பிரதி எடுக்க முடியாத அசல்.
அவரைப்போல ஆயிரம் பேர் அறிவுரை கூறலாம்..
அவரைப்போல அக்கறை காட்ட கூட ஆள் வரலாம்..
அவரது அன்பு போலவே சிலர் அன்பு காட்டலாம்..
ஆனாலும் அவர் அவர்தானே?
என்றுமே நகல் எடுக்க இயலாத அசல்..
ஆயிரம் ஆயிரம் கவிஞர்கள் புகழ்பாடினாலும், பல்லாயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்டு கவிதை நூலாக கோர்த்தாலும் அவரின் பெருமையை ஈடு செய்ய இயலுமோ?
இவர்தான் அவர்,நமக்காப அவர் செய்தது இதுதான் என யாராவது விளக்கிட இயலுமோ?
இவர் இல்லாதிருந்தால் நம் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் ? என நினைத்துப் பார்த்தால், அய்யய்யோ?
நம் அறிவும் அவர்தானே?
நம் ஆற்றலும் அவர்தானே?
நம் உயிர்த்துடிப்பும் அவர் தந்த வரம்தானே?
அவரிலிருந்து வந்தவர்கள் தானே நாம்?
அவரின்றி நாம் ஏது?
எத்தனை முறை அதட்டியிருப்பார்?
அத்தனை முறையும் நாம் தவறு செய்ய விழைந்திருக்கிறோம்..
எத்தனை முறை தண்டித்திருப்பார்?
அத்தனை முறை நாம் தவறு செய்திருக்கிறோம், திருந்தியிருக்கிறோம்..
இன்று நாம் ஒழுங்காக வாழ காரணம் அவரின்றி யாரோ?
அவர் செய்தது எல்லாம் சரி..
அவர் வாழ்ந்தததே நமக்காகந் தானே?
அவரை உணராமல் எத்தனை முறை அவரை உதாசீனம் செய்திருப்போம்?
அத்தனையையும் மீறி நமக்காக வாழ்ந்த உயிர்..
அப்பா!
அவர் அவர் மட்டும் தான்..
அப்பா என்பவர் வரம்.
வாழ்க்கையில் எந்தவொரு சூழலிலும் நாம் கலங்கிப்போகும் தருணத்தில் ஆறுதல் சொல்ல எத்தனை நபர்கள் இருந்தாலும் , மனதைரியம் என்பது அவரால் மட்டுமே தர இயலும்.
ஒரு 27 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனை குழந்தை போல வளர்க்கும் 60 வயது தந்தையை நான் பார்த்து உண்டு.
அந்த அன்பின் உருவம் இறந்தபின்பு அந்த இளைஞரை அவனது தாயும், சகோதர, சகோதரிகளும் ஏதோ காப்பகத்தில் சேர்த்தாக தகவல்.தாயால் கூட முடியாத விஷயத்தை தந்தை செய்து கொண்டிருந்தார்.
எத்தனை உறவுகள் இருப்பினும் மனம் வருந்தி நிற்கும் தருணத்தில் “தந்தை இன்று இருந்திருந்தால்” என்ற எண்ணம் வருவது தவிர்க்க இயலாத ஒன்று.
நாம் தவறான பாதையில் செல்லும் போது தடுப்பு அரணாகவும், தடுமாறி கீழே விழும்போது கைகொடுத்து தூக்கும் பாதுகாவலனாகவும் எத்தனையோ நபர்கள் வரலாம்
ஆனால் அவர் மாதிரி என்பது என்றுமே அவராகாதே!
என்ன போன்ல சத்தத்தையே காணோம், வேலை செய்ற எடத்துல ஏதும் பிரச்சினை இல்லையே?
நீ யார்ட்டையும் சண்ட ஏதும் போட்டியா?
மேலதிகாரினா அப்படித்தான் நாய் மாதிரி தான் விழுவான்.
நாங்க எல்லாம் எல்லாத்தையும் தாண்டி தானப்பா வந்துருக்கோம்
எங்க போனாலும் ஏதாவது விஷயம், இல்ல யாராச்சும் ஒருத்தர் நமக்கு இடைஞ்சல் கொடுக்க தான் செய்வாங்க..
என்ற அதட்டல் அன்பை அப்பாவால் மட்டுமே தரமுடியுமல்லவா?
சம்பளம் போடலியா, சரி போன மாச சம்பளத்த என்ன செஞ்ச, நான்லாம் உங்கம்மாவ கட்டும் போது 3000 ரூவா தான் சம்பளம்..அத வச்சிக்கிட்டு உங்களையும் வளக்கலியா?
தினம் 30 கிமீ சைக்கிள்லயே போகலியா.
சூழ்திலைக்கு தகுந்த மாதிரி பழகிக்கனும் என்று சொல்லி முடிக்கும் போதே நம் வங்கி கணக்கில் நம் செலவுக்கு பணம் வந்திருக்கும்.
பாத்து செலவு பண்ணு , உன்கிட்ட சொல்லி சொல்லி வாய்தான் வலிக்குது என்று அதட்டலுடன் போனை கட் செய்வாரே , அந்த போன் கால் அப்பா இல்லாமல் வேறு யாரால் செய்ய முடியும்?
அப்பா இல்லாதவனைப்பார்த்தாலும் மனவேதனை தான்.
அப்பா இருப்பவனைப் பார்த்தாலும் மனவேதனை தான்.
இவனுக்கும் அப்பா இல்லையே என்றும்…
இவனைப்போல் நமக்கு இன்று அப்பா கூட இல்லையே என்று..
எத்தனை முறை எத்தனை பேர் என்ன சொல்லி நம்மை சாந்தப்படுத்தினாலும் அப்பாவின் இழப்பு என்ற கொதிப்பை நம் மனதிலிருந்து என்றுமே நீக்க முடியாது தான்.
அதுவும் குறிப்பாக மனமுடைந்து நொந்து தவிக்கும் போது அப்பாவின் நினைவுகள் முள்ளாய் குத்தி கிழிக்கும்..
எதற்காக அவர்கள் நம்மை விட்டு வெகுதூரம் சென்றார்களோ?
நம்மை நாமே பார்த்துக்கொள்வோம் என்ற நம்பிக்கை இன்னும் பிறந்து விட்டதோ?
அப்படி ஒருபோதும் அவர்கள் நம்ப மாட்டார்களே?
காலத்தின் கட்டாயமோ?
இல்லை கடவுளின் உத்தரவோ?
எத்தனையோ கேள்விகள் நம் மனதில்.
பதில் சொல்ல அவர்கள் இல்லை நம்மருகில்.
ஏதேனும் வடிவத்தில் நம்மிடம் திரும்ப வருவார்களோ?
வந்துவிடுங்கள் அப்பாக்களே!
வாழ்க்கை எனும் படகை கடக்க துடுப்பாய் வந்துவிடுங்கள்.
மற்றவர்கள் அவரை பிரதிபலிக்கலாம்..
அவரை ஈடு செய்ய இயலுமோ?
நிச்சயம் இல்லை!
அப்பா- வாழ்வின் அஸ்திவாரம், அங்கீகாரம், உத்தரவாதம்,
இதற்கு மேல் வார்த்தைகள் கிடைக்கவில்லை!