ஒரு ஊரில் ஒரு சமையல்காரர் இருந்தார். அவர் விதவிதமாக சமையல் செய்து தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிபடுத்தினார்.
அவரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தது.
அதில் சில விமர்சனங்களும் வளர்ந்தன.
அந்த சமையல்காரர் ஏமாற்றுகிறார்.அவர் சமையலுக்கு வாங்கும் பொருட்களில் பலவற்றை முழுதாக உபயோகிக்காமல் கடையில் திருப்பிக் கொடுத்து அதிலும் பணம் சம்பாதிக்கிறார் என்று இன்னொரு சமையல்காரர் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தார்.
சரிப்பா அவரு நல்லா பிரியாணி செய்வாரு, நீ வந்தா என்ன செய்வ? வித்தியாசமா ஏதாவது செய்வியா என்று வாடிக்கையாளர்கள் கேட்டதற்கு, நானும் பிராயாணி செய்வேன் என்றார்.
ஏம்ப்பா, நீயும் பிரியாணி தான் கிண்டுவியா?
அவரு நல்லா வடை சுடுவாரு , நீ வித்தியாசமா என்ன செய்வ? என்று கேட்டால் நானும் நல்லா வடை சுடுவேன் என்றார்.
சரிப்பா, அவரு ஒரு கிலோ பிரியாணிக்கு இந்தப் பொருளெல்லாம் வாங்கி சமைக்கிறாரு, நீ என்ன பொருள் வாங்குவ? என்று கேட்டால் நானும் அதே பட்டை கரிமசாலா தான் வாங்குவேன் என்றார்.
அப்ப அவருக்கும் உனக்கும் என்னப்பா வித்தியாசம் என்று கேட்டால், நானும் நல்லா வடை சுடுவேன் , அவரும் நல்லா வடை சுடுவாரு.
எனக்கும் சமையல்காரனாக ஆசை வந்துவிட்டது.
என்னோடு பாத்திரம் கழுவும் முனிசா தலைமை சமையல்காரி ஆக வேண்டும், கரண்டியை கையில் பிடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையில் உள்ளது. எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்களேன் என்று கேட்கிறார்.
ஆக மொத்தம் அதே வடை தான்.
அந்த வடை இவரு வந்தா மட்டும் மசாலா வடையா இல்லாம, மக்ரூன் வடையாவா மாறப்போகுது?
பாப்போம் வாடிக்கையாளர் எந்த சமையல்காரரைத் தேர்வு செய்யப் போகிறார்கள்.
வடை எப்படி வரப்போகிறது என்று.
முக்கியமா பாத்திரம் கழுவுற முனிசா கரண்டிய கையில் எடுத்து சமையல்காரி ஆகும் காட்சி எல்லாம் நடக்குதா என்பது தான் ஆவல்.
வடை எப்படி இருந்தால் என்ன?பசியில் அதைக் கொத்தித்தின்னும் காகக் கூட்டம் போன்ற வாடிக்கையாளர்கள் இருக்கும் ஊரில் யார் சமைத்தால் என்ன?
சொல்ல முடியாது பாத்திரம் கழுவும் முனிசா வந்து பாயாசத்தில் உப்பை அள்ளிக் கொட்டினாலும் வித்தியாசமா நல்லா இருக்கு என்று சாப்பிட சில காகங்கள் இருக்கும் போது நல்ல சோறு சாப்பிட நினைக்கும் மனிதர்களுக்கும் அதே பாயாசம் தான்.
இது சும்மா ஒரு கற்பனை கதை.
இதை ஏதாவது அரசியல் கட்சிகளுக்கோ , அவர்களது தேர்தல் அறிக்கைகளுக்கோ சம்பந்தப்படுத்தினால் நிர்வாகம் பொறுப்பாகாது.




