படைத்தலைவன்
இல்லை படை தலைவன் என்று தான் பெயரிட்டிருக்கிறார்கள்.
இரண்டு பெயர்ச்சொல் ஒன்றிணையும் போது இடையில் வல்லினம் மிகுந்து படைத்தலைவன் என்று தான் இது இருந்திருக்க வேண்டும்.
என்ன காரணத்தாலோ, வல்லினத்தை விட்டு விட்டார்கள்.
அதேபோலத்தான் படமும். சில விஷயங்களை விட்டு விட்டார்கள்.
படத்தின் மூலக்கதை என்பது என்பதை சூசகமாக இறுதிக்காட்சி வரை நமக்கு சொல்லவே இல்லை. அந்த மூலக்கதையை பற்றிய காட்சிகளை படத்தின் ஆரம்பத்தில் ஏதும் காட்டியிருந்தார்களா என்று தெரியவில்லை. நான் சிறிது தாமதமாகத்தான் படம் பார்க்கத் துவங்கினேன்.
ஒருவேளை படத்தின் முக்கியக் கருத்தைப் பற்றிய விஷயத்தை முதல் காட்சிகளில் காட்டி, இதை நோக்கித்தான் படம் பயணிக்கிறது என்று ஒரு தெளிவுபடுத்தியிருப்பார்கள் எனில் படம் ஓரளவு நல்ல படம் என்றே சொல்லலாம்.
ஆனாலும் கூட திரைக்கதையின் ஓட்டத்தில் நாம் இந்தப்படத்தை ஒரு வளர்ப்பு மிருகம் தொலைதல் பற்றியும், மீண்டும் அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் கதாநாயகனின் முயற்சி என்ற கோணத்தில் தான் பார்க்க முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து விக்ராந்த் அவர்கள் நடித்த பக்ரீத் படத்தில் ஒட்டகத்தை வளர்த்து, பிறகு அதனைப்பிரிந்து மீண்டும் வட இந்திய மாநிலங்களுக்குச் சென்று அதைத் தேடும் கதை.
இந்தப்படத்திற்கும் அந்தப் படத்திற்கும் ஆறு வித்தியாசம் தான். கதாநாநகன் நாயகி,
ஒட்டகத்துக்கு பதிலாக யானை, சண்டைக்காட்சிகள், பாடல்கள், கதாபாத்திரங்கள்.
மற்றபடி படம் இரண்டுமே ஒரே படம் தான்.
இந்தப்படத்தில் யானை வளர்க்க என்னென்ன ஆதாரங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதை கொஞ்சம் தெளிவாக விவரித்திருக்கிறார்கள்.
படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாமே ஏதோ செயற்கைத்தனமாக நடித்தது போல ஒரு உணர்வு இருந்த காரணத்தால் கதையோடு ஒன்றிணைய இயலவில்லை.
மேலும் கதாநாயகனுக்கும் இன்னும் முகபாவனைகள் சரிவர அமையவில்லை. எல்லாவற்றுக்குமே இதன் ரியாக்ஷனா என்ற எண்ணம் வருகிறது.
ஆனால் உடலை முருக்கேற்றி வைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அப்பனுக்குப் பிள்ளை என்பதை கம்பீரமாக நிலைநாட்டுகிறார்.
நல்ல கதையம்சமும், சிறிது மெருகேற்றிய நடிப்பும் இருந்தால் இவர் சினிமாவில் மிகப்பெரிய வலம் வரலாம்.
இந்தப்படத்தில் இரண்டாவது பாதியில் வரும் சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தது.
கேப்டன் வரும் காட்சியில் திரையரங்கில் ஆராவாரம் .
ஆனால் கேப்டனுக்கு அழகே கம்பீரம் தான். சற்று மெனக்கெட்டு அந்தக் காட்சியை மெருகேற்றியிருக்கலாம்.
படத்தில் பல குறைகள்.
குறைகளைக் கண்காணித்துக் களையெடுத்தால் கதாநாயகனும் சரி, இயக்குனரும் சரி ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்.