Categories
கருத்து குட்டி கதை தகவல்

நல்வாழ்க்கை வாழ..

ஒரு மனநல மருத்துவர் விளக்கிய சம்பவம்..
ஒரு சின்ன குழந்தையின் நடவடிக்கையில் பெரிய மாற்றம். அதீத கோபம். சரியாக சாப்பிடுவதில்லை, அப்பா அம்மாவின் மீது பெரிய வெறுப்பு.

இது ஏன் என்பது புரியாமல், அந்தக் குழந்தையின் தாய் தந்தை, அதை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அவரிடம் அந்த குழந்தை கூறிய விஷயங்கள் பெரும் அதிர்ச்சி.
“என் அம்மா எனக்குப் பிடிச்சதே செஞ்சு தரமாட்டாங்க, அக்காவுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் சமைப்பார்கள். எங்கள் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியில் எனக்கு பிடிச்ச சேனல் ஓடாது. அக்காவுக்கு எது பிடிக்குமோ அதுதான் ஓடும்“ இதுபோல இன்னும் நிறைய அக்கா சம்பந்தப்பட்ட புகார்கள்.

உண்மை என்னவென்றால் அவளது அக்காள் சமீபத்தில் வீட்டிலிருந்து விடுதிக்குச் சென்றவள். அங்கேயே தங்கி படிப்பவள். அதனால் அவள் ஊருக்கு வந்து போகும் சமயம் அவளுக்காக காட்டப்பட்ட பரிவும், முக்கியத்துவமும் இவளை பாதித்து விட்டது.
நம்ம மேல இவங்களுக்கு அன்பே இல்லை. என்ற மனநிலை ஆகிவிட்டது.

ஒருபோதும் ஒருவர் மீது வைத்த உண்மையான அன்பு மாறுவதில்லை.

சூழ்நிலை காரணமாக. அந்த முக்கியத்துவம் மாறும் என்பது அந்தப் பிஞ்சு நெஞ்சுக்கு எட்டவில்லை.

இதுவே இன்றைய சூழலில் பல பெரிய வளர்ந்த குழந்தைகளிடமும் நம்மால் காண முடிகிறது.

அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தில் 4 முதல் 7 குழந்தைகள் வரை இருந்த போதும் அந்த 7 குழந்தைகளிடையே பாகுபாடும் இருந்ததில்லை. தன் தாய், தந்தையின் மீதான மதிப்பிலும் குறை இருந்தது இல்லை.

ஏனென்றால் முதல் குழந்தைக்கு மூன்றாவது குழந்தை பிறக்கும் போதே, அதன்மீது தாயுள்ளம் கொண்ட அன்பு பிறந்து விடுகிறது.

ஒரு நல்ல புரிதல் இருந்தது. தாய் தகப்பனின் நிலையும், குடும்ப சூழலும் உணர்த்தப்பட்டு வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அவை.

முதல் குழந்தை இரண்டாவது குழந்தையைப் பார்த்தோ, நான்காவது குழந்தையைப் பார்த்தோ, உனக்கு இன்று புதுத்துணி கிடைத்திருக்கிறது ஆனால் எனக்கு இல்லை என்று பொறாமை கொண்டதில்லை. அந்தக்கால சூழ்நிலையோடு பக்குவமும் சேர்த்தே உணர்த்தப்பட்டிருக்கிறது பிள்ளைகளுக்கு.

ஆனால் இன்றைய காலத்தில், இதில் பெரிய மாறுதலை உணர முடிகிறது.
“எனக்கு இம்பார்ட்டனஸ் இல்ல.
என்னை யாரும் கண்டுகொள்வதில்லை” என்று குழந்தைப் பருவத்திலிருந்து விடலைப்பருவம் வரை, அவ்வளவு ஏன் வயதானவர்களும் கூட இந்த வார்த்தையை உணர்கிறார்கள்.

பவர் பாண்டி என்ற படத்தில், ராஜ்கிரண் தனது மகன் மீதான விரக்தியில் வீட்டை விட்டுக் கிளம்புவதும். பிறகு மகனின் தூய அன்பை உணர்வதும் என்ற கதையை நாம் பார்த்திருக்கிறோம்.

இதைப்போன்ற பிரச்சினை கணவன் மனைவிகளுக்கு இடையே மிக மிக அதிகம். உனக்கு நான் முக்கியமில்ல. எனக்காக நேரம் ஒதுக்கல. உன் நண்பர்கள் என்றால் உடனே ஓடி விடுகிறாய் என்றெல்லாம் வாதம் வரும்.

நன்கு யோசித்துப் பார்த்தால், அவர்களின் திருமண விழாவில் அந்த நண்பர்கள் எத்தனை பிராயசைப்பட்டு எத்தனை வேலைகள் செய்திருப்பார்கள்?

அவர்களுக்காக, ஒரு சில நேரம் ஒதுக்கி விட்டுப் போகட்டும் என்று மனைவியும், மனைவியின் வீட்டு உறவுகளுக்கு என்று சில நேரம் ஒதுக்குவதும் என்று பரஸ்பரம் அன்பு பரிமாறப்பட்டால் பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

முதலில் முக்கியத்துவம் வேறு அன்பு வேறு என்பதை உணர வேண்டும்.

அன்பு என்பது பசுவின் தூய பால் போன்றது.

இடையில் வியாபாரிகள் அதில் தண்ணீரைக் கலந்து விடுவதால் பசு மீது நாம் எவ்வாறு தவறு சொல்ல இயலாதோ, அதைப் போல வாழ்வாதாரத்திற்காக ஓடும் இந்த வாழ்வில், எனக்கு நேரம் ஒதுக்கவில்லை, என் மீது அன்பு காட்டவில்லை என்று குற்றம் சொல்வதை விடுத்து, கணிவோடு, இன்று ஒரு நாள் விடுப்பு எடுக்கலாமா?

வீட்டில் இருந்து சில நேரம் என்னோடு பேசலாமா என்ற ரீதியில் அதைக் கோரிக்கையாக வைத்து அவர்களிடம் அந்த அன்பைப் பெறுவது உசிதம்.

நம் வாழ்க்கை நம் கையில் தான் என்பதை உணர்ந்து, பக்குவமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லா நாளும் நன்னாள் தான்.

விட்டுக் கொடுத்தல் பண்பு சிறந்தால், நம்மை விட்டு எதுவும் போகாது.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.