Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

2026ல் தளபதியா? தளபதியா? – முதல் பாகம்.

கதை கேட்டு, அதில் சிறப்பானதைத் தெரிவு செய்து, ராப்பகலாக உழைத்து, சிறந்த படைப்பாளிகள் மற்றும் உழைப்பாளிகளைக் கொண்டு சீர்படுத்தி, விளம்பரப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களே சமயங்களில் நாம் எதிர்பார்ப்பது போல நல்ல விதமாக அமையாமல், தோல்வியில் சென்று முடியும் போது, அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும்?

எம்ஜிஆர் அரசியலில், வென்று மாபெரும் சாதனைகளைப் படைத்தது உண்மை தான் என்றாலும், அவரது சமாகால நடிகரான சிவாஜி கணேசன் அரசியலில் படுதோல்வி அடைந்தார்.

அதேபோல, சரத்குமார் அவர்களும் தான் நினைத்து போல , அரசியலில் பெரிய சாதனைகளைப் படைக்க இயலவில்லை.
அதற்கான காரணம், அந்தந்த சூழ்நிலைகளும், அவர்கள் போட்டியிட்ட தொகுதி மக்களின் மனநிலையும் என்று கூடச் சொல்லலாம்.
எம்ஜிஆர் முதல்வர் ஆன காலத்தில், மக்களுக்கு சினிமா மீதான மிகப்பெரிய ஈர்ப்பும், எம்ஜிஆர் மீதான பேரன்பும் ஈடு இணை இல்லாத ஒன்று.

மேலும் அவர் எளிதாக அரசியலுக்குள் வந்து விடவில்லை.
அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற மிகப்பெரிய அரசியல் சானக்கியர்களிடம் பாடம் படித்து மாணவனாக உள்ளே நுழைந்து அரசியலில் ஆசானாக ஆனவர்.

மக்களின் அன்றைய வசதிக்கும் சூழலுக்கும் அவர்களை எளிதாக திருப்தி படுத்த இயன்றது.

குழந்தைகளுக்கு செருப்பு போன்ற திட்டங்களையும், காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு என்ற பெயரில் விரிவுபடுத்தியும் மக்களிடையே தனக்கிருந்த ஏகோபித்த அன்பை தக்கவைத்துக் கொண்டு முடிசூடா அரசனாக கோலோச்சினார்.

அவரைப் போலவே பெருந்திரளான மக்களின் அன்பைப் பெற்ற நமது கௌரவத்திற்குரிய கேப்டன் , தனது முதல் தேர்தலிலேயே , 10.5 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் கூட, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

அவரது விருப்பமில்லாவிட்டாலும் தற்கால அரசியல் தேவைக்கேற்ப கூட்டணி அமைத்து , எதிர்கட்சியாக அமர்ந்து சட்டசபையில் கர்ஜித்தார்!.

ஆனாலும் கடைசி வரை அவரால் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியவில்லை.

வட தமிழ்நாட்டின் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட வன்னியர் சாதியைப் பின்னனி பலமாகக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரோ, அவரது மகனோ கூட தனித்து நின்று வெல்ல இயலவில்லை.

ஈழப் போரை பின்னனியாகக் கொண்டு தமிழ் தேசியம் என்ற கொள்கையை வைத்து பெரும்பாலான இளைஞர்களை ஈர்த்த திரு.சீமான் அவர்களும் இதுவரை ஒரு MLAதொகுதியைக் கூட வெல்ல இயலவில்லை.

ஆனால் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

இன்றைய அரசியல் சூழலை கொள்கைளும் மக்களின் தேவைகளும் மட்டுமே தீர்மானிப்பது அல்ல.

பணம் பிரதானமாகிப் போனது.

ஓட்டுக்கு எவ்வளவு?
அவ்வளவு தூரம் வெற்றி வாய்ப்பு என்பது மறுக்க முடியாத உண்மையாகிப் போனது.

தற்போதைய சூழலில் , தமிழ்நாட்டின் பாஜக மீதான வெறுப்பு ,பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைந்த காரணத்தால், அந்தக் கூட்டணிக்குப் பெரிய வாய்ப்பு இல்லை.

பாஜக கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்கள், சாமி முருகர் மாநாடு , இராணுவ வீரர்கள் என்று பேசிப் பேசி கொஞ்சம் கொஞ்சமாக இங்கே வாக்குகளை வாங்கிக் கொண்டிருப்பது ஒரு புறம் இருந்தாலும் இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரிய வாக்கு வங்கி இல்லை…கூட்டணி காரணமாக கனிசமான இடங்களைப் பெறலாம்.
மற்றபடி வேறொரு பெரிய வித்தியாசம் நிகழ்ந்துவிடுமானால் அது பணம் விளையாடினால் மட்டுமே நிகழும்.

தொடர்ந்து ஆராய்வோம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.