சுய ஒழுக்கம், மனசாட்சி என்பதையெல்லாம் மறந்து விட்டால்,மனிதனுக்கும், கொடிய மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
படித்தவன், படிக்காதவன், அவனது பின்புலம், பூர்வீகம் என்பதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே அல்ல.
முள்செடியில் மலரும் உண்டு, பூக்களில் விஷமும் உண்டு என்பதைப் போல, ஒரு மருத்தவர் கேவலம் 25 சவரன் நகைக்காக ஒரு இளம்பெண்ணை துடிக்கத் துடிக்க மூச்சடைத்துக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தி நமக்கு மிகுந்த மனவேதனையத் தருகிறது.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு இளம்பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு ஆண் நண்பருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
அந்தப்பெண் இறப்புக்கு, அப்போது அந்தப் பெண்ணுடன் வாழ்ந்து வந்த அந்த நபர் தான் காரணமாக இருந்திருக்கலாம் என்று சந்தேகித்த போலிசாருக்கு அதில் ஏமாற்றம்.
அந்தப் பெண் அதற்கு முன்பு தொடர்பிலிருந்த மருத்துவர் ஒருவரின் பேரில் சந்தேகம் ஏற்படவே அவரைப் பின் தொடர்ந்து அவர்தான் குற்றவாளி என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அந்த மருத்துவர் அந்தப் பெண்ணோடு சில காலம் வாழ்ந்திருக்கிறார்.
கொலை செய்யும் முன்பு வரை அவ்வப்போது அவருடன் தொடர்பிலும் இருந்திருக்கிறார்.
அந்தப்பெண்ணின் நகை இருப்புகளைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கிறார்.
சமயம் பார்த்து அந்தப் பெண்ணைக் கொன்று விட்டு நகைகளைத் திருடி இருக்கிறார்.
அந்தப் பெண்ணின் கொலைப்பழி தற்போது அந்தக் பெண்ணோடு தொடர்பிலிருக்கும் வேறு ஆசாமிகள் மீது விழிந்திடும் என எதிர்பார்த்திருக்கக் கூடும்.
சற்று சிந்தித்துப் பார்த்தால் ஒரு கௌரவமான பணியிலிருக்கும் ஒருவர், தனது இளம் வாழ்க்கையை தனது பணி நேரத்திற்காக எவ்வளவு செலவிட்டு எவ்வளவு உயர்கிறார் என்பதைத் தாண்டி மனிதாபிமானத்தோடு வளர வேண்டிய மருத்துவர், இப்படி கொடிய மிருகம் போல கொலை செய்திருப்பது அருவருக்கத்தக்கது.
சரி அடுத்தது அந்தப் பெண்ணின் கதைக்கு வரலாம். இதில் நாம் ஏதாவது நியாயம் சொன்னால் பிற்போக்குவாதியாகவோ, பெண்ணியத்துக்கு எதிரான ஆளாகவோ மாறிடுவோம்.
அந்தப்பெண் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறை பற்றிய விமர்சனம் அந்த நாளிதழிலேயே இருந்தது. திருமணம் செய்யாமல் ஆண் நண்பரோடு தங்குவது என்றாலும், சில காலத்திற்கு ஒருவர் என்று மாறி மாறி தங்குவது, விரோத உணர்வைத் தானே தூண்டும்?
திருமணம் செய்த கணவன் என்றால் அந்த உறவுக்காக மதிப்புத் தருவார்.
முன்பெல்லாம் இங்க என்ன அவுத்துப் போட்டா ஆடுறாங்க என்பது பெருமையான வசனம்.
இப்போதெல்லாம் அப்படித்தான் டா ஆடுவேன், அது என் விருப்பம் என்று ஆகிவிட்டது.
அது எங்களுக்கான சுதந்திரம் அதைப்பற்றிப் பேச நீங்கள் யார் என ஆகிவிட்டது.
ஆனால் நேற்று இந்தச் செய்தியை வெளியிட்ட தினசரியில், இதைப் படிக்கும் போது, இன்னொரு விஷயமும் கட்டம் கட்டிப் போடப்பட்டிருந்தது.
அந்தப் பெண்ணின் அலைபேசியை போலீஸார் சோதனைக்காக, பயன்படுத்திய போது, தொடர்ச்சியாக, அழைப்புகளும், குறுந்தகவல்களும், நீ இன்று பிஸியா, ப்ரீயா என்பது போல.
சுதந்திரம் என்பது ஒழுக்கத்தை மீறுவதல்ல.
ஒழுக்கத்திற்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு பிறரைத் தொந்திரவு செய்யாமல், ஒவ்வொருவரும் சமமான அவரவருக்கான இடைவெளியைப் பெற்று வாழ்வது.