சொந்த ஊர் , மொழி என்பது எப்போதும் ஒரு தனி உணர்வு தான்
நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் பற்றியோ அல்லது சொந்த ஊர் சம்பந்தமான ஆட்களைப் பற்றியோ, பேசும் போதும், அவர்களைப் பார்க்க நேர்ந்தாலோ அல்லது பழக நேர்ந்தாலோ அது ஒரு தனி இன்ப உணர்வு.
இன்னும் சிறிது நேரம் இவர்களோடு உறவாடக்கூடாதா, என்று மனம் ஏங்கும்.
ஆனாலும் பணியோ சூழ்நிலையோ அதை அனுமதிக்காத போது கனத்த இதயத்தோடு, அவர்களிடம் விடைபெற்று, அப்பப்ப வந்து போங்க, எதுனாலும் கூப்புடுங்க, தயங்காம என்ன உதவியானாலும் கேளுங்க என்று நாம் பேசும் அந்த வார்த்தைகளை ஊரில் இருக்கும் போது தெரியாத ஆட்களிடம் பேச மாட்டோம்.
ஆனால் அதே தெரியாத ஆள் நாம் வெளியூரிலோ, வெளி மாநிலத்திலோ, வெளி நாட்டிலோ இருக்கும் போது, நம்மிடம் பழக நேர்ந்தால், நாம் அவரிடம் மிகுந்த நட்புணர்வோடு உரிமையோடு பழகக் காரணம் சொந்த ஊரின் உணர்வுக்கான ஏக்கம்.
எனக்கு இது போன்ற உணர்வுகள் ஏற்பட்டதை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
முதன் முறையாக பணி நிமிர்த்தமாக மகாராஷ்டாரா மாநிலத்திற்குச் சென்றிருந்தேன்.
மும்பையை முதன் முதலில் பார்த்ததும் அப்போது தான்.
மும்பையில் இறங்கிய உடனே எங்களுக்கு வேண்டிய நண்பர் வந்தாகிவிட்டதால் , காரில் ஏறும் வரை எந்த அசௌகரியமும் ஏற்படவில்லை.
ஆனால் கார் மும்பையைத் தாண்டி நாசிக் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த போது மொழிப்பிரச்சினை ஏற்பட்டது.
இரவு உணவுக்கு எங்கே என்ன சாப்பிடலாம் என்பதில் கார் ஓட்டுனரோடு ஏற்பட்ட பேச்சுவார்த்தை எங்களை அந்த மாநிலத்திற்கு அந்நியமாக உணர வைத்தது.
அங்கே ஒரு தாபாவில் நிறுத்தி எங்களுக்குத் தேவையானதை எனக்குத் தெரிந்த டப்பா இந்தியில் விசாரித்த போது , அங்கிருந்த காசாளர் தெலுங்கா, தமிழா என்று என்னிடம் தமிழில் பேசத்துவங்கியதும் ஒரு பேரின்பம்..அவரோ அந்த மாநிலத்தவர் தான் ஆனால் பணி காரணமாக பல மொழிகளைக் கற்றிருந்தார்.
அவரோடு ஆத்மார்த்தமாக சிறிது நேரம் உரையாடினோம்.
அடுத்த இரண்டாவது நாள் நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருக்கும் ஒரு அலுவலர் தமிழர் என்ற தகவல் அறிந்த போது எங்களுக்கு ஒரு பெரிய பலம் வந்தது போன்ற உணர்வு.
மொழியின் காரணமாகவோ, அல்லது இடமாறுதல் காரணமாகவோ நாம் பலகீனமாக உணரும் போது, நம்ம ஊர் என்று சொல்லிக்கொண்டோ, நமது பாஷையைப் பேசும் ஒரு ஆளோ கிடைக்கும் போது அது நிச்சயம் நமக்கு ஒரு பலமான உணர்வைத் தான் தருகிறது.
மொழி உணர்வைப் போல, சொந்த ஊர்க்காரன் என்ற உணர்வும் ஒரு வித பலம் தான்.
நமது மாநிலத்திற்குள்ளேயே நம் ஊரைத்தாண்டி எங்கேயாவது வெளியூரில் இருக்கும் போது, நமது சொந்த ஊர் ஆட்களை எதிர்பாராத விதமாக சந்திக்கும் போது அது ஒரு பலமான இன்பமான உணர்வைத் தரத்தான் செய்கிறது.
நேற்று சென்னையிலிருந்து கோவை க்கு நண்பனின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்ய நேர்ந்தது.
எனது கோவை நண்பர்கள் அனைவருமே வசதியிலும் சரி, பணிவிடையிலும் சரி அடுத்தவர்களை மிரள வைக்கும் அளவிற்கு பெரிய ஆட்கள்.
திருமணத்திற்கு வந்திருந்த விருந்தாளிகள் தங்குவதற்கு கோவையின் மிகப்பிரம்மாண்ட்மான பாரட்வே வணிக வளாகத்தில் அமைந்துள்ள மேக்னம் என்ற விடுதியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அந்த விடுதியின் வரவேற்பறையில் நான் சென்று எனது அடையாள அட்டையை சமர்ப்பித்து எனக்கான அறையைப் பெற்றுக் கொள்ளும் போது, அங்கிருந்த வரவேற்பாள அலுவலர் ( பெண் ஊழியர்) sir, you are from Ettayapuram, என்று கேட்ட போது அந்தப் பெண்ணின் கண்களில் மிளிரிய மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
உண்மைதான். கோவையில் அந்த அளவிற்கு உயர்தரமான ஒரு விடுதிக்கு எட்டயபுரத்திலிருந்து ஆட்கள் சென்று தங்குவது அவ்வளவு இயல்பான ஒரு நிகழ்வல்ல.
எனக்குத் தெரிந்து அந்தப்பெண்ணுக்கு இது முதல் அனுபவமாக இருக்கலாம்.
அந்தப் பெண் அப்படிக் கேட்டதும்,நீங்கமா என்றேன்.
நான் எட்டயபுரம் பக்கத்துல குட்கிராமம் என்று சொல்லவும்,நான் அந்த கிராமத்தைப் பற்றி விசாரித்தேன்.
பொதுவாக எட்டயபுரத்தைச் சார்ந்த அனைவருக்கும் அந்த கிராமத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வியாபாரிகள் மற்றும் சில தேவை உள்ள ஆட்களுக்குத் தான் அந்த ஊர் பற்றிய முழுமையான தகவல் தெரியும்.
அந்தப் பெண் அவள் ஊரைப்பற்றி சொன்னதும், எனக்குத் தெரியும்மா, எங்கப்பா கால்நடை ஊழியர் என்பதால் உங்கள் ஊருக்குப் போக்குவரத்து அடிக்கடி உண்டு, அதில்லாமல் உங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் தான் நான் சிறுவயதில் 2-3 வருடம் இருந்தேன் என்றதும் அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு இனம்புரியாத ஆனந்தம்.
வெல்கம் சார், யுவர் ரூம் நம்பர் இஸ் 304 சார் என்பதை மட்டுமே பேசும் வரவேற்பு அலுவலருக்கு, தனது ஊரைப்பற்றி சிலாகித்துப் பேச ஒரு நபர் கிடைத்த மகிழ்ச்சி அந்தப். பெண்ணுக்கு.
சென்னையிலிருந்து கோவை போன எனக்கு, ஊரின் நியாபகங்களைத் தூண்ட ஒரு ஆள் பேச்சுக் கொடுத்த மகிழ்ச்சி எனக்கு.
எனது ஆதங்கத்தையும் கொட்டிவிட்டேன், இப்பலாம் அடிக்கடி ஊருக்குப் போறதில்ல மா, வேலை சூழ்நிலை ஒத்துழைக்கல.
நீங்க ஊருக்குப் போய் வருவீங்களா என்று கேட்டேன்.
ஆமா , ணா , அப்பப்ப போவேன்.
நீண்ட நாள் கழித்தோ அல்லது முதல் அனுபவமாகவோ, அந்த விடுதிக்கு வந்த விருந்தினரை சார் என்று அழைக்காமல் அண்ணா என்று அழைத்த தருணமாக அந்தப் பெண்ணுக்கு அமைந்திருக்கலாம்.
எல்லாம் சொந்த ஊர் தந்த உணர்வு .
மறுநாள் வழக்கம்போல , நம்ம ஆளு ஒருத்தன், விடுதியை நேரத்திற்கு காலி செய்யாமல் கிறுக்குத்தனமாக சுற்றிக் கொண்டிருக்க, அந்தப் பஞ்சாயத்தையும் இந்த அண்ணன் தான் ஒரு வழியாக முடித்து வைத்தார்.
அந்தப் பெண்ணுக்கு இந்த இரண்டு நாள் ஏதோ ஒரு இன்பம்.
நம்ம ஊர்க்கார அண்ணன் இங்க இருக்காரு.
எனக்கும் ஏதோ ஒரு நல்லுணர்வு.
நம்ம ஊருபக்கம் இருக்க பிள்ளை இங்க வேலை செய்யுது.அது ஒரு அந்நியமில்லாத உணர்வைத் தந்தது..
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றாலும் ,
சொந்த மொழியுணர்வும், சொந்த ஊர் உணர்வும் என்றைக்கும் தனிச்சிறப்பு தான்.