வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று ஒரு சொல்லாடல் உண்டு.
அது பிறரை பழித்து, ஏசி, தேவையில்லாமல் பொய் பேசக் கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட சொல்லாடல்.
இன்று இணையதளம் இருக்கிறது, பேசுவதற்கு, எழுதுவகற்கு மிகவும் சௌகரியமாகவும், எளிமையாகவும் இருக்கிறது என்பதற்காக பலரும் தாம் நினைப்பதை வகை தொகை இல்லாமல் பேசியோ எழுதிய விடுகிறார்கள்.
இதில் பல பேர் தங்களுடைய சுய விவரத்தில் இல்லாமல் போலி அடையாளங்களுடன் இணையத்தில் உலா வருகிறார்கள்.
இதில் சமீபத்தில் பேசு பொருளாகி இருப்பது அகமதாபாத் விமான விபத்தில் அத்தனை பேரும் உயிரிழந்த நிலையில் இவர் ஒருவர் மட்டும் எப்படி பிழைத்தார்?
விமானத்தின் அவசர கால கதவை அவ்வளவு குறிப்பிட்ட நேரத்திற்குள், அவ்வளவு எளிதாகத் திறந்து ஆயிரம் டிகிரி வெப்பநிலையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைத் தாண்டி எப்படி இவர் உயிர் பிழைத்தார் வெளியே வந்தார்?
அவசர கால கதவு வெளிப்பக்கமாகத் திறக்கும், அது விமானம் ஓடும் போது காற்று விசையில் திறக்க இயலாது, என்று விஞ்ஞானிகளாகவும், அறிவாளிகளாகவும், புலன் விசாரணை அதிகாரிகளாகவும் தங்களைத் தாங்களே யூகித்துக் கொண்டு, இந்த சம்பவம் இப்படி இருக்கலாமோ, அப்படி இருக்கலாமோ, அவர் பொய் சொல்கிறாரோ, ஏதேனும் சூட்சமம் இருக்குமோ என்று தங்கள் விருப்பத்திற்கு கருத்துகளைப் பதிவிடுகின்றனர்.
வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமென்றால், “ஏன்டா, நான் பொழச்சது ஒரு குத்தமாடா?” என்று தான் அவர் கேட்க வேண்டும்.
இந்த மாதிரி ஆட்களுக்கு துணை போகிறவர்களும், இந்த மாதிரி ஆட்களும் இதைப்பற்றி நாம் பேசினால் நம்மிடம் வரிந்து கட்டிக் கொண்டு அதிகபட்சம் என்ன கேட்பார்கள் என்றால், நீ மட்டும் ஒழுங்கா? சினிமா பற்றி அரசியல் பற்றி, நடப்பு நிகழ்வுகளைப்பற்றி கருத்து சொல்ல, விமர்சனம் செய்ய உங்களுக்கெல்லாம் எப்படி உரிமை உள்ளதோ அதுபோலத்தான் நாங்கள் பேசுவது எங்கள் சுதந்திரம் என்பார்கள்.
சினிமா விமர்சனம் என்பது ஒரு படத்தை பணம் கொடுத்துப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும், அந்தப் படம் நன்றாக உள்ளது , இல்லை என்று சொல்ல உரிமை உண்டு. அதுபோல வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும், குடிமக்களுக்கும் ஆட்சியை விமர்சிக்கும் உரிமை உண்டு.
ஆனால் இதுபோன்ற போலித் தகவல்களை, இட்டுக்கட்டி பேசுவதை, தப்பாக சித்தரித்துப் பேசுவதை இந்த வரிசையில் சேர்க்க இயலாது. இது பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்று பேசுவது மூடத்தனம்.
இதைவிட முக்கியமான ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நல்லவேளை பிழைத்தவர், இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் அல்ல. அப்படி இருந்திருந்தால், அவர்தான் இந்த விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்று ஒரு பெரிய புரளியே இங்கு பரவியிருக்கும் என்ற ரீதியிலும் மக்கள் இணையப்பக்கங்களில் தமது கருத்துகளைப் பதிவிடுகிறார்கள்.
இது என்னவோ உண்மைதான் என்றே தோன்றுகிறது.
ஏனென்றால் வகை தொகையில்லா மத துவேஷங்களும் இங்கே தான் பரவலாக உள்ளதே!
இதெல்லாம் நாமாக முன்வந்து திருந்தாவிட்டாலொழிய எதுவும் மாறாது.
தேவையானதை, நல்லதை மட்டுமே பேசினால் என்றும் நலமே, எல்லாம் நலமே!