நாம் எந்த அளவிற்கு சுய சிந்தனையோடு வாழ்கிறோம்?
எந்த அளவிற்கு சமூக ஊடக இன்ப்ளூயன்சர்களால், ( தனக்கான பரத்யேகமான செல்வாக்கை உருவாக்கியவர்கள்) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம் என்பதை மீண்டும் இந்த கூமாப்பட்டி விஷயம் நமக்கு நிரூபித்து விட்டது.
விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி சட்டத்திற்குப் புறம்பான வேகத்தில் ஓட்டுபவனைத் தலைவன் என்று கொண்டாடியது நமது இளைய சமுதாயம்.
அதில் எத்தனை பேரின் தந்தை, ஓட்டுநர்கள் அன்றாடம் தமது உயிரைப்பணயம் வைத்து வாழ்வாதாரத்தைத் தேடுபவர்கள் என்பது தெரியவில்லை.
எதற்காக ஒருவர் பிரபலமாகிறார் என்பதே விளங்க இயலவில்லை.
இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்குபவனை அத்தனை பேர் ஏன் ரசிக்கிறார்கள்?
ஏதாவது முறையான பந்தயத்தில் அப்படிச் செய்தால் கூட அதை ஒரு தொழில் என்று மதிக்கலாம்.
அதைப்போலவே சமீபத்தில் ஒரு கதை.
கூமாப்பட்டி.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜஸ்டின் ரூடோ, எலான் மஸ்க் ஆகியோர் அடுத்த முறை இந்தியா வந்தால் முதலில் கூமாப்பட்டி ஐலேண்டுக்குத் தான் போக வேண்டும் போல.
அந்த அளவிற்குப் பிரபலமாகி விட்டது.
ட்ரம்ப்பும், எலான் மஸ்க்கும் கூமாப்பட்டி குளத்தில் குளித்தால் இருவருக்குமான பிரச்சினை தீர்ந்து இருவரும் சமாதானமாகி விடுவார்கள் போல.
ஏங்க….இங்க வாங்க..
என்னாங்க இது தண்ணி, சர்பத் மாதிரி இருக்கு?
ஆர்லிக்ஸ் மாதிரி இருக்கு.
லவ் பெயிலியரா , கூமாப்பட்டி வாங்க, சக்ஸஸ் ஆயிடும் என்று ஒருவர் சமூக ஊடக இடுகை பதிவிட்டதால் பல பேர் அங்கே படையெடுக்கத் துவங்கிவிட்டனர்.
இது மிகப்பிரபலமாகவே, பொதுப்பணித்துறை தனது சமூக ஊடகத்தில் ஏங்க கூமாப்பட்டி வராதீங்க என்று பதிவுகளை இட்டது.
செய்தி சேனல்களும் இதை உறுதிபடுத்தியது.
அந்த நபர் , தன் நண்பர்கள் குற்றாலத்திற்குக் குளிக்கக் கூட்டிச் செல்லவில்லை என்ற கோபத்தில் சொந்த ஊரில் குளித்து அதைப் பதிவிட்டாரோ, அல்லது உண்மையிலேயே பிளவக்கல் அணை பராமரிக்காமல் இருப்பதை பொதுவெளியின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகச் செய்தாரோ தெரியவில்லை.
ஆனால் எவன் என்ன சொல்வான், நாம என்ன செய்யலாம் என்று காத்திருந்த ஒரு அணி கூமாப்பட்டிக்குப் படையெடுத்தது என்ன அறிவீனம்?
இத்தனை வசதிகள் கையிலிருந்தும் ஒருவர் பேச்சு ஒரு கூட்டத்தை முட்டாளாக்குமெனில் நமக்கு எதற்கு இத்தனை வசதி வாய்ப்புகள்?
சிந்தித்துச் செயல்படு என்று சொல்லித் தந்த கல்வியை மறந்து நாம், இப்படி சமூக ஊடக இடுகைகளால் முட்டாள்கள் ஆக்கப்படுவதற்குத் தான் இத்தனை முன்னேறிய கல்வியைப் பயின்றோமா?.
ஏங்க கொஞ்சம் திருந்துங்க..