சொர்க்கத்தில் இருக்கும் அன்பு தந்தைக்கு ,
அன்புடனும், வணக்கங்களுடனும் அன்பு மகன் எழுதும் கடிதம்.
நாங்கள் இங்கே தங்கள் பிரிவில் வாடுகிறோம்.
நீங்களும் அதுபோல எங்களைப் பிரிந்து வாடுகிறீர்கள் என்பதை அறிகிறோம்.
தங்களுக்கு கடந்த தை அமாவாசை அன்று காலை எள்ளு பிரசாதத்தை காலை உணவாக ஐயரிடம் மந்திரம் சொல்லி அனுப்பச் செய்தேன்.
வந்து சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.
கொரியர் ஆபிஸில் தருவது போல இவர்கள் ரசீது எதுவும் தருவதில்லை.
100 ரூபாய் வாங்கிக் கொண்டு மந்திரத்தை சொல்லிவிட்டு அனுப்பி விடுகிறார்கள்.அதனால்தான் தங்களிடம் நேரடியாக கேட்கிறேன்.
தங்களுக்கு நான் வாங்கி அளித்த எள் முழுவதுமாக கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
ஏனென்றால் மந்திரம் சொல்லும் வரிசையில் என் பக்கத்தல் முரட்டுத்தனமான ஆள் ஒருவர் இருந்தார்.
அவரது தந்தை எல்லாம் ஒரு வேளைக்கு 30 இட்லி சாப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்.
தங்கள் பங்கினை சரியாக கேட்டுப் பெறவும்..
பூலோகத்தில் எங்களுக்காக சரியாக சாப்பிடாமல் உழைத்தது போல , அங்கே யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டாம்.
தங்களுக்கு நேரமிருக்கும் போது, சிவன் , விஷ்ணுவிடம் சென்று எள்ளுக்கு பதிலாக வேறு ஏதாவது மாற்று உணவை இங்கிருந்து அனுப்ப ஏதாவது மந்திரம் இருந்தால் கேட்டு சொல்லுங்கள்.
தங்களுக்குப் பிடித்த மட்டன் குருமா எல்லாம் அங்கே நேரடியாக அனுப்புவதற்கு மந்திரங்கள் ஏதும் கிடையாதா?
ஐயர் சைவமாக இருந்தால் இருக்கட்டுமே.
போஸ்ட்மேனுக்கு பிடித்த பார்சலையா நாம் நம் சொந்தங்களுக்கு அனுப்ப முடியும்?
அப்படியும் இல்லாவிட்டால் மதியம் பள்ளிக் குழந்தைகள் வீட்டிற்கு வந்து சாப்பிடுவது போல, அமாவாசைக்கு அமாவாசை இங்கே வந்துவிடுங்கள்.
நல்லா கறி எடுத்து சாப்பிட்டு, நாலு சிவாஜி படம் பாத்துட்டு போங்க.
இப்படி கூட்டமா வரிசையில நின்னு பெயர்கள மாத்தி மாத்தி ஒளப்பி மந்திரம் சொல்லி, உங்களுக்கு அது சரியா வந்து சேந்திருக்குமானு எங்களுக்கு சந்தேகமாவுல்ல இருக்கு.
அப்புறம் இந்த மந்திரம் தமிழ் ல என்னனு கேட்டு சொன்னிங்கன்னா நான் படிச்சு நானே சொல்லி உங்களுக்கு பார்சல் அனுப்பிருவேன்ல..
அன்னைக்கு காலையில வேலைக்கு போகனும்னு அவசரமா 5 மணிக்கு எந்திரிச்சு கோவிலுக்கு போயிட்டேன்.கோவில் ஐயர் 7 மணிக்கு வர்றாரு.
அதுவும் புல்லட்ல ..
சாமிக்கு சைக்கிள், பூசாரிக்கு புல்லட் லாம் இப்ப உண்மையாயிடுச்சுப்பா.
இப்படி அமாவாசைக்கு அமாவாசை போயி வரிசையில அடிச்சு பிடிச்சு கொடுத்தனுப்புறோம்.
அடுத்து வரிசையில நிக்கிறவன் எல்லாம் வெறிக்க வெறிக்க பாக்குறான்
நீங்க சாப்புடறது ஒடம்புல ஒட்டுமா?
இது லாயக்கிப்படாதுப்பா..
பேசாம பர்மிஸன் வாங்கிட்டு வந்துடுங்க.
இல்லாட்டி இந்த டெக்னாலஜி ய மாத்திட்டு வேற ஏதாச்சும் டெக்னாலஜி கண்டுபிடிக்க சொல்லுங்க.
செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் லாம் போகுதுப்பா…இன்னுமும் பழைய சுவாஹா, தானா?
நாம நேரா கனெக்ட் ஆகுறதுக்கு வேற ஏதாச்சும் டெக்னாலஜி இன்ட்ரொடியூஸ் பண்ண சொல்லுங்க..
அன்புடன் மகன்.
சிவன், விஷ்ணுவை கேட்டதாக சொல்லவும்…அடுத்து கொரோனா போன்ற கொடிய நோய்கள் அனுப்ப வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளவும்.
கொரோனா வந்தா கோயிலையும் தானே மூடுறாங்க..
ஏன் எல்லாரும் கஷ்டப்படனும்?
அடுத்த அமாவாசைக்கு புது டெக்னாலஜி வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன்…