Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கண்ணாடியைப் பார்த்து துப்பிக் கொள்வோமா?

பழைய பதிவு தான்.
ஆனால் இன்றைக்கும் இதன் அவசியம் தீரவில்லை.

மெர்சல் திரைப்படம்!

ஒரு காட்சியில் விஜய் அவர்கள் கோவில் கட்டுவதை விட மருத்துவமனை கட்டுதல் அவசியம் என்ற முடிவை எடுப்பார்!

அதை நமக்கு கொரோனாவின் உச்சகாலம் உணர்த்தியது.

சென்னையின் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டது.
அதாவது ஆரம்ப கட்ட பரவலின் போது.
அதன்பிறகு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம்.

நம்மிடம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.
மற்ற நாடுகளுடன் ஒப்பீடு என்றில்லை.
ஆனால் கொரோனா போன்ற தொற்றுக் காலத்தில் நாம் திணறியது உண்மைதானே?

அத்தனை களேபரங்கள் நடந்த்போது , கோவில்களோ, மசூதியோ, சர்ச்சோ ஆறுதல் கூட அளிக்கவில்லை.
சொல்லப்போனால் இழுத்து மூடப்பட்டிருந்தது.!

ஆபத்தில் உதவாத ஒன்று நமக்கு தேவைதானா?தெய்வத்தையோ கோவில்களையோ கொரோனாவின் போது மக்கள் சீண்டவில்லை.
ஆனால் இன்று?
மீண்டும் அதே சிறப்பு தரிசன வரிசைகள்!

மருத்துவமனைகளே அன்று கோவில்களாக இருந்தன!
அப்படியானால் பாபர் மசூதி இடித்து ராமர் கோவில் கட்ட அத்தனை ஆண்டு காலம் நாம் வழக்கு நடத்தி இருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

அந்த செலவில் இன்னும் பத்து சுகாதார நிலையங்களோ, ஒரு மருத்துவமனையோ கட்டியிருந்தால் பலன் அளித்திருக்குமே கொரோனாவின் போது?

கேவலம் குடிசைத்தொழிலுக்கு 18 சதவீத GST வரி விதித்து , சாலைகளை பளபளப்பாக்கினோமே? மூடித்தானே கிடந்தது அந்த சாலைகள்?
நாலு வழின்னா என்ன?
எட்டு வழின்னா என்ன? எல்லா வழியும் அடைத்து தான் இருந்தது.

ஹைட்ரோ கார்பனும் , மீத்தேனும் எடுக்க விளை நிலங்களை அழித்தோமே?

21 நாள் முடங்கி கிட என்று சொன்னவுடன் சோத்துக்கு என்ன செய்வதென்று தானே மனம் பதறினோம்?

ஐ.பி.எல் நடக்க விடாமல் காவிரி போராட்டகாரர்கள் தடுத்த போது பொங்கிய கூட்டமே?

கொரோனா அடைப்பு காலத்தில் தண்ணி கேன் தேடினார்களா? அல்லது கிரிக்கெட் சேனலைத் தேடினார்களா?

இன்னொரு விஷயம் கூட உண்டு.
வருங்காலத்தில் நடக்க போகும் விஷயம்!
இன்று நீட் தேர்வில் வெற்றி பெற்று 30 முதல் 40 சதவீதம் வேறு மாநிலத்தவன் தமிழக கல்லூரிகளில் படிப்பதை ஆதரித்து வரவேற்கும் நாம்,
வருங்காலத்தில் இதுபோன்ற சூழலில் அந்த வடமாநிலத்தவன் இங்கிருந்து மருத்தவ பணி ஆற்றுவானா?
இல்லை அவன் சொந்த மாநிலத்தை காப்பாற்ற ஓடுவானா என்பதையும் காண்போம்!

இன்னும் எத்தனை விஷயங்கள் நம்மை சீரழிக்கிறது என்பதை உணராமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அரசியல் புரிதல் அவசியம்!

கார்பன் எடுத்த கார்ப்பரேட், மீத்தேன் எடுத்த கார்ப்பரேட் ஏதாவது நமக்கு பண உதவி செய்ததா என்றால் இல்லை.

அந்த சூழ்நிலையில் எங்கே ஓடினார்கள் என்றால், தடுப்பூசி தயாரித்து புதிய வியாபாரம் துவங்க ஓடினார்கள்.

லைஃபாய் சோப்பு போட்டு கைய கழுவி கொரோனா வ விரட்டுவோம்னு டிவி ல காசு கொடுத்து விளம்பரம் செய்ற கார்ப்பரேட், அந்த செலவு பணத்தில் நமக்கு உதவ முன்வரவில்லை?

அவர்களிடம் இல்லாத பணமா?

அன்று சோறு கிடைக்குமா, தண்ணி கிடைக்குமா என்று ஏங்கித் தவித்ததை மறந்து இன்று மீண்டும் ஆட்டமாக ஆடுகிறோம்.

அன்று காவிரி நீருக்காக போராடி ஐபிஎல் நிறுத்தப்பட்டதால் திட்டித்தீர்த்தோம்.
டில்லியில் போராடிய விவசாயிகளை பார்த்து கரித்து கொட்டினோம்!
அதில் அந்த போராட்ட தலைவரிடம் ஆடி கார் இருக்கு, பங்களா இருக்கென்று கேவலமாக அவரைச் சித்தரித்தோம்!

கொரோனாவின் போது மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு இப்போது மீண்டும் பழைய கதைக்குச் சென்றுவிட்டோம்.

இன்று ஊருக்கு போக பஸ்களில் தொற்றித்திரிந்த போது ஓட்டுநரும் நடத்துநரும் தெய்வங்கள்!
அதற்கு சற்று காலத்திற்கு முன், பண்டிகை அதுவுமா இவனுங்க ஸ்ட்டிரைக் பண்றானுங்கன்னு கழுவி ஊத்தினோம்!
எதற்காக ஸ்டிரைக் பண்ணாங்க என்பதைக் கூட உணராமல்.

அவங்க உழைத்த காசு கைக்கு கிடைக்கிவில்லை எனப் போராடினார்கள்.ஆனால். நமக்கு இடையூறு என்பதால் திட்டித் தீர்த்தோம்.

கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை, காவல்துறை போன்ற பல அரசுத்துறை இயங்கியது பம்பரமாக, முறையான தூக்கமில்லாமல் கூட.

நாம் எப்போதாவது அரசு அலுவலர்களை பாராட்டி இருப்போமா? சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த அதிகாரிகளையுமல்லவா திட்டுவோம்?

நினைத்துப்பாருங்கள் நாம் இன்னும் எவ்வளவு எல்லாம் கேவலமானவர்களாக இருந்திருக்கிறோம் , இருக்கிறோம் என்று!

கோயம்பேடுல கூட்டமா நின்னுட்டு அதுக்கு நாம நியாயம் சொன்னது மாதிரி எல்லாத்துக்கும் நாமளே ஒரு நியாயம் சொல்லிக்கிட்டு இருந்தோம், இப்போதும் அதையே தொடர்கிறோம்.

ஒரு வைரஸ் வந்து நம்மை சிந்திக்க வைத்து விட்டது, அதை சிந்தித்து விட்டு மறந்தும் விட்டோம்.

அன்று கற்ற பாடத்தை மீண்டும் ஒருமுறை நினைவில் கொள்வோமா? திருந்துவோமா?!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.