Categories
கருத்து நினைவுகள் மறைவு

அப்பாக்களுக்காக..

If u want to be a role model, be a father or a teacher..
அனுபவித்த வாசகம்…


மழைக்கால மாலை பொழுதுகள் கொடுத்த அறிவும், அனுபவமும் ஏராளம்..


மழைக்கால மாலை நேரத்தில் மட்டுமே அப்பா  வீட்டில் இருப்பது வழக்கம்.. வெளியே போக முடியாது என்பதால் மட்டுமே வீட்டில் இருப்பார். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு வேலையை செய்ய மிதிவண்டியை மிதித்துக் கொண்டிருப்பார், நாங்கள் சுகமாக வாழ்வதற்காக.

இப்போது போல அப்போதெல்லாம் பெரிதாக செலவெல்லாம் செய்ததில்லை.. வீட்டு வாசலில் வந்து அமர்ந்து விடுவோம்…


All India Radio ம், Doordarshan ம் மட்டும் இருந்த காலம்..
சுக்காபி… சுக்காபி..என்று தெருவில் மிதிவண்டியில் சுக்காபி வியாபாரம் வரும்.
ஏலேய் சுக்காபி வாங்கவா? என்று என்னிடம் கேட்பார்.


வேணாம்பா…என்றுதான் சொல்வேன் என்பது தெரிந்தும் கூட.
வழக்கமான கேள்வி, அதற்கு வழக்கமான பதில்..


இருந்தாலும் கேள்வி கேட்பார்.. என்றாவது ஒரு நாள் சுக்காபியின் அருமையை உணர்ந்து, வேண்டும் என்று சொல்வேன் என்ற நம்பிக்கையுடன்.என்னையும் ஒரு பொருட்டாக நினைக்கிறார் என்று உணர வைப்பதற்காகவும்.


வேண்டாம் என்று சொன்னாலும், மருந்துக்கு கொஞ்சம் குடித்து தான் ஆக வேண்டும்…

சுக்காபி காரரை உடனடியாக அனுப்பி விட மாட்டார்.
அவரிடம் ஆரம்பிக்கும் நையாண்டி.. என்ன 2 ரூபாய்க்கு டம்ளர்ல தரீங்க? சொம்பு நிறைய தரலாம்ல?


அதன்பிறகு எப்படியும், சொந்த பந்தம், பக்கத்து வீட்டுக்காரர் என்று ஒரு பெரிய  களேபரம் நடக்கும். யாராவது ஒருவர் வழியில் வந்து வாயாடத் துவங்கிவிடுவார்கள்.ஏனென்றால் எல்லா நாளும் எல்லாரும் சந்தித்துக்கொள்ள வாய்ப்பு அமையாதல்லவா!


இதற்கிடையில் அமெரிக்க ராக்கெட் முதல் அமைச்சர் ஊழல் வரை பல கதைகள் ஓடும்..

என் வயதுக்கு ஏற்ற, அதனை மீறி நான் புரிந்து கொள்ள இயலாத காரியங்களை விளக்குவார்.


எனக்குத் தெரிந்து நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்…ஒரே ஒரு கேள்வி தவிர. ஏம்ப்பா இறந்து போனீர்கள்?என்பதைத் தவிர.


அதையெல்லாம் எங்கே படித்தார் என்பது தெரியவில்லை..


அவர் வெறும் பத்தாம் வகுப்பு தான்… அதன்பிறகு தொழிற்கல்வி….


நான் பழகி, அனுபவித்த முதல் அறிவாளி…
உறங்கும் வரை ஓயாத பேச்சு..
சொட்டரும், குல்லாவும் தராத கதகதப்பு, அவர் அருகில் படுத்து பேசும் போது கிடைத்தது..

தூக்கம் வரும் வரை ஓயாத கேள்வி…
பொறுமையாக பதில் சொன்னார், என்பதை விட பாசமாக பதில் சொன்னார் என்பதே உண்மை..


காலம் ஓடுகிறது.. முன்பு இருந்தது இன்றில்லை…இன்று நான் கேள்வி கேட்க விரும்பினாலும் பதில் சொல்ல அவரில்லை.

ஆனால் எப்படி வாழவேண்டும்? இந்த சூழலில் எப்படி தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்?
இதையெல்லாம் முன்னரே சொல்லியிருக்கிறார்.. மண்டையில் உரைக்கவில்லை.. கூடவே தான் இருப்பார்,எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்  என்ற குருட்டு நம்பிக்கை…


மழைக்கால மாலைப் பொழுது…
சுக்காபி, சொட்டர், குல்லா.. அனைத்தும் இருக்கதான் செய்கிறது…
கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருக்கிறது…
என்றாவது பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது…


சோகங்கள் சுமை தான்..நினைவுகள் சோகம் என்றால், சோகமே சுகம்…

அப்பா என்பது வெறும் வார்த்தையல்ல.

என் அப்பாவைப் பற்றி நான் எழுதிய தனிப்பட்ட கருத்து தான் என்றாலும், அதை வாசித்தபோது அவரவரின் அப்பாவைப் பற்றிய சிந்தனையும்,மகிழ்ச்சியும் மனதில் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

இழந்த பிறகு பதறித் தேடுவதை விடுத்து இருக்கும் போதே பாசத்தைக் கொட்டி பொண்டாடி விடலாமே?

தந்தையர் தினம் முடிந்து போனது.

தந்தை கூட இல்லையே என்ற ஏக்கத்தைத் தவிர தந்தையர் தினத்தில் வேற எந்த சிந்தனையும் எழவில்லை.

தந்தை உயிரோடு கூட இல்லை என்றாலும் உணர்வோடு கூடவேதான் இருக்கிறார் என்பதையும் உணர வைத்தார்.

நினைவுகள் வாசகர்களின் அன்புத்தந்தைகளைப் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதற்காக..

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.