Categories
அரசியல் தற்கால நிகழ்வுகள்

2026 ல் தளபதியா?தளபதியா? மதவாதமா? தமிழ் தேசியமா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த முருகன் மாநாட்டில் கிட்டத்தட்ட 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் இரண்டிலிருந்து மூன்று லட்சம் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமல் திரும்பிச் சென்றிருக்கின்றனர் என்று பாஜக வின் சார்பில் செய்திகள் வருகிறது.

இவை முழு உண்மையாக இல்லாவிட்டாலும் மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் பாஜக அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றாலும் கூட, பாஜக சார்பில் இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிகரமான மாநாடு தமிழ்நாட்டில் நிகழ்ந்திருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சாதகம் தான்.

மேலும் கடத்த எடப்பாடி ஆட்சியும் மக்கள் மனதில் பெரிய காயங்களையோ , கசப்புகளையோ உருவாக்கவில்லை.
திமுக வை ஒரு மாற்றாகக் கருதியும், அதிமுக உள்ளே இருந்த குடுமிப்படி சண்டை காரணமாகவும் தான் மக்கள் திமுக வை தேர்ந்தெடுத்தனர்.

தேர்வான வாய்ப்பை திமுக மிகச்சரியாகப் பயன்படுத்தி வருகிறது என்பதும் மாற்ற முடியாத உண்மை.

காலை உணவுத் திட்டம்,
மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்துப் பயணம், நான் முதல்வன் திட்டம் என்று பல நல்ல திட்டங்களை வகுத்து மக்களிடையே அமோக ஆதரவுடன் திகழ்கிறது.

போதாக்குறைக்கு இயற்கையும் திமுக வுக்கு சாதகமாக, மழை காலங்களில் பெருவெள்ளம் (ஒரு ஆண்டு தவிர) இல்லாமலும், வெயில் காலங்களில் வறட்சி இல்லாமலும் சாதகமான சூழலாக அமைந்து விட்டது.

உதயநிதி அவர்களை தடாலடியாக, மந்திரி துணை முதல்வர் என்று அறிவித்து , தமிழ்நாட்டைப் பட்டத்து அரசர் ஆட்சி்போல, ஆள நினைப்பது தான் பலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கிறதே ஒழிய மற்றபடி திமுக மிக வலிமையாக உள்ளது.

திமுக வின் வலுவை மெருகூட்டும் வகையில் மக்கள் மையம், இங்கே வந்து சரணடைந்து விட்டது.
சூரிய வெளிச்சம் இருக்கும் போது, டார்ச் லைட் எதற்கு என்று அவரது ரசிகர்களை, தொண்டர்களை மிரளச் செய்துவிட்டார் திரு.கமலஹாசன் அவர்கள்.

அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திறமைமிக்க ரஜினி அவர்களோ எனக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார்.

ஒருவேளை பாஜக அதிமுக, தேமுதிக கூட்டணி அமைந்தால் திமுக விற்கு ஒரு நல்ல போட்டியாக அமையும்.

தேமுதிக , தவெக வுடன் கை பார்த்தால் தவெக அணி பலமடையும்.

பாமக, திமுக பக்கமாக சாய்ந்து விடலாமா என்று எண்ணுவது போல, அதனுடைய சமீப கால நடவடிக்கைகள் இருக்கிறது.

ஆனால் அதை விசிக ஒருபோதும் அனுமதிக்காது என்பது உண்மை.

தவெக கூட்டணியில் தேமுதிக , பாமக இணைந்தால் அது ஒரு விதமாகத்தான் இருக்கும்.
ஆனால் இதெல்லாம் சாத்தியமா என்றால், சந்தேகம் தான்.

கூட்டணி பிறகு, தனிப்பட்ட ரீதியில் ஒரு அரசியல் கட்சியாக தவெக என்ன செய்து கொண்டிருக்கிறது என்று களத்தை ஆராய்ந்தால் , ஏமாற்றம் தான்.

அறிக்கை விடுவது, ஒரு சில விழாக்களில் பங்கெடுப்பது என பகுதி நேர அரசியல் செய்து கொண்டிருக்கிறார் தலைவர்.

அதிலும் கூட நல்லபெயர் வந்து விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது அன்புத் தொண்டர்கள்.

உட்கட்சி பூசல் கத்திக் குத்துகள், வம்பு வழக்குகள் என ஏக போகமாக, அந்தக் கட்சியை பாதாளத்தில் தள்ளுவதற்கான நற்காரியங்களைத் தவறாமல் செய்கிறார்கள்..
கட் அவுட்டின் உச்சியில் ஏறிப் பால் ஊத்தின எனக்குப் போஸ்டிங் இல்ல…பத்து பாக்கெட் பால் வாங்கிக் கொடுத்த அவனுக்கு போஸ்டிங்கா என அணில் குஞ்சுகள் ஒரு புறம் அடித்து உருள,

உதயநிதி ஐயா இல்லை, இன்பநிதி ஐயா வந்தாலும் நாங்கள் அவரது காலைத் தூக்கி எங்கள் தலையின் மீது தாங்கிக் கொள்வோம் என்று திமுக உபிக்கள் தெளிவான அரசியல் புதிரதலோடு வலம் வருகிறார்கள்.

அரசியலுக்குத் தேவை என்ன என்பதை முற்றிலும் உணராத தளபதி.

100 சதவீத அரசியல் செய்யும் தளபதி.

தலையெடுக்கத் தவிக்கும் மதவாதம் ..

எது வெல்லும்?

பணம் தான் வெல்லும் என்றாலும் , நம் மக்கள் மதவாதத்தை சற்று ஒதுக்கி வைப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் 2026 ல் தளபதியா ? தளபதியா என்று எழுதியிருக்கிறோம்.

பார்க்கலாம், மும்முனைப் போட்டியில் வெல்லப் போகும் முனை எது என்று?

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.