Categories
கருத்து குட்டி கதை

நல்லதுக்குக் காலமில்லை.

படித்ததில் பிடித்தது!

சமீபத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் பேசப் போயிருந்தேன்.பேசுவதற்கு முன்னால் என்னைத் தனி அறையில் உட்கார வைத்திருந்தார்கள்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவர்தான் தமிழ் டீச்சராக இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் தயக்கத்தோடு பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று என்னைப் பார்த்து,

“சார் எங்க ஸ்டூடன்ட்ஸ் லிட்டரரி காம்பெடிசன்ல சூப்பரா கவிதை எழுதியிருக்காங்க . படிக்கிறீங்களா?”

என்றார். எனக்கும் பொழுது போக வேண்டுமென்பதால் ” கொடுங்க” என்று சுரத்தில்லாமல் சொன்னேன். அவர் வெளியே போய் நீலநிற ஃபைலை எடுத்து வந்தார்.

” ‘நிலா’ ன்னு தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னோம் சார். இவங்க மூணு பேருந்தான் சூப்பரா எழுதியிருந்தாங்க ”

” என்ன படிக்கிறாங்க?”

“ஸிக்ஸ்த் டு நைன்த் சார் “

“ஏன். டென்த் டு ட்வெல்த் என்னாச்சு?”

” அவங்களையெல்லாம் பிரின்ஸிபல் மேம் ஸ்டடிஸ்ல மட்டும் கான்சட்ரேட் பண்ணச் சொல்லிட்டாங்க சார்”

“சாப்பிடவாவது விடுவீங்களா?”

என் கிண்டல் அவருக்குப் புரியவில்லை.

” நல்ல ஹெல்த்தி அண்டு ஹைஜீனிக் ஃபுட் தரச் சொல்லி பேரன்ட்ஸ்ட்ட ஃபோர்ஸ் பண்றோம் சார். ஆனா அவங்க சரியா கோ ஆபரேட் பண்ண மாட்டேங்குறாங்க சார் .”

என்று சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குப் பின் அவர் பேச்சை கவனிக்காமல் கவிதைகளைப் புரட்டினேன். மூன்றில் ஒன்று’ நீலவான் ஆடைக்குள் மறைத்து’ என்கிற பாரதிதாசன் கவிதை. ‘.இன்னொன்று ‘வண்ணதாசனின்’நிலா பார்த்தல் ‘ கவிதை. மூன்றாவது கவிதையும் சொந்தச் சரக்கில்லை..உள்ளூர் கவிஞரொருவர் எழுதித் தந்ததாயிருக்கும் என்று ஊகித்தேன்.அந்த
டீச்சரிடம் ” இது வண்ணதாசன் கவிதைன்னு தெரியாதா?” என்று நிதானமாய் கேட்க
அவர் ரொம்ப அப்பாவியாய் ‘யார் சார் அது? ‘ என்று வினவவும் மனதிற்குள் என்னையே நொந்தபடி அமைதியாகி விட்டேன். அடுத்த தாளைக் காட்டி ,

” பாரதிதாசன் எழுதுன ‘நீலவான் ஆடைக்குள் கவிதை கூட உங்களுக்குத் தெரியாதா?”

லேசான எரிச்சலோடு கேட்டேன்.

” பாரதிதாசன் தெரியும் சார். அவர் பாவேந்தர். புதுச்சேரியில் பிறந்தவர். குயில் என்ற இலக்கிய இதழை நடத்தியவர். 1964 ல் இறந்தார். ஆனா இது அவர் கவிதையா?இதைப் படிச்சதில்ல சார் “

செய்தி வாசிக்கிறவரின் தோரணையில் எந்திரத்தனமாய் பதில் வந்தது.

” நீங்க எங்க படிச்சீங்க ?” ‘

“கரஸ்லதான் சார். ட்வெல்த் முடிச்சதும் கல்யாணம் ஆயிருச்சு. வீட்டுக்காரர் வாத்தியார் சார். அவருதான்,தமிழ் எடுத்தா கஷ்டப்படாம டிகிரி வாங்கிடலாம்னு சொன்னாரு.அதான் சார் இதைப் படிச்சேன். ஆனால், ஸ்கூல் படிக்கறப்பல்லாம் எனக்கு தமிழ்னா அலர்ஜி சார் ..”

நான் ஒரு நிமிடம் அரசுப்பள்ளிகளின் தரமின்மை குறித்துப் பொளந்து கட்டும் சில அறிவுஜீவிகளை நினைத்துக் கொண்டேன்.

”சரி . ஒரு ஹெல்ப் செய்றீங்களா?நீங்க ரிஜக்ட் பண்ண கவிதைகளை இங்க எடுத்துட்டு வர முடியுமா?ப்ளீஸ் . “

“எதுக்கு சார் ? “

”பொழுது போகனும்ல”

“ஓகே சார் “

இப்போது வெளியே போனவர் ஒரு பேப்பர் கட்டையே கையில் கொண்டு வந்திருந்தார். 20 கவிதைகளாவது இருக்கும். பெரும்பாலான மாணவர்கள் நிலா நிலா ஓடி வா’ பாடலையே தாளில் எழுதி வைத்திருந்தனர். ஒரு மாணவன் அதையே கொஞ்சம் வித்தியாசமாக மாற்றி வைத்திருந்தான்.

‘நிலா நிலா ஓடி வா!
ஜீன்ஸ் பேன்ட் கொண்டு வா!
ஜிப்பு போட்டுத் தைத்து வா!
நடு வீட்டில் வை
மிஸ் வந்தா பொய் ‘

அதை மட்டும் தனியாய் எடுத்து ஓரமாக வைத்தேன். அந்தத் ‘தமிழரசி ‘ இதைக் கவனித்தவுடன்,

“இவன் பெரிய அராத்து சார் . இந்தக் .கவிதையை வகுப்பில் வச்சு வாசிச்சுக் காட்டி நல்லா திட்டி விட்டுட்டேன் “

“ஆமா,. ஆமா..தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுடனும் இல்ல? ”

அவர் என் நக்கலைக் கூட புரிந்து கொள்ளத் தெரியாமல்’ எஸ் சார் ‘ என்று சீரியசாய் தலையாட்டினார்.

மற்றொருவன்

‘நிலா
உலா
பலா
கலா
டீலா நோ டீலா? ‘

என்று முடித்திருந்தான்.டி. ராஜேந்தரின் தாக்கம் இந்தத் தலைமுறை வரை நீடிப்பதைக் கண்டு ஆச்சர்யமாய் இருந்தது.

‘ வானத்தில்
யாரோ
ஆப்பம்
சுட்டு வைத்திருக்கிறார்கள்;
மனிதர்கள்
தூங்கி விட்டார்கள்;
விண்மீன் பூச்சிகள்
தின்ன வருகின்றன ‘

என்று ஒரு கவிதை. இதையும் எடுத்து ஓரமாக வைத்தேன்.

“இதுவும் அராத்துதான் சார்! ஆனா என்ன கொஞ்சம் நல்லா படிப்பான். அதனால திட்டு வாங்காம தப்பிச்சுர்றான். “

கடைசியாக ஒரே ஒரு கவிதை மட்டும் எஞ்சியிருந்தது. அதையும் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.

‘நிலா
வானத்தில்;
அம்மா
என் மனதில்;
அம்மா
சோறு தருவாள்;
ஆனால்,
நிலா
இருந்தால்தான் பசிக்கும்.
நிலா
போனால்
வந்து விடுகிறது
.
அம்மா? ‘

சட்டென்று மனம் கலங்கியது. இது ஒரு நல்ல கவிதை இல்லைதான். ஆனால், கவிதைக்கான ஏதோ ஒரு விதை இதை எழுதிய கரங்களுக்குள் ஒளிந்திருப்பதாக உணர்ந்தேன்.அது மட்டுமில்லை. இதை எழுதிய குழந்தையில் மனதிலிருக்கும் சோகத்தின் சிறு துண்டு இந்தத் தாளுக்குள் பரவிக் கிடப்பதாக உணர்ந்தேன்.உடனே மனம் பரபரப்படைந்தது.வேகமாகத் திரும்பி டீச்சரைப் பார்த்து,

” மேம்.கவிதைப் போட்டில பரிசு வாங்குன மூணு பேரை முதலல்ல இந்த ரூமுக்கு வரச் சொல்லுங்க! அவங்க போனப்புறம் இந்தக் கவிதைய எழுதுன பொண்ணக் கூட்டிட்டு வாங்க”

என்று சொல்லி விட்டு அந்தத் தாளை தமிழரசியிடம்’ கொடுத்தேன்.

“பிரின்ஸிபல் மேம்ட்ட கேட்டுட்டு கூட்டி வர்றேன் சார்.”

இவர் பிரின்ஸ் அனுமதித்தால்தான் பாத்ரூமுக்கே போவார் என்கிற நினைப்பு மனதில் ஓடியதும் எரிச்சலோடு தலையில் அடித்துக் கொண்டேன்.

அந்த மூன்று பிள்ளைகளும் அறைக்குள் வந்தார்கள். மூவர் முகத்திலும் கொஞ்சம் பணக்காரக் களை இருந்தது. மூவரில் இரு சிறுமிகள்; ஒரு சிறுவன். இரண்டு பேரும் சீக்கிரமாகவே ஒத்துக் கொண்டார்கள். ஒரு சிறுமியின் சித்தப்பா தமிழ்ப் பேராசிரியராம்.இன்னொரு சிறுமியின் அத்தை தமிழ் ஆர்வம் கொண்ட மேத்ஸ் டீச்சர்.அவர்தான் வண்ணதாசனைக் கடத்தி வந்து தன் மருமகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.
அந்தப் பையன் லேசில் ஒத்துக் கொள்ளவில்லை.’இது என் கவிதைதான் ‘ என்று தீவிரமாய் அடம் பிடித்தான்.’ சரி, அந்தக் கவிதையோட தீம் என்னன்னு சொல் பார்ப்போம்’என்று மடக்க ,’ கவிதையைப் பார்க்காமலேயே மனப்பாடமாய் ஒப்புவித்தான்.

“தலைவா! நான் கேட்டது மீனிங் “

இப்போது அவன் பதில் சொல்லத் தெரியாமல் அவமானத்தில் தலை கவிழ்ந்து நின்றான்.

அவன் அப்பா தாசில்தார். அவர் ஒரு தமிழாசிரியரைப் பிடித்து, அந்தத் தமிழாசிரியர் உள்ளூர் கவிஞரைப் பிடித்து இந்தக் கவிதையை வாங்கி வந்து அவனிடம் தந்திருக்கிறார் (தந்தை மகற்காற்றும் உதவி)

”உங்களுக்கெல்லாம் கவிதை வரலைல. அப்புறம் ஏன் கவிதைப் போட்டில சேர்ந்தீங்க?”

கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டேன்.

” மிஸ்தான் கம்பெல் பண்ணி கலந்துக்கச் சொன்னாங்க.”

மூவருமே கோரஸாகச் சொன்னார்கள்.

“இல்ல சார், நல்லாப் படிக்கிற புள்ளைக கிட்டச் சொன்னா உடனே கவிதை எழுதிட்டு வந்துரும். அதான் இவங்களை ஃபோர்ஸ் பண்ணினேன் ”

டீச்சர் அவர்களின் வக்கீலாக தானே வந்து ஆஜரானார்.

” நல்லா படிக்கிற புள்ளைகளுக்குத்தான் கவிதை வரும்ம்னு உங்க கிட்ட யாரு சொன்னது ?”

“பிரின்ஸிபல் சார் “

இவரிடம் என்ன கேள்வி கேட்டாலும் கடைசியில் இங்குதான் வந்து நிற்கப் போகிறார்.

இப்போது அந்தச் சிறுமி தயங்கியபடி உள்ளே வந்தாள். கீழ் நடுத்தரக் குடும்பம் என்பது பார்த்த உடனே தெரிந்தது. பெற்றோர்களின் டவுசரையும் உருவிக் கொண்டு திருப்பியனுப்பும் இந்தப் பள்ளியில் இவளைச் சேர்த்ததற்காக இவள் அப்பா கண்டிப்பாக கடன்காரனாகியிருப்பார்.

”அம்மா என்ன செய்றாங்க?”

அந்தச் சிறுமியை அருகே அழைத்து மெதுவாகக் கேட்டேன். அவளைப் பார்த்தவுடனே இந்தக் கேள்வியைத்தான் கேட்க வேண்டும் என்று உள்ளுணர்வு தூண்டியது.சில நொடிகள் மௌனமாயிருந்தவள் நிதானமாய் சொன்னாள்.

”செத்துப் போயிட்டாங்க சார். ”

அவள் அழுகையை மென்று முழுங்கியபடி அதைச் சொன்னதைக் கவனித்திருந்தேன்.அதைப் பார்த்ததுமே மனம் பாரமாகி விட்டது.

” எப்ப? “

என் குரலும் லேசாக உடைந்திருந்தது.

”போன மாசம். தீ வச்சுக்கிட்டாங்க.”

நான் ‘ ஏன்?’ என்று கேட்கவில்லை. ‘தமிழரசிக்கும்’ அது அதிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டும். அவருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை என்பது புரிந்தது .இதையெல்லாம் பிரின்ஸிபல் கேட்கச் சொல்லியிருக்க மாட்டார்.

” கவிதை உன்னுதா?”

அந்தச் சிறுமியிடம் பேப்பரைக் காட்டிக் கேட்டேன்.

”சத்தியமா என்னுது சார் ”

ஒரு கையை இன்னொரு கையின் மேல் வைத்துச் சொன்னாள்.

”நல்லா இருக்கு. கவிதையெல்லாம் படிப்பியா?”

”தமிழ் புக்ல உள்ள கவிதையெல்லாம் மனப்பாடமா தெரியும். அப்பப்ப மனசுல தோணுறத நோட்டில் எழுதி வைப்பேன் ”

” குட் ” என்று பாராட்டி விட்டு
பரிசு பெற்ற மூன்று கவிதைகளையும் அவளிடம் நீட்டினேன்.

”இந்தா . இந்த மூணையும் படி .”

ஆர்வமும் , தயக்கமுமாய் வாங்கியவள் பாரதிதாசன் கவிதையைப் பார்த்தவுடன் சட்டென்று முகம் மலர்ந்து ,

”சார், இந்தக் கவிதை எனக்குத் தெரியும் ”

”எங்க படிச்ச? ”

”படிக்கல சார். டிவில போட்ட பட்டிமன்றத்தில் கேட்டேன். இது பாரதிதாசன் எழுதுனது. ”

நான் ஒரு நொடி திருப்பி டீச்சரைப் பார்த்தேன். அவள் அதைக் கவனிக்காமல்
மற்ற இரு கவிதைகளையும் நிதானமாய் படித்தாள். இடையிடையே திரும்பி என்னிடம் சந்தேகம் கேட்டாள்.

”கவிதை என்ன சொல்லுது? ” என்று கேட்ட போது கிட்டத்தட்ட சரியாகவே பொருள் கூறினாள்.

”மேம்.இந்தப் பொண்ணுக்குத்தான் ஃபர்ஸ்ட் பிரைஸ் கொடுக்கனும் . நா எடுத்து வச்சிருக்க மத்த ரெண்டுக்கும் அடுத்தடுத்த பரிசுகள். நீங்க செலக்ட் பண்ண மூணுமே அவங்க எழுதுனது இல்ல. அவை ஃபோர்ஜரி .”

என்று டீச்சரிடம் சொல்லவும் அவர் அதிர்ச்சி அடைவது முகத்தில் தெரிந்தது.

”சார், விழாவுல வாசிக்க பிரைஸ் லிஸ்ட் ஏற்கனவே பிரிப்பேர் பண்ணியாச்சு ”

தமிழரசி ‘ பதற்றத்தோடு பதில் சொன்னார்.

” தமிழ்நாட்ல மந்திரிகள் பேரையே அடிச்சு அடிச்சு எழுதுறாங்க.இதெல்லாம் ஒரு மேட்டரா ?நான் சொன்னேன்னு
பிரின்ஸிபல் கிட்ட சொல்லுங்க. இப்பவே . ”

”ஓகே சார் ”

அந்தத்’தமிழரசி ‘என்னைத் தயக்கமாய் பார்த்துக் கொண்டே முதல்வர் அறையை நோக்கி நடந்தார். அவர் வெளியே போனவுடன் அந்தச் சிறுமி என்னைப் பார்த்து களங்கமில்லாமல் சிரித்தாள்.

”சார்,நான்தான் ஃபர்ஸ்டா?”

குரலில் அப்படி ஒரு சந்தோஷம். அந்த முகத்தில் ஒட்டிக் கிடந்த நெடுநாள் சோகம் இப்போதுதான் இந்த அறையில் உடைந்து சிதறியிருக்க வேண்டும்.

” யெஸ். யூ ஆர் த வின்னர்”

நானும் பூரிப்போடுதான் பதில் சொன்னேன்.

”சார் நான் அப்ப அகமது, ஜெயந்தி ரெண்டு பேருக கிட்டயும் நான்தான் ஃபர்ஸ்ட்ன்னு சொல்லிடவா? “

” யார் அவங்க? ”

‘”என் ஃப்ரெண்ட்ஸ் ”

” சொல்லிடு”

மலர்கள் நிறைந்த மரம் காற்றில் அசைவது போல் சந்தோஷமாய் தலையாட்டினாள்.
அவள் அந்த அறையிலிருந்து வெளியேறவில்லை. கிட்டத்தட்ட பறந்து போய்க் கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்திலேயே நிகழ்வு தொடங்கி விட்டது. மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பின்
நானும் பேசி முடித்து விட்டேன்.மற்றொரு சிறப்பு விருந்தினராக வந்திருந்த
டி.எஸ். பி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிக் கொண்டிருந்தார். இலக்கியப் போட்டிகளுக்கு நான்தான் வழங்க வேண்டும். அந்தச் சிறுமிக்கு கை தட்டு கிடைக்கப் போகும் தருணத்தைக் கண் குளிரக் காண்பதற்கு ஆவலாயிருந்தேன். ‘கவிதைப் போட்டி முடிவுகள் ‘என்று மைக்கில் அறிவித்தார்கள். எனக்குள் ஏன் இப்படி ஒரு குறுகுறுப்பு?’அந்தப் பெண்ணின் பெயரைக் கூட கேட்கவில்லையே.சரி.பரிசு தரும் போது கேட்டு விடலாம். ஒவ்வொருவராய் மேடையேறி மூன்று பேர் பரிசு வாங்கினார்கள். என் கண் பார்க்க ஓர் அழகிய கட்டிடம் உடைந்து சிதறியதைப் போல் மனதுக்குள் பாரம் குடியேறியது. பழைய லிஸ்டில் இருந்த, நான் அறையில் வைத்துப் பார்த்த அந்த மூவரும்தான் என் கைகளில் இருந்து பரிசுகளை வாங்கிப் போனார்கள்.அவர்களின் முகங்களில் எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லை. என்னை விட அழகாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்கள்.

நான் ‘தமிழரசியை’சைகையில் அழைத்தேன். நான் பேச ஆரம்பிப்பதற்குள் முன்னால் அவரே முந்திக் கொண்டு”சார் நீங்க சொன்னத பிரின்ஸிபல்கிட்ட சொல்லிட்டேன் சார்” என்று சொல்லி விட்டுச் சங்கடமாய் புன்னகைத்தார்.இதுவெறும் அம்பு. இதை நொந்து என்ன பயன்?
பிரின்ஸிபல் என் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தார்.

‘மேடம்! தமிழ் டீச்சர் கவிதை போட்டி ரிசல்ட் பத்தி நா சொன்னதை உங்க கிட்டச் சொன்னாங்களா?

“‘சொன்னாங்க சார் ”

அகலமாய் புன்னகைத்தார். இனிய குரல்தான். ஆனால் அது அந்தச் சூழலில் எனக்குள் நாராசமாய் ஒலித்தது.

”பிறகு ஏன்? ”

தோற்றுப் போனவனின் குரலில் கெஞ்சலாய் கேட்டேன். வெளியில் சொல்ல முடியாத ஆற்றாமையில் என் உடல் படபடத்தது.

”கரெஸ்பான்டன்ட் ஆர்டர் சார்”

மீண்டும் அதே அகலமான புன்னகை.
இது மற்றொரு அம்பு என்று புரிந்தது.

என் மனம் முழுவதும் இனம் தெரியாத தவிப்பு சூழ்ந்து கொண்டது. என் முன்னாலிருந்த அந்தக் கூட்டமே அந்தச் சிறுமியின் கண்களாய் மாறி என்னைத் துளைப்பதாய் உணர்ந்தேன். அகமதுவும்,ஜெயந்தியும் அவளைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்?
‘போடி பொய் புளுகணி’என்று அந்தக் குழந்தையிடம் பேசாமல் விலகிப் போய் விடுவார்களோ?நான் பார்த்தே இராத அவள் அம்மா எரிந்து விழுந்த காட்சி ஒருகணம் கண்களில் வந்து போனது. எனக்கு முன்னால் பரிசு வாங்கிய அந்த மூவரும்’ இனி இந்தியாவின் எதிர்காலமே அவர்கள்தான் ‘என்கிற பாவத்துடன் போலியான கம்பீரத்துடன் அமர்ந்திருந்தனர்.’தேசிய கீதம் ‘ என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்.நானும்தான்.

( என் முதல் நூலில் இடம் பெற்ற கதை )

Credit : * மானசீகன்*

( மீள்)

படித்து பகிர்ந்து

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.