா, இமாம் பஸந்த், செந்தூரம்,ஜவ்வாது, மல்கோவா இப்படி பல ரகங்கள்.
இத்தனை ரகங்களில் மாம்பழம் உண்டு என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
முதல் நாளில் அல்போன்ஸா எடுத்தாச்சு,
இரண்டாவது நாள் மல்லிகா எடுத்தேன்.
அல்போன்ஸா அளவில் சிறியது.
பார்த்தாலே தெரிந்து விடும்.
மல்லிகா மாம்பழமோ மற்ற ரகங்களைப் போலவே தான் இருந்தது.
ஆனாலும் பணம் செலுத்தும் இடத்தில் வேலை செய்த பிள்ளை அது என்ன ரகம் என்று கேட்காமலே பில் அடித்தது.
மல்லிகா என்று.
எனக்கு ஆச்சரியம்.
எப்படி மா இத மல்லிகா னு கண்டுபிடிச்ச என்று கேட்டதும்.
பழகிடுச்சு சார்.
நாங்க பாத்தாலே கண்டுபிடிச்சுருவோம் என்று சொல்ல, இந்த மாம்பழக் கதை எனக்கு இன்னொரு ஆச்சரியத்தை அறிமுகப்படுத்தியது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை.
சித்திரமும் கைப்பழக்கம் என்பது உணரப்பட்டது.
மாம்பழங்களின் கதை இதோடு நிற்கப்போவதில்லை.
சுகர், பிபி கல் வைத்துப் பழுத்தது, கெமிக்கல் கலந்தது என்பதை எல்லாம் மறந்து மனதார அவ்வப்போது ருசிப்போம்.
மாம்பழங்கள் எப்போதும் நம்முடன்…