Categories
சினிமா

டூரிஸ்ட் பேமிலி- திரை விமர்சனம்.

ஒரு நல்ல சினிமா சொல்லாமலே வெல்லும் என்று நிரூபித்திருக்கிறது, இந்த வாரம் சத்தமே இல்லாமல் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வாழ முடியாமல் அகதிகளாக தமிழ்நாட்டிற்குள் திருட்டுத்தனமாக எந்த வித அனுமதியும் இன்றி நுழையும் ஒரு குடும்பம் என்ன ஆனது எப்படி ஜீவித்தது என்பதே படத்தின் மையக்கதை.

அந்தக் குடும்பம் ராமேஸ்வரத்தில் நுழையவும், அங்கே ஒரு குண்டு வெடிப்பதும் என ஒரு மர்ம முடிச்சு படம் முழுக்க அந்தக் குடும்பத்தைப் பின்தொடர்கிறது.
ஆனால் திரைக்கதையில் அந்த விஷயத்தைப் பெரிது படுத்தாமல், யதார்த்தமாக ஒரு புதுக்குடும்பம் ஒரு பகுதியில் குடியேறி சுற்றத்தினரிடம் எப்படி நல்லவிதமாகப் பழகி அவர்களையும் ஒருவருக்கொருவர் மனித நேயமிக்கவர்களாக நட்பு பேணுபவர்களாக மாற்றுகிறது என்பதை முக்கிய பாகமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

அந்தக் குடும்பம் இலங்கையைச் சார்ந்தது, அவர்களின் உரையாடல் இலங்கைத் தமிழில் இருப்பதும், பெரும்பாலும் நகைச்சுவைக்கு உபயோகப்பட்டிருந்தாலும், இரண்டு காட்சிகளில் அந்த இலங்கைத் தமிழ் உச்சரிப்பை வைத்து நம்மை கண்கலங்க வைக்கிறார்கள்.

இது இலங்கைத் தமிழா ,மலையாளத் தமிழா என்று அடிக்கும் லூட்டிகளும், சிறப்பு.
இதையும் தாண்டி காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு தனிக்கவிதையாக இருந்ததே படத்தின் மிகப்பெரிய அழகு.

காவல்துறையின் இரண்டு விதமான முகம், பள்ளி ஆசிரியரின் இனிய முகம் , M.S.பாஸ்கர் கதாபாத்திரத்தின் அன்பான, ஏற்றத்தாழ்வு நினைக்காத, கடுமை கொண்ட முகம், பக்கத்து வீட்டுப் பெண்ணின் பாச முகம், வீட்டு ஓனர் இன்ஸ்பெக்டரின் அப்பாவி முகம், அவரது மகளின் வடிவு முகம், சசிகுமாரின் ஒப்பற்ற அன்பு முகம், சிம்ரனின் பொறுமை முகம், தவறு செய்தது தந்தையானாலும் கேள்வி கேட்பேன் என்று சண்டையிடும் மூத்த மகனின் கோப முகம், அப்பா அழாதப்பா என்று சமாதானம் செய்யும் இளைய மகனின் பாச முகம் ஆகியவை படத்தை தூக்கி நிறுத்திவிடுகிறது.

காட்சிகளாகப் பாராட்ட வேண்டும் என்றால் படத்தின் எல்லாக் காட்சிகளுமே சிறப்பு தான் என்றே சொல்ல வேண்டும்.

சசிகுமார் மன உளைச்சல் காரணமாக குடித்து விட்டு வந்து ரகளை ஆகும் காட்சி, அதனைத் தொடர்ந்து மீம்களில் இருந்து எடுக்கப்பட்ட கல்யாண நிகழ்வில் மம்முட்டியான் ஆடல், அதனைத்தொடர்ந்து வீட்டில் நடக்கும் குட்டி ரகளை என அந்தக்காட்சி ஒரு கவிதை..

பக்கத்து வீட்டுல் வாழும் குடிகாரப் பையன் ஒரு கட்டத்தில் மைக்கில் தனது ஆதங்கத்தைப் பேசி சசிகுமாரைப் பாராட்டும் காட்சி நெகிழ்ச்சி.

தான் தனக்கு உண்மையாக இருப்பவனுக்கு மட்டுமே வேலை தருவேன் என்றும், தன்னிடம் வேலைக்காரன், நண்பன் என மனிதர்களில் பாகுபாடு இல்லை என்று M.S.பாஸ்கர் நிரூபிக்கும் அந்த இரு காட்சிகள் அழகு.

மனிதநேயமிக்க போலீஸாக விமல் வரும் காட்சிகள் அத்தனையும் அருமையும் கலகலப்பும்

அதிலும் க்ளைமாகஸ் அட்டகாசம்.

அமைதியான தாயாக சிம்ரன் தன்னைச் சுற்றி நடக்கும், சுகம் , துக்கம், கோபம் , சந்தோஷம், கேலி இவற்றையெல்லாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு இனிய தாய் மாதிரி வாழ்ந்திருக்கிறார்.

நல்லவனாக நடிக்க சசிகுமாரைத்தேர்வு செய்திருக்கிறார்கள்…வேறென்ன வேணும்?

யோகிபாபு சிரிக்க மட்டுமல்ல ரசிக்கவும் வைத்திருக்கிறார்.நல்ல அண்ணனாக.

படம்தூள்..மனிதர்கள் ஒன்று கூடி மனிதநேயம் பாராட்டி வாழ்ந்தால் மகிமை என்பதை மீண்டும் காட்டிய அருமையான படம்.

நல்லவர்கள் கூடும் போது என்ற பாடல் இந்தப்படத்திற்கும் ஒத்துப்கோகும்.
குடும்பங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் திரும்ப ஆரம்பித்து விட்டது.

நல்ல படம் சொல்லாமல் வெல்லும்.

பத்துக்குப் பத்தையும் கொடுத்து விடலாம் தான்! கட்டாயம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.