Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வரலாறு

உயரமான செனாப் பாலம் உருவான வரலாறு.

உலகின் மிக உயரமான ரயில் பாலம்.
செனாப் ஆற்றின் குறுக்கே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கால் – கவுரி பகுதிகளுக்கு இடையே இன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

ஆற்றுப் படுக்கையிலிருந்து 359 மீட்டர் அதாவது 1180 அடி உயரத்தில் கம்பீரமாக உலகே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உயர்ந்த அந்தப் பாலத்தில் நம் நாட்டின் தற்போதைய பிரதமர் திரு.மோடி அவர்கள் கம்பீரமாக மூவர்ணக்கொடியோடு நடந்து வர, அதை அந்தக் கட்சியினர் தம் கட்சிக்கே உரிய சாதனை போல, சமூக வலைத்தளங்களில் நெருப்பாகப் பரவச் செய்கிறார்கள்.

இந்தப் பாலத்தைப் பற்றிய வியப்பும் செய்திகளும் 100 சதவீத உண்மை தான்.

8 ரிக்டர் அளவுகோல் பூகம்பம் வந்தாலும் தாங்கி நிற்கும், 40 கிலோ வெடிகுண்டு வைத்துத் தகர்க்க முயற்சித்தாலும் தூசி போலத் தட்டிவிடும்.
புயல் காற்று வீசினாலும் அசராமல் நிற்கும்.
120 ஆண்டுகள் வரை இதே கம்பீரத்தோடு நிற்கும் என்பதெல்லாம் 100 சதவீத உண்மை.

இதில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமும் நிகழ்த்தி அசத்தி விட்டார்கள்.

ஆனால் இந்தத் திட்டம் முழுக்க முழுக்க எந்த தனிப்பட்ட கட்சியினராலோ, அரசாங்கத்தினாலோ சொந்தம் கொண்டாட இயலாத ஒன்று.

ஏனென்றால் இந்தத்திட்டம் 2004 ஆம் ஆண்டு துவங்கி இன்று முடிவடைந்திருக்கும் நீண்ட கால உழைப்பு.

பொறியாளர்கள், உழைப்பாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள், கழுதைகள் மற்றும் குதிரைகளின் உழைப்பு.

கேலி அல்ல, இந்தப்பாலம் கட்ட ஆரம்பித்த போது அங்கே சென்றடைய சரியான பாதை கிடையாது, மனிதர்கள் நடந்து செல்லும் அளவு எளிதான பாதைகள் இருந்திடவில்லை. அதனால் குதிரைகள் மூலமாக மனிதர்களும், கழுதைகள் மூலமாக தேவையான பொருட்களையும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

இந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவன மேலாளர், தங்களைச் சுமந்து சென்ற கழுதைகளுக்கும், குதிரைகளுக்கும் சேர்த்தே நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தப் பாலம் உருவான கதையும், அதற்கான முக்கிய மாந்தர்களைப் பற்றிய தகவலும் பின்வருமாறு.

2004 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட போது அந்தப் பாலத்தின் அடித்தளம் கற்காரைகளால் உருவாக்கப்பட்டது, ஆனால் அதன் நம்பகத்தன்மை உறுதி இல்லாத காரணத்தால் மாற்று சிந்தனை தேவைப்பட்டது.

பெங்களூருவில் உள்ள IISC- Indian Institute of Science ன் கட்டுமானப் பொறியியல் துறையில் பணிபுரிந்த பேராசிரியர், மாதவி லதா என்பவரிடம் யோசனை கேட்கப்படது.

அவர்தான் இந்த கற்காரை கட்டமைப்புக்கு பதிலாக இரும்பு எஃகு கட்டமைப்புக்கு யோசனையும் வடிவமைப்பும்.

மேலும் அவர் அங்கிருந்த பாறைகளையே அடித்தளமாகப் பயன்படுத்த, யோசனை தெரிவித்தார்.
பாறைகள் துளையிடப்பட்டு/ பிளக்கப்பட்டு அதிலிருந்து எஃகு கம்பிகள் கட்டமைப்புக்குள் வளரும் வண்ணம், வடிவமைக்கப்பட்டது.

இது பழைய முறையை விட மிகவும் வலிமையானது.

அவர் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர். தனது இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை ஆந்திரத்திலும், முனைவர் பட்டத்தை சென்னை ஐஐடியிலும் பெற்றுள்ளார்.

இந்தப் பாறைகளை அடித்தளமாகப் பயன்படுத்தும் முறை பற்றி தான் அவரது முனைவர் ஆராய்ச்சி.
ஆக இந்தப்பாலத்தின் அடித்தள அறிவு நமது தென் மாநிலத்தில் விளைந்த ஒன்று என்று பெருமிதம் கொள்ளலாம்.

மேலும் இந்த பாலத்தின் ஒப்பந்த கட்டுமான நிறவனமான ஆப்கான்ஸ் தமிழர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

உழைப்பு ஒட்டுமொத்த இந்தியர்களைச் சார்ந்தது என்றாலும் தமிழகத்தின், தென் மாநிலங்களின் பங்கு அறிவுப் பூர்வமாக அதிகம்.

17 ஆண்டுகளாக மன்றாடி, வாழ்க்கையை அர்ப்பணித்து, இப்படி ஒரு கம்பீரமான பாலத்தை வடிவமைத்த, கட்டி முடித்த மனிதர்களைப் பாராட்டுவது நம் கடமை.

நியாயப்படி பார்த்தால், அவர்கள் தான் அந்தப் பாலத்தின் மீது கம்பீர நடை நடந்திருக்க வேண்டும்.

அது பரவாயில்லை. ஆனால் பல வருட உழைப்பில் உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பாலம், ஒரு தனிப்பட்ட கட்சியின் அரசியல் பிரச்சாரமாகி விடக் கூடாது.

வாழ்க பாரத நாடு.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.