Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர்களின் அவல நிலை

கல்லூரி, பள்ளி நிர்வாகம், பல்கலைக்கழக குழு, சமுதாயம், கொரோனா, இப்படி பலவும் அடித்து துவம்சம் செய்த ஆசிரியர் ( குறிப்பாக தனியார் பள்ளி, கல்லூரி) சமுதாயத்தை, இன்னும் மாணவர்கள் மட்டும் தான் அடிப்பது பாக்கி.

அதுவும் இப்போது ஆங்காங்கே நிகழ்கிறது.

ஒரு ஒழுக்கமான, நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று உழைப்பது தான் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் வாழ்வில் செய்யும் தவறு போல!

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மூடப்பட்டால் அதன் தொழிலாளர் நலன் கருதி வழக்குத்தொடுக்கும் சங்கங்கள், தனியார் பள்ளி, கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியர்களின் அவலநிலை குறித்தோ , அவர்களின் சம்பளம் குறித்தோ பேசுவதே இல்லை.ஒரு பட்டதாரி ஆசிரியர் தனக்கு நல்ல வேலை கிடைத்து விட்டது, அதனால் தனது பட்டங்களைத் திருப்பித் தருமாறு கேட்டதற்கு அந்தக் கல்லூரி நிர்வாகம் மறுக்கவே அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதற்குக் கூட நீதியில்லை. இன்னும் கூட பணியில் சேரும்போது , பட்டங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு தான் பணியமர்த்துகிறார்கள்.

இங்கு பாதிக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி , கல்லூரியின் நிர்வாகிகள் அரசியல்வாதிகள் தானே!

கல்விக்கூடம் என்று விற்பனைக்கூடங்களானதோ அன்றே எல்லாம் ஒழிந்தது.

குடிப்பதை தன்வசப்படுத்திய அரசு, படிப்பதையும் தன்வசப்படுத்தினால் மட்டுமே இந்த பாவப்பட்ட தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு சாப விமோட்சனம்!

பல்கலைக்கழக மானியக்குழு, ஒரு கல்லூரயில் கழிவறை இருக்கிறதா, குடிக்க தண்ணீர் இருக்கிறதா, கட்டிடம் இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்கிறது.

அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளம் இருக்கிறதா?
அவர்களுக்கு பணி நிரந்திரம் இருக்கிறதா என்று ஆராய்கிறதா?

சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியரின் குடும்பங்கள் சரியாக இருக்க வேண்டாமா?

கொத்தடிமைகள் முறை ஒழிந்து, இப்போது படித்த அடிமைகள் என்ற முறை நடப்பிலுள்ளதே! Self appraisal, promotion, increment இதுபோன்ற வார்த்தைகள் அடிமைத்தனத்தின் ஊன்றுகோல்கள்.
இதஎல்லாம் எந்த கட்சிக்கும் தெரியவில்லையா?

முறைசாரா தொழிலாளருக்கு கூட நலவாரியம் இருக்கிறது.

முறையான சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியருக்கு நலவாரியம் இருக்கிறதா?

ஒரு கல்லூரியில் ஒரு துறையில் மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று இழுத்து மூடுவதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.

கல்லூரி நினைத்தால் மூடிவிடலாம்.
அப்படி என்றால் அங்கு பத்து , பதினைந்து வருடமாக வேலை செய்த ஆசிரியரின் நிலை என்ன என்பதை அந்த கல்லூரியை நிர்வகித்த பல்கலைக்கழகமோ, அரசாங்கமோ கேட்பதே இல்லை.

கேவலம் பரீட்சை ஆன்லைனில் வைப்பதற்கு தலையிடும் அரசாங்கம், இப்படி பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பற்றி சற்றும் சிந்திக்காமல் கல்லூரியின் விருப்பங்களுக்கு சாதமகமாக நடப்பது ஏனோ?

என்றும் மாறாது இந்த அவலநிலை.

புரட்சி, திராவிட புரட்சி, சாதி காப்பாளர், சமுதாய காப்பாளர், இன காப்பாளர், ராமரின் தூதுவர், என்று எந்த வித அரசியல்வாதியும் இந்த ஆசிரியர் சமுதாயத்திற்காக குரல் எழுப்ப மாட்டார்கள்..

ஏனென்றால் எல்லாரும் இந்த வியாபாரத்தை படுஜோராக செய்து வருகிறார்கள்.

சமுதாயத்தை உருவாக்கும் இந்த பாவப்பட்ட குழு தானே முயன்றால் தான் உண்டு.

ஆனா,என்ன செய்ய நாமளும் முதுகு வளைஞ்சே பழகிட்டோம்!

இப்படித்தான் அடிப்பாய்ங்க.

பொத்திக்கிட்டு வாங்கிட்டு, வாழ முடிஞ்சா வாழலாம் ..

வாத்தியார் கேட்ட கேள்விக்கு என்னிக்கு சரியான பதில் வந்துருக்கு.
வாத்தியாரும் அந்த கேள்விக்கு பதில் வந்தே ஆகனும்னு என்னைக்கு அடம் பிடிச்சிரிக்காரு?

முடிஞ்சா கேலியாக ஏதாவது பதில் வராம இருந்தா சரி.

சாபம் பெற்ற சமூகம்!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.