பலதரப்பட்ன உணவு மற்றும் அதன் சுவை என்பது இப்போது பெரிய பேசுபொருளாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களான யூடியூப் ,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என எங்கு சென்றாலும், இந்த உணவுப் பிரியர்களின் அட்டகாசம் தாங்க இயலவில்லை.
மிக யதார்த்தமாக ஆரம்பித்த இந்த உணவுப் பிரபலத்துவமும் விளம்பரமும் இப்போது கடும் போட்டியாகிப் போனது.
காலையில் அவசரமாகக் காலைக்கடன் கழிப்பதற்காக பொள்ளாச்சி அருகிலுள்ள தோப்புக்குச் சென்று பிறகு குளிப்பதற்காக சிறுவாணி பக்கம் வரும் வழியில் ஈரோடு நகரிலே உள்ள ஐயப்பன் உணவகத்தைப் பற்றி அறிந்தேன் என இவர்கள் லூட்டி தாங்க இயலவில்லை.
அப்படியே பொழுது போகாம மெட்ராஸ் ல இருந்து பாண்டிச்சேரி பக்கமா நடந்து போனப்ப, இந்த காமாட்சி மெஸ் கண்ணுல பட்டதுங்க என்று வசனம் பேசுகிற போது நமக்கு ஆத்திரங்கள் தான் வந்து சேருகிறது.
இதையெல்லாம் இப்போது வெளிப்படையாக சொல்லியும் செய்யத் துவங்கி விட்டார்கள்.
பின் கோட் சீரிஸ், ஃபைண்டிங் தி பெஸ்ட் டிஷ் என்று என்னனவோ சொல்லிக் கொண்டு எங்கெங்கோ அலைந்து திரிந்து அந்த சாப்பாடு அப்படி இருக்கு, இந்த சாப்பாடு இப்படி இருக்கு, இது வேற லெவல்ல இருக்கு, இது செம்மையா இருக்கு என்று இவர்கள் பேசும் பேச்சு யப்பப்பபா..
யாருமே சாப்புடுற பொருளோட விலை என்னனு சொல்ல மாட்டீங்களாடா என்று வசைகள் கிளம்பிய பிறகு சில மாற்றங்கள்.
நான் இன்னைக்கு 100 ரூ க்குள்ள சாப்புட போறேன்
30 ரூ க்கு இங்க பிரியாணி இருக்கும்.
10 ரூ க்கு இங்க ஐஸ்க்ரிம் இருக்குனு அது ஒரு விதமான ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஆனாலும் இன்றும் பல சேனல்கள், சாப்பிடும் சாப்பாட்டின் விலையை வாய் திறந்து சொல்வதில்லை.
ஒர்த் ங்க என்று மட்டுமே சொல்லி முடிப்பார்கள்
ஒர்த் என்றால்? எவ்வளவு?
சொத்தை எழுதித் தந்து விடலாமா?
இதில் அவர்களுக்கு வருமானம் வருகிறது,
அல்லது பொழுதுபோக்காகக் கூட செய்யலாம்.
நாம் அவர்களை வசை பாடப் போவதில்லை.
அவர்கள் காணொளி பகிர்ந்தால், நமக்கு பார்த்தாக வேண்டிய கட்டாயமா?அப்படி ஒன்றும் இல்லை..
மேலும் அவர்கள் தரும் உணவுப் பட்டியலின் சுவை பற்றிய தகவல் அனைத்தும் உண்மையதாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை.
சற்று மிகைப்படுத்திய தகவலாக இருக்கலாம்…ஆம் முன்னர் சொன்னபடி சும்மா செம்மையா இருக்குனு சொல்லும் அளவுக்ககெல்லாம் நான் இன்னும் எங்கேயும் சாப்பிடவில்லை.
தேடித் தேடி எல்லாம் சாப்பிடும் பழக்கமோ, வழக்கமோ இல்லை..அதுவும் உணவகங்களில் உணவு விற்கும் விலைக்கு , வயிற்றில் ஈரத்துணி கட்டி வாழ்ந்துவிடலாமா என்று கூட எண்ணம் வரும்.
குடும்பத்தோடல்லாமல் தனி ஆளாக நகரில் வாழும் ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 200 ரூ இல்லாமல் ஓரளவு திருப்பியாக சாப்பிட முடியாது..
அப்படி இருக்கும் பட்சத்தில் இங்கே விளம்பரம் தேவைப்படுவது ருசிக்காகவோ அல்லது லட்சங்களில் சம்பாதிக்கும் பெரிய உணவகங்களுக்காகவோ அல்ல.
உணவு என்று பேசத்துவங்கினால் இன்றளவிலும் , உணவு கிடைத்தால் போதும் என்று எத்தனையோ குழந்தைகள் உட்பட பலர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதற்காக , உலகில் இன்னொருவர் கஷ்டப்படும் காரணத்தால் நான் சந்தோஷமாக இருக்கக் கூடாதா என்று கேட்க வேண்டாம்.
நபிகள் அழகாக ஒரு விஷயம் சொல்லியிருப்பார் , அனாதைப் பிள்ளைகளின் முன்னே உங்கள் பிள்ளைகளைக் கொஞ்சாதீர் என்று.
நாம் மகிழ்ச்சியாக இருப்பது, தேடிச் சோறு திண்பதெல்லாம் நமது உரிமை , சுதந்திரம்.
அதேபோல, நமது சக ஜீவன் சோறு இல்லாமல் கஷ்டப்படும் போது, அதுகளுக்கு ஒரு சின்ன பசியாறலுக்கு நாம உதவி செய்யலாமே!
ஆம், சாப்பிட்ட பிறகு மிச்சமான உணவை பக்குவப்படுத்தி அதை சுற்றித்திரியும் விலங்குகளுக்கு கொடுக்கலாம்.
சிறிது அதிகபட்சம் தவறுதலாக மிச்சமாகிப் போனால், யாராவது ஒரு ஆதரவற்ற ஆளுக்கு அந்த சாப்பாட்டைத் தரலாம்.
தற்போதைய சூழலில் அதிகம் பகிரப்பட வேண்டிய விஷயம், சிக்கனம் , சேமிப்பு மற்றும் பகிர்த்துண்ணல்…
ஆனால் இங்கே செலவுக்கான காரணிகள் மட்டுமே படுஜோராக பரப்பப்படுகிறது.
எங்க சாப்பிட்டா செம்மையா இருக்கும் என்று தேடி தேடி சாப்பிடுவது ஒரு எல்லைக்குள் இருந்தால் நமக்கும் நமது ஆரோக்கியத்திற்கும் , பணத்திற்கும் நல்லது.
மேலும் மனதில் எப்போதும் பகிர்துண்ணல் என்ற நல்லெண்ணம் இருப்பது உலகிற்கு நல்லது.
புலியைப் பார்த்து நம்ம உடம்புல கோடு இல்லையே என்று பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக,, அவர்களைப் பார்த்து நாமும் தேடித் தேடி உணவு சுவைக்கத் துவங்கினால், நமது உடலும், பொருளாதாரமும் தாங்குமா என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.