பூசாரிக்கு அலங்காரம் செய்யத் தெரியாவாட்டால், கருவறையில் இருக்கும் கடவுள் கூட அலங்கோலம் தான்.
ஆனாலும் கடவுள் எப்போதும் கடவுள் தான்..கல்லாகப் பார்த்தால் கல்.சிலையாகப் பார்த்தால் சிலை.
அப்படி ஒரு அற்புதமான சிலை தான், இப்போது தொடர்ச்சியாக அலங்கோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொதுவாக கமலஹாசன் படங்கள் என்றால் ஓரிரு நாட்களிலும், நானே சினிமாவிற்குத் தனியாகப் போக ஆரம்பித்த பிறகு முதல் நாளிலும் படம் பார்த்து விடுவேன்.
பின்புலமும் காரணமும் இல்லாமல் இல்லை.
என் தந்தையும் சரி எனது அண்ணனும் சரி தீவிரமான கமல் ரசிகர்கள்.சிறுவயதில் என்னவோ எனக்கு ரஜினி அவர்களின் ஸ்டைலைஐப் பார்த்து அவர்மீது அபிப்ராயம் இருந்தாலும் வயதாக ஆக, கமலஹாசன் அவர்களின் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது.
பொதுவான கமல் ரசிகர்களைப் போல, சினிமாவின் ஆண்டவராக அவரைக் கண்டு வியக்க ஆரம்பித்து விட்டேன்.
எனக்கு மிகப்பெரிய விவரமில்லா வயதில் வெளியான ஆளவந்தான் படமே முதல் நாள் தான் பார்த்தேன்..
அதன்பிறகு பம்மல் கே சம்பந்தம், தெனாலி ராமன், வேட்டையாடு விளையாடு,உத்தம வில்லன், உன்னைப்போல் ஒருவன், மன்மதன் அம்பு, விஸ்வரூபம் 1 & 2, பாபநாசம் தசாவதாரம்,தூங்காவனம், விக்ரம், என பல படங்களை முதல் நாளே பார்த்த ஞாபகம். இந்தப் படங்கள் நேர்மறை எதிர்மறை என எப்படியான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் , நான் இவற்றை மிகுந்து ரசித்திருந்தேன்.எனக்கு இவையெல்லாம் என்றைக்குமே பிடித்த படங்கள் தான்.
வசூல் ராஜா, விருமாண்டி, அன்பே சிவம், போன்ற படங்களை நான் திரையரங்கில் சென்று ரசிக்க இயலவில்லை ஆனால் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கண்டிப்பாக எத்தனை முறையானாலும் அமர்ந்து ரசிப்பேன்.
இன்னும் பல படங்கள் எனக்கு சரியாக ஞாபகத்தில் இல்லாமல் போயிருக்கலாம்.
இந்தியன் 2 ஆம் பாகம் தி்ரையரங்கில் முதல் நாள் சென்று ஆர்வத்துடன் அமர்ந்த எனக்கு பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இந்தியன் 1 ன் தொடர்ச்சியும், அந்த கதாபாத்திரத்தின் மகிமையும் சீரழிக்கப்பட்டிருந்தது போன்ற எண்ணம்.
ஒரு கமலஹாசன் ரசிகனாகவும், இயக்குநர் ஷங்கரின் அபிமானியாகவும் எனக்கு அந்தப்படம் ஒரு மனநிறைவைத் தரவில்லை.
மாறாக இந்தப் படத்திற்கு எதற்காக இரண்டாம் காட்சி பார்த்து நம் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டோம் என்ற வெறுப்பைத் தந்தது.
அதேபோலத்தான் இந்த தக் லைஃப் படமும்.
இந்தியன் 2 ஆவது நான் படம் பார்த்து வெறுப்பும் ஏமாற்றமும் அடைந்தேன்.
ஆனால் தக் லைஃப் படம் , கமலஹாசன், மணிரத்னம் கூட்டணி என்று படத்தின் முன்னோட்டம் வந்தபோதே என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை.
எனக்கு மணிரத்னத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது.கண்டிப்பாக இந்தப் படம் குப்பையாகத் தான் இருக்கும் என்று.
போதாக்குறைக்கு கமலஹாசன் , சிம்பு என்ற இருவருக்குமான கெட்ட நேரமும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு படுமோசமான படமாகத்தான் வெளிக்கொணரும் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த காரணத்தாலோ என்னவோ, நான் படத்திற்கு முன்பதிவு செய்வதில் கூட ஆர்வம் காட்டவில்லை.
வாரம் ஒரு படம் போவோமே , அதுபோல இந்த வாரம் தக் லைஃப் என்ற முடிவில் பொறுமையாக 4 நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை மாலைக்காட்சி பதிவு செய்தேன்.
அப்போதும் கூட, மெட்ராஸ் மேட்னி என்ற படம் ஒருவேளை இந்தப் படத்தை விட நல்ல படமாக அமைந்து விடுமோ, தேவையில்லாமல் நாம் இந்தப்படத்திற்கு பணவிரயம் செய்ய வேண்டாம் என்று தோன்றியது.
நான் நினைத்தது போலவே தான் இது குப்பைப் படமாகவும், அது நல்ல தரமான படமாகவும் மக்களிடையே பெயர் பெற்றது.
சரி பரவாயில்லை கமலஹாசனுக்காக இந்தக் கன்றாவியைப் பார்த்துத் தொலைக்கலாம் என்று முடிவெடுத்து ஞாயிறு மாலை படத்திற்குத் தயாரானோம்..ஆனால் யாரும் பெரிதாக ஆர்வத்தோடில்லை.
படத்திற்கு போகாமல் விடலாமா என்ற உடனே, உனக்குப் பரவாயில்லையா உங்காளு படம் என்ற கேள்வி வந்தது.
இல்ல வேண்டாம், பரவால, நான் மறுபடியும் ஒரு ஏமாற்றத்தை விரும்பவில்லை என்று தக் லைஃப் படத்தின் முன்பதிவை ரத்து செய்து விட்டேன்.
இன்று மெட்ராஸ் மேட்னி என்ற நல்ல படத்திற்காக முன்பதிவு செய்திருந்தேன்.
மழை.தாமதம். அதுவும் போக முடியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை ஏன் அந்தப் படத்திற்கு நான் முன்பதிவு செய்து தொலைத்திருந்தேன் என்ற கோபம் தான் இப்போதும் வருகிறது.
தக் லைஃப் என்ற ஒரு படம் வராமலேயே இருந்திருக்கலாம் என்றுதான் கோபம் வருகிறது.
இதில் தவறு யாருடையது?
படர எடுத்தவரா? நடித்தவரா?
பணம் போட்டவரா?
ஒரு மெகா கூட்டணி பல ஆண்டுகள் கழித்து ஒன்றுகூடும் போது , அந்தக் கூட்டணியின் மீது மக்களுக்கான எதிர்பார்ப்பு எப்படியெல்லாம் இருந்திருக்கும்..அந்த எதிர்பார்ப்பை நினைத்தாவது ஒரு நல்ல தரமான படத்தைத் தந்திருக்கலாம் இந்தக் கூட்டணி.
அப்படி இல்லாமல் மணிரத்னம் அவர்களின் சமீபத்திய பொன்னியின் செல்வன் -2, செக்கச் சிவந்த வானம்,காற்று வெளியிடை போன்ற படங்களைப் பார்த்து கமலஹாசன் இந்தப் படத்தில் ஒப்புக் கொண்டிருக்காமல் போயிருக்கலாம்.
எது எப்படியோ, கமலஹாசன் என்பவர் கேலிப் பொருளல்ல.
அவர் ஒரு தனிச்சிறப்பானவர்.
இன்று நாம் வியந்து பார்க்கும் பல விஷயங்களுக்கு முன்னோடி அவர்தான்.
ஆரோ 3டி சவுண்ட் , ஓடிடி ஒளிபரப்பு முறை என்று சினிமாவில் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்த சினிமா ஆண்டவர் இவர்தான்.
இவர் தற்போது AI முறையில் சினிமா தயாரிப்புப் பற்றி பயில்வதாக அறிகிறோம்.
அப்படி ஒருவேளை இவரது மருதநாயகம் வெளிவந்தால் இவரை மிஞ்ச எவருமில்லை.
இப்போதும் அப்படித்தான் என்றாலும் இவரது சில தோல்விகளின் காரணமாக இவர் மீதான வசை அதிகம்.
எத்தனை காயம்பட்டாலும் சிங்கம் சிங்கம் தான்.
கோவணத்தோடு இருந்தாலும் கடவுள் கடவுள் தான்.
ஆண்டவா நீ மீண்டு வா.
உனக்காக உன்னை ரசிக்கக் காத்திருக்கும் ரசிகர்களில் ஒருவனாக.