LKG என்ற படத்தில் ,
RJ பாலாஜி, ஒரு காதல் ஜோடியைப் பிரிக்க, அவர்கள் இருவரின் அலைபேசிகளை ஒரு இரவு பரிமாற்றம் செய்யச்சொல்வார்.
அதையே படமாக எடுத்த, லவ்டுடே படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதே போல, லக்கி பாஸ்கர் படத்தில் ராம்கியும், துல்கர் சல்மானும் பிச்சைக்காரர்களை வைத்து ஒரு திருட்டு வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள்.
அதையே முழுப்படமாக நாகார்ஜூனையும், தனுஷையும் வைத்து எடுத்தால் படம் பட்டாசாக வரும் என்று நினைத்து எடுத்து விட்டார்கள்.
எடுத்ததெல்லாம் சரிதான்,ஆனால் ரொம்ப எடுத்து விட்டார்கள். படத்தின் நீளம் ஸப்பா…முடியல டா என்ற அளவுக்கு சோதித்து விட்டது.
படத்தின் முக்கிய சாராம்சம் இது தான்.
ஆனால் அதன் பயணப்பாதை தான் , கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் செல்வது போல, மிகப்பெரிய நீளமாக அமைந்து விட்டது.
படத்தின் வில்லன்களுக்கு விளக்கம், நாகார்ஜூன் சிறையில் இருப்பதற்கு ஒரு விளக்கம், சிறையில் இரண்டு மூன்று காட்சிகள், சுனைனா வந்துபோக வேண்டும் என்பதற்காக வைத்தது போல இருந்தது. பிறகு அவர் நேர்மையை உதறிவிட்டு வில்லன்களிடம் சேர்வது.
பிச்சைக்காரர்களை வைத்து திருட்டு செய்ய யோசனை . அந்தப் பிச்சைக்ககாரர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக, இரண்டு காட்சிகள்.
தனுஷ் பிச்சைக்காரர் தான் என்பதை நாம் நம்ப வேண்டும் என்பதற்காக ஒரு திணிக்கப்பட்ட விபத்துக் காட்சி.
படத்தில் தனுஷ்க்கான அறிமுகக் காட்சியும் அதுவே.
அறிமுகக் காட்சியே திணிக்கப்பட்ட ரகத்தில் சேர்ந்து விடுகிறது.
பாக்யராஜ் வருகிறார். ரஷ்மிகா வருகிறார்,, போகிறார், கதாநாயகனுடனே ஓடுகிறார்.
ஆனால் எதற்கு என்பது தான் விளங்கவில்லை.
படத்தில் கதாநாயகி என்று யாராவது இருக்க வேண்டும் என்று அவரை சேர்த்துக் கொண்டதால் அவருக்காக சில காட்சிகள் .
இப்படி படத்தில் ஏகத்துக்கு காட்சிகள்.
பல காட்சிகள் தேவையே இல்லாதவை.
நேர்கோட்டில் நீளம் குறைவாக, படம் பேச வந்த கதையை மட்டும் பேசியிருந்தால் பலரது மனதைக் கவர்ந்த நல்ல படமாக அமைந்திருக்கும்.
தனுஷ் நடிப்பில் பின்னிவிட்டார் என்றெல்லாம் சொல்வதற்கு இந்தப் படத்தில் அவருக்கு அவ்வளவு அபாரமான காட்சிகள் ஏதுமில்லையே?
பிச்சைக்காரர்களாக வந்து பினாமியாக மாறுபவர்களுக்கு ஒன்றுமே தெரியக் கூடாது என்று மெனக்கெடும் வில்லன் கூட்டம், தனுஷை வைத்துக் கொண்டே பதிவாளரிடம் பெட்டி பெட்டியாகப் பணம் தருவதும்.
அந்த ஆள் இறந்து பல நாட்களாக ஆன பிறகும் கூட,அந்த குடியிருப்பின் காவலாளிக்கு அது தெரியாமல் இருப்பதும், சாவியைக் கொடுத்து விட்டு வீட்டில் என்ன நடக்கிறது என்பதையே கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவையெல்லாம் அபத்தமான காட்சிகள்.
தனது விவரங்கள் தெரிந்த காரணத்திற்காக பிச்சைக்காரர்களையே கொல்லத் துணியும் வில்லன், நாகார்ஜூனை மலை போல்,நம்புவதும்.
அவர் வந்து தேடிய உடனே கிடைக்கும்படியாக தான் செய்த ஊழலுக்கான மொத்த தரவுகளையும் ஒரு கணினியில் வைத்திருப்பதும் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.
போய் வா நண்பா என்ற பாடல் நல்லா இருந்தாலும் கூட, அது வந்து அமைந்த காட்சி , வெறியேற்றும் ரகம்.
இறுதிக்காட்சி இதைவிட சோதனை.
வில்லனைத் தெருத் தெருவாகப் பிச்சையெடுக்க வைத்து அதற்குப் பயிற்சி
கொடுத்து , யப்பா போதும் தாங்காது என்று நாம் கடுப்பாகும் வரை அந்தக்காட்சி நீள்கிறது.
அதன்பிறகு சட்டென்று படம் முடிகிறது.
அந்த வில்லனுக்கு அப்பா ஒருவர் இருப்பதை மறந்து விட்டார்கள் போல.
எப்படி தனுஷ் பெயரில் 10000 கோடி இருந்தாலும் அவரால் அதை அனுபவிக்க இயலாதோ,அதேபோல படத்தில் நல்ல நடிகர்கள் இருந்தாலும், படம் பார்க்கும் ரசிகர்கள் பிச்சைக்காரர்கள் தான்
அள்ளிக் கொண்டாட ஒன்றுமில்லை.
நாகார்ஜூனாவுக்கு கடைசி ஒரு சண்டைக்காட்சி.
தனுஷூக்கு அது கூட இல்லை.
ஒருமுறை சலிப்போடு பார்க்கலாம்.
குபேரா- பிச்சை