கையிலிருக்கே தங்கம் கவலை ஏன்டா சிங்கம் ?
இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்திருப்போம்.
ஏழை, நடுத்தர, மற்றும் மேல்தட்டு நடுத்தர மக்களின் சேமிப்பு என்பதே பெரும்பாலும் தங்கமாகத்தான் இருக்கும்.
இந்த வகையறாவில் யாரும், ஷேர்களையோ, பாண்டு பத்திரங்களையோ, வங்கியில் பெரிய தொகையையோ சேமிப்பாக வைத்துக் கொள்வதை விட, வீட்டில் இருக்கும் பெண்களின் பெயரைச் சொல்லி, உனக்குன்னு இவ்வளவு நகை, நாளைக்குப் பிள்ளைய கல்யாணம் பண்ணிக் கொடுக்க இவ்வளவு நகை என்று பார்த்துப் பார்த்து தங்க நகைகளைத் தான் பெரிய சேமிப்பாக வைத்திருக்கிறார்கள்.
இந்தப்பிரிவு மக்களுக்கு ஏதாவது ஆத்திர அவசரம் என்றால், தங்கள் ஆபரண நகையை அடமானம் வைத்து அந்தப் பணத்தை வைத்து தங்களது தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு , திரும்ப சிறிது சிறிதாக அந்தப் பணத்தை வட்டியும் முதலுமாக அடைத்து விட்டு மீண்டும் அந்த நகையை மீட்டு வீட்டு அலமாரியில் வைக்கும் போதோ, அல்லது தன் கையில் கழுத்தில் அணியும் போதோ ஏற்படும் அந்த உணர்வு ,வார்த்தைகளால் விளக்க இயலாது.
மருத்துவ அவசரச் செலவில் துவங்கி வீட்டில் ஒரு நல்ல காரியம் செய்ய, பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த என எண்ணற்ற பல அவசரத் தேவைகளுக்கு இந்த நகை அடமானம் தான் நடுத்தர மக்களின் முதல் தோழன்.
பெரும்பாலான விவசாயிகள் ஒவ்வொரு விதைத்திலின் போது வீட்டிலிருக்கும் பொன்னை அடகு வைப்பதும், தங்கள் வயலில் பொன்னான விளைச்சல் கிடைத்த பிறகு அந்த நகைகளை மீட்பதும் வழக்கம்.
இந்தக் காரணத்தினால் தான், அவர்களுக்காக விவசாய நகைக் கடன் என்ற வட்டி குறைவான சிறப்புக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நகைக்கடன் திட்டத்தில் வாராக்கடனாக 11 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்து விட்டதாகவும், முந்தைய ஆண்டை விட இது 27 சதவீதம் அதிகம் என்பதால் இந்திய ரிசர்வ் வங்கி நகைக் கடன் திட்டத்தில் சில அதிரடி நடவடிக்கைகளைக் கொண்டு வந்தது.
நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன்.
நகை அந்த உரிமையாளருக்குச் சொந்தம் என்பதற்கான சான்று சமர்ப்பித்தல்.
ஒரு வருடத்திற்குள்ளாக நகையை மீட்டுவது.
இதுதான் இங்கே கேள்விக்குறி.
என் சொந்தக் கதையைப் பொறுத்த வரை என்னுடைய 3 சவர மதிப்புள்ள பிரேஸ்லட் , எனது திருமணத்தில் பரிசாக எனது ஆச்சி வழங்கியது.
அதற்கான ரசீதுகள் ஏதும் என்னிடமில்லை..
அதை எனது அவசரத் தேவைக்காக ஒரு லட்ச ரூபாய்க்கு அடகு வைக்கிறேன்
இப்போது ரிசர்வ் வங்கி கொண்டுவரும் திட்டத்தால் எனக்கு இரண்டு பிரச்சினை.
ரசீது இல்லாக் காரணத்தால் இனி நான் அதை அவசரத் தேவைக்கு அடகு வைக்க இயலாது.
அப்படி அடகு வைக்கும் பட்சத்தில் ஓராண்டிற்குள் வட்டியோடு சேர்ந்து ஒரு லட்சத்து சொச்ச ரூபாயைக்கட்ட வேண்டும்
அதற்கு வழியில்லாமல் தானே கடன் வாங்குகிறன்?
அது இருந்தால் நான் பிரேஸ்லட்டைப் போட்டு மினுக்கிக் கொண்டு அலைய மாட்டேனா?
இப்படி மக்களை இக்கட்டில் ஆழ்த்தும் கட்டாய நடைமுறை இப்போது வேண்டாம் என்று அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை ஒத்தி வைத்திருப்பது நல்லது.
அதேபோல, இரண்டு லட்ச ரூபாய்க்குக் குறைவாகக் கடன் பெறும் மக்களுக்கு இதுபோன்ற விதிமுறைகள் வேண்டாமென வெங்காய விலையேற்றம் பற்றிக் கவலை கொள்ளாத மத்திய அமைச்சர் கவலை கொண்டிருப்பது இன்னும் சிறப்பு.
இதை எதர்த்துக்குரல் கொடுத்த தமிழக அரசியல்வாதிகள் மற்றும், இதற்கு ஆட்சேபனை தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய தமழக முதல்வருக்கும் நன்றிகள்.
மக்கள் மீண்டும் சேட்டுக் கடைகளில் சக்கிக் கொள்ளாமல் இருந்தால் சரி.