சில நல்ல சினிமாக்களை நாம் திரையில் தவற விடுவோம். காரணம், அந்த சினிமாக்கள் வந்த காலத்தில் வரும் வேறு பெரிய சினிமாக்களோ, அல்லது நமக்கு மிகவும் பழகிப் போகாத நடிகர்களோ நடித்திருந்திருக்கலாம்.
அப்படி இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு வெளிவந்த லெவன் என்ற படம் சத்தமே இல்லாமல் பலர் மனதைக் கவர்ந்து இன்றும் திரையிலும், ஓடிடி தளத்திலும் வெற்றி நடை போடுகிறது.
படத்தைப்பற்றி ஆஹா , ஓஹோ என்று சமூக வலைத்தளங்களில் பலர் புகழ்ந்து தள்ளியபோது எனக்குள் ஒரு உந்துதல் ஏற்பட்டது, வார நாட்களிலாவது எப்படியாவது இந்தப் படத்தைப் பார்த்து விடலாமா என்று.
ஆனாலும் சமூக வலைத்தளங்களின் விளம்பரத்தை மட்டுமே முழுதாக நம்பவும் முடியவில்லை, எனக்கு போதுமான நேரமும் அமையவில்லை.
ஓடிடி இல் வெளியானதை அறிந்ததும் மற்ற படங்களைப் போலவே பாதி பாதியாகப் பிரித்து ஓரிரு நாட்களில் இந்தப்படத்தையும் பார்த்து விடலாம் என்று எண்ணினேன்.
என் எண்ணத்தைப் படத்தின் திரைக்கதை உடைத்தது.
இரவு 9 மணிக்குத் துவங்கி 11.30 மணி வரை முழுப் படத்தையும் பார்க்காமல் எழுவதில்லை என்ற ஆர்வத்தை இந்தப்படத்தின் திரைக்கதை தூண்டியது.
“இந்தப்படத்துல இருக்கிற சஸ்பென்ஸ் உங்கள திருப்திபடுத்தலனா லைஃப் டைம் செட்டில்மென்ட் டா” என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் புகழப்பட்டதும், தொடர் கொலைகாரன் அடுத்த கொலையை மாட்டிக் கொள்ளாமல் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் நம்மில் இந்தக் கதை உருவாக்கியது தான் இந்தப்படைப்பின் வெற்றி.
11 கொலைகள், யார் யாரை எதற்காகக் கொல்கிறார் என்பது கதை.
இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற தொடரில் நடித்துப் பிரபலமான நவீன் சந்திரா இதிலும் மிடுக்கான காவல் உதவி ஆணையராக வருகிறார்.
அவரின் தோற்றமும் , மிடுக்கும் காவல் ஆணையர் வேடத்திற்குப் பொருத்தம்.
என்னை அறிந்தால், வேட்டையாடு விளையாடு பாணியில் இரண்டு காட்சிகள் இருந்தது .
ஆனாலும் கூட, பரவால, நம்ம ஆளுக்கு இது ஓகே தான் என்ற ரீதியில் நவீன் சந்திரா நம் மனங்களை வென்று விட்டார்.
பொதுவாக கொலை நடந்தால் இறந்தவர் யார் என்பதாவது தெரியும்.
ஆனால் இந்தப்படத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால், கொலை செய்யப்பட்டது யார் என்பதை அறிந்து கொள்ள முடியாமலே காவல் துறை திணறுவது .
அதன்பிறகு அந்த வழக்கை நமது கதாநாயகன் கையில் எடுத்த பிறகு சிறிது சிறிதாக முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.
பிறகு கொலை செய்யப்பட்டவர்கள் யார், எதற்காக கொலை செய்யப்பட்டனர் என்பதை நாம் அறிந்து கொள்ளும் போது , நமக்கு கொலையாளி மீது பரிதாபம் உருவாகிறது.
நியாயம் அவர் பக்கம் இருப்பதாகவே உணர்கிறோம்.
இந்தப் படத்தில் இதைத் தாண்டி நாம் எதையாவது பேசினாலோ, வெளிப்படுத்தினாலோ சுவாரஸ்யம் காணாமல் போய் விடும்.
நல்ல படம்
அனைவரும் ரசிக்கலாம்.
தற்போது சில திரையரங்குகளிலும், ப்ரைம் ஓடிடி தளத்திலும்.